தமிழர்கள் சிறப்பாக வழிபடும் தெய்வங்களான முருகன், மாரியம்மன் மற்றும் ஐயனார் போன்ற தெய்வ வழிபாட்டின் போது அலகு குத்துதல் எனும் நேர்த்திக் கடன் செய்யப்படுகிறது.
கோயில் திருவிழாவின் போது, பக்தர்கள் சிலர் தங்களது நாக்கு அல்லது கன்னங்களில் வேறுபட்ட அளவிலான வேல்களைக் குத்திக் கொண்டு கோவிலை நோக்கி ஊர்வலமாகச் செல்வார்கள். இச்செயல் அலகு குத்துதல் எனப்படுகிறது. சில கோயிற் திருவிழாக்களில் பால்செம்பு, காவடி போன்றன எடுப்போர் தம் வாயில் கூரிய உலோக ஊசிகளால் குத்திக் கொள்ளுவதும் உண்டு.
இந்த அலகு குத்துதல் காவடி, பால் செம்பு எடுக்கு முன்னர் பூசை செய்து தீபாரதனை காட்டிய பின் நடைபெறுகிறது. பக்தரின் வாயில் ஒரு கன்னத்திலிருந்து மற்றொரு கன்னத்தை நோக்கி சிறிய ஊசியால் குத்தி விடுவார்கள். ஊசியின் ஒரு முனை திரிசூலம் அல்லது வேல் போல் இருக்கும். மற்றொரு முனையை ஒரு கன்னத்தில் குத்தி, மற்றக் கன்னத்தின் ஊடாக எடுப்பார்கள். அந்த முனையில் வேல் அல்லது திரிசூலம் சொருகுவார்கள்.
* நாக்கு அலகு - நாக்கை வெளியே எடுத்து மேலிருந்து கீழ் நோக்கி அலகு குத்துதல். இதனை தால் அலகு குத்துதல் என்றும் சொல்கின்றனர்.
* முதுகு அலகு
* காவடி அலகு
* வயிற்று அலகு
இவ்வாறு உடல் உறுப்புகளில் அலகு குத்தும் இடத்தை வைத்து அலகு குத்துதல் வகைப்படுத்தப்படுகிறது.
* வேல் அலகு
* மயில் அலகு
* வாள் அலகு
* பறவைக்காவடி அலகு
* தொட்டில் அலகு
* குதிரை அலகு
என்று சில அலகுகள் குத்தப்படும் பொருட்களை வைத்தும் வகைப்படுத்தப்படுகின்றன.
அலகு குத்துதல் என்பது உடலை வருத்தும் நேர்த்திக் கடன்கள் வகையைச் சேர்ந்தது. இதேப் போன்று உடலை வருத்திச் செய்யும் நேர்த்திக் கடன்களில், தீ மிதித்தல், தீச்சட்டி ஏந்துதல், காவடித் தூக்கி ஆடுதல், பால்குடம் எடுத்தல், பூங்கரகம் தூக்கி வருதல்,கோயிலைச் சுற்றி அங்கப் பிரதட்சணம் செய்தல் மற்றும் மொட்டை அடித்தல் போன்ற நேர்த்திக்கடன்களும் செய்யப்படுகின்றன.
பிற பெருந்தெய்வ வழிபாடுகளில் இந்த நேர்த்திக்கடன்கள் செய்யப்படுவதில்லை.