இந்து தொன்மவியலில் ஐந்து புராணப் பெண்கள் பஞ்சகன்னிகைகள் என்று அழைக்கப் பெறுகின்றார்கள். இவர்களே மிகச்சிறந்த தர்மப்பத்தினிகளாகவும், இல்லற வழிகாட்டிகளாகவும் குறிக்கப் பெறுகிறார்கள்.
1. அகலிகை
திருமாலின் மோகினி அவதாரத்தினை அறிந்த பிரம்மன், மோகினையைப் போன்ற அழகுடைய பெண்ணைப் படைக்க எண்ணினார். அழகில் எவருக்கும் ஈடு இணை இல்லாத அகலிகையை அவர் தோற்றுவித்தார். பின், அவளை கௌதம மகரிஷிக்குத் திருமணம் செய்து வைத்தார். அழகில் மிக உயர்ந்தவளான அகலிகை மீது இந்திரன் மோகம் கொண்டார். அதனால், இந்திரன் சேவலாக மாறி கூவி கௌதமரை ஆற்றங்கரைக்கு அனுப்பி வைத்து அகலிகையை வன்புணர்வு செய்தார். அந்நேரம் குடிலுக்குத் திரும்பிய கௌதமர், அகலிகையைக் கல்லாக மாறச் சாபமிட்டார். இவ்வாறு கல்லாக மாறிய அகலிகை, ராமனின் கால் பட்ட பின்பு மீண்டும் மனித உருவம் பெற்றதாக இந்து சமய நூல்கள் சொல்கின்றன.
2. துரோபதை
மகாபாரதத்தின் கதை நாயகியான துரோபதை (திரௌபதி) பாண்டவர்களான தர்மன் (யுதிஷ்டிரன்), பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகியோருக்குப் பொதுவான மனைவியாவர். கௌரவர்களின் அரண்மனையில் தருமனும் சகுனியும் ஆடிய சூதாட்டத்தில், தருமன் நாடு, நகரம், அரண்மனை என அனைத்தையும் இழந்த நிலையில், கடைசியாக திரௌபதியை வைத்துச் சூதாடினான். அதில் தருமன் தோல்வியடைந்ததால், திரௌபதி கௌரவர்களின் அரசனான துரியோதனால் ஆடை களையப் பெற்றார். அதனால் அவமானமடைந்த திரௌபதி கௌரவர்களை அழித்து முடித்த பின்பே தன் கூந்தலை முடிவது என்று சபதமேற்றார். இதனைப் பாஞ்சாலி சபதம் என்பர். இதுவே பாரதப் போருக்கு மூலமாக அமைந்தது.
3. சீதை
இராமயண இதிகாசத்தின் நாயகி சீதை. மிதிலை மன்னனான ஜனகர், குழந்தை சீதையை பூமியில் புதைந்திருந்த பெட்டியிலிருந்து கண்டெடுத்து வளர்த்தார். இதனால் சீதை பூமாதேவியின் புதல்வியாகக் கருதப்படுகிறார். சீதை வயதுக்கு வந்தவுடன் அவரை மணமுடித்துக் கொடுக்க சுயம்வரம் நடத்திய ஜனகர், தனக்கு சிவனால் வழங்கப்பட்ட வில்லில் வெற்றியுடன் நாண் ஏற்றுபவருக்கு சீதையைத் திருமணம் செய்து வைப்பதாக அறிவித்தார். இந்த சுயம்வரத்தில் இராமர் உட்பட பல ராஜகுமாரர்கள் கலந்து கொண்டனர். எவராலும் அசைக்கக்கூட முடியாத வில்லை இராமர் நாணேற்ற முற்படும் போது பெரும் ஓசையுடன் வில் முறிந்தே விட்டது. இதனால் சீதை இராமரின் மனைவியானார்.
இராமனுடன் வனவாசம் சென்ற சீதையை, இராவணன் கவர்ந்து சென்றான். அவரை மீட்க இராமன், அனுமன் மற்றும் வானரப்படையுடன் இலங்கை சென்றார். இராவணனுடன் போரிட்டு சீதையை மீட்டார். அதன்பின்பு, இராவணனுடன் இருந்த சீதையின் கற்பில் சந்தேகம் கொண்டு இலக்குவனை விட்டுச் சீதையைக் காட்டில் விடச் செய்தார். காட்டில் சீதை, லவன், குசன் என்ற இரு மைந்தர்களைப் பெற்றார். அதன் பின்பு, அவர்கள் இருவரையும் இராமரிடம் ஒப்படைத்து பூமாதேவியைச் சரணடைந்தார்.
4. தாரை
தாரை இராமாயணப் பாத்திரமாவாள். இவள் வானர அரசன் வாலியின் மனைவியாகத் திகழ்ந்தவள்.வாலியை,வாலியின் சகோதரனான சுக்ரீவனேக் கொன்று அரசைக் கைப்பற்றியதோடு தாரையையும் தன் மனைவியாக்கினான். அவள் பேரறிவு நிறைந்தவள், எதிர்வு கூறும் ஆற்றல் வாய்ந்தவள், தன்னம்பிக்கையும் வாக்குச் சாதுரியமும் நிறைந்தவள் என்பதற்கு இராமாயணமே பல இடங்களிலும் சான்றாவதால், அவள் பெண்கள் எப்போதும் எண்ணிக் கொண்டிருக்க வேண்டிய பஞ்சகன்னிகைகளுள் ஒருவராக விளங்குகிறாள்.
5. மண்டோதரி
மண்டோதரி இராவணனின் மனைவி. பேரழகு படைத்தவள். மயனின் மகள். இலங்கைக்குச் சென்ற அனுமன், முதலில் இவளைப் பார்த்து சீதை என்றே நினைத்து விடுகிறார். இந்திரசித்தன் இவளது மகன். சம்சுகிருதத்தில் மண்டோதரி என்ற சொல்லுக்கு மெல்லிய வயிறாள் என்று பொருள். இராவணன் சீதையைக் கவர்ந்து வந்தது அறத்துக்குப் புறம்பானது என ராவணனுக்கு அறிவுறுத்தியவள். ராமனுடன் பகை வேண்டாம், சீதையை விடுவித்து அவனுடன் சேர்த்து விடுங்கள் என்று ராவணனுக்குப் பல முறை சுட்டிக் காட்டியவள். தன் கணவனான இராவணனைத் தூய்மைப்படுத்தும் பணியில் இறங்கிய முதல் பதிவிரதை. அவளது கணவன் இறந்த பின்பு, அவனது நினைவிலேயே வாழ்ந்து சிறப்பு பெற்றவள்.
பஞ்ச கன்னிகைகளில் அகலிகை, சீதை, தாரை மற்றும் மண்டோதரி ஆகியோர் இராமயாண காலத்தில் வாழ்ந்தவர்கள். துரோபதை (திரௌபதி) மகாபாரதக் காலத்தில் வாழ்ந்தவர்.