வைணவத்தின் முழுமுதற் கடவுளான சிரீமன் நாராயணனின் பாதங்களைக் குறிப்பது திருமண் என்னும் திருநாமம் ஆகும். வைணவ ஆதார தத்துவம் நாராயணன் ஒருவனே பரமபுருசன். சீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பதாகும். திருமண்ணை சிரீசூர்ணம் என்றும் அழைக்கிறார்கள். சிரீசூர்ணம் மகாலட்சுமியின் அடையாளமாகும். இந்தத் திருமண் புனிதமான இடங்களிலிருந்து சேகரிக்கப்படுகிறது. எப்படி உவர் மண்ணானது நம் ஆடையினைத் தூய்மைப்படுத்துகிறதோ, அவ்வாறே திருமண்ணும் வைணவனின் உள்ளத்தைத் தூய்மையாக்குகிறது. வைணவத்தின் இரகசியத் தத்துவம் உணர்த்துவது என்னவெனில், ‘திருமண் சிரீமன் நாராயணனின் திருப்பாதங்கள் ஆகும். என்றாவது ஒரு நாள் உடம்பு மண்ணோடு மண்ணாகிப் போகும். எனவே சிரீமன் நாராயணனின் திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள்‘ என்று அறிவுறுத்துவது திருமண் காப்பாகும்.
வைணவப் பிரிவு வழக்கத்தில் வடகலை, தென்கலை என்ற இருவேறு பிரிவுகள் இருக்கின்றன. வடகலைப் பிரிவு வைணவத்தினர், மர்கட நியாயப்படி சிரீமன் நாராயணனைச் சரணாகதி அடைகின்றனர். பெருமாளை விடாப்பிடியாகப் பக்தன் பிடித்துக் கொள்ள வேண்டும். பிடித்துக் கொள்ளாவிடில் அவன் கருணை வைணவனுக்குக் கிடைப்பதில்லை. பிடித்துக்கொண்ட பின்னரே பெருமாளின் அருட்கரங்கள் அவர்களைக் காக்கின்றன என்பது வடகலை வைணவர்கள் நம்பிக்கை. இதே நம்பிக்கை தென்கலை வைணவர்களிடமும் உண்டு. இருப்பினும், திருமண் இட்டுக் கொள்வதில் "வடகலை", "தென்கலை" என இரண்டு யோக முறைகள் பின்பற்றப்படுகின்றன.
தென்கலைப் பிரிவில், பாதம் வைத்துப் திருமண் போடும் வழக்கம் இருக்கிறது. இதனை, தென்கலை நாமம் என்கின்றனர். வடகலைப் பிரிவில் பாதம் இல்லாமல் நெற்றியில் நேர்கோடு போடும் வழக்கம் இருக்கிறது. இதனை, வடகலை நாமம் என்கின்றனர்.
நாராயணனின் பனிரெண்டு பெயர்களைக் குறிக்கும் வகையில் பனிரெண்டு இடங்களில் திருமண் காப்பு இட்டுக் கொள்வது வைணவர்கள் நடைமுறையாக இருக்கிறது. அவை;
1. நெற்றி
2. மார்பு (மார்பு)
3. வயிறு (நாபி)
4. கழுத்து
5. வலது வயிற்றில்
6. வலது தோள்பட்டை
7. வலது கழுத்து
8. இடது வயிற்றில்
9. இடது தோள்பட்டை
10. இடது கழுத்து
11. பின்புறம் அடிமுதுகு
12. பின்புறம் பிடரி
”கேசவாய நம என்று நெற்றியிலும்
நாராயணாய நம என்று நாபியிலும்
மாதவாய நம என்று மார்பிலும்
கோவிந்தாய நம என்று நெஞ்சிலும்
விஷ்ணுவே நம என்று வலது மார்பிலும்
மதுசூதனாய நம என்று வலது புயத்திலும்
திரிவிக்ரமாய நம என்று வலது தோளிலும்
வாமனாய நம என்று இடது நாபியிலும்
ஸ்ரீதராய நம என்று இடது புயத்திலும்
ஹ்ருஷீகேசாய நம என்று இடது தோளிலும்
பத்மநாபாய நம என்று அடிமுதுகிலும்
தாமோதராய நம என்று பிடரியிலும்”
திருமண் தரித்துக் கொள்ள வேண்டும்.
திருமண் தரிக்கும் போதும், ஸ்ரீசூர்ணமும் தரிக்கும் போதும் மேற்காணும் பெருமாளின் பன்னிரண்டு நாமங்களைச் சொல்லிக் கொள்ள வேண்டுமென்கின்றனர்.