வைணவர்கள் ஆகார நியமத்தைக் கவனமாகக் கடைப்பிடிக்கின்றனர். உணவு தூய்மை இல்லாவிடில் மனம் தெளிவடைவதில்லை. ஆகவே, உணவு பற்றிய கவனம் மிகவும் முக்கியமானதாகின்றது. ஒருவன் பிறப்பினால் சத்துவம், இராசசம் மற்றும் தாமசம் குணங்களையுடையவனாக இருந்தாலும், அவன் நன்னெறி அநுட்டானத்தை மேற்கொண்டு சத்துவக் குணத்தை மேலாகக் கொண்ட உணவுகளைப் புசித்து வருவானாகில் விரைவில் நல்வழியை அடைந்து எம்பெருமானின் கருணைக்குப் பாத்திரமாவான் என்பது உறுதி. இதனை நம் முன்னோர்கள் கடைப்பிடித்ததனால் உடற்கட்டு, உடல்நலம், துணிவு, மனவுறுதி, பக்தி முதலிய பண்புகளை மிகுதியாகப் பெற்றிருந்தனர். இங்ஙனமின்றி இக்காலத்தவர் தான்றோன்றித்தனமாய்ச் சுவைக்கும் போகத்திற்கும் துணையான உணவு வகைகளை உண்டு, தம் முன்னோர்கட்கிருந்த எல்லாவித நலன்களையும் இழந்து, அற்ப ஆயுள் உள்ளவர்களாய் இருப்பது கண்கூடு. ஆகவே, நம் முன்னோர்கள் உண்டு வந்த முறைப்படி சத்துவகுண உணவுப் பொருள்களை மிகுதியாகவும், இராசசகுண உணவுப்பொருள்களைக் குறைத்தும், தாமசகுன உணவுப்பொருள்களை அறவே நீக்கியும் உணவு முறைகளைக் கடைப்பிடித்தல் அவசியம்.
1. சத்துவகுணப்பொருள்கள்
எல்லாவிதப் பச்சரிசி, தினை, உளுந்து, பச்சைப்பயிறு, பொரி, அவல், சுக்கு, இஞ்சி, மிளகு, சீரகம், வெந்தயம், வெல்லம், சர்க்கரை, கற்கண்டு, தேன், திராட்சைப்பழம், பேரீச்சம்பழம், சாதிக்காய், சாதிப்பத்திரி, ஏல அரிசி, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, வாதுமை, நல்லெண்ணெய், தேங்காய், தேங்காய் எண்ணெய், பசும்பால், தயிர், வெண்ணெய், நெய், கொத்தவரைக்காய், பாகற்காய், வெள்ளரிக்காய், வாழைக்காய், பலாக்காய், விளாம்பழம், இலந்தைக்காய், பழம், களாக்காய், மாங்காய், மணத்தக்காளிக்காய், சுக்காங்காய், நாரத்தங்காய், பழம், சுண்டைக்காய், நெல்லிக்காய், சேப்பங்கிழங்கு, சருக்கரை வள்ளிக்கிழங்கு,சேப்பங்கீரை, வெண்கீரை, செங்கீரை, வாழைத் தண்டு, பிரண்டை, கறிவேப்பிலை, தூதுவளை, பசுமுள்ளை, கொத்தமல்லிமுளை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, அகத்திக்கீரைகள், அனைத்து வகை வாழைப்பழங்கள், பலாப்பழம், மாம்பழம், நாவற்பழம், கிச்சிலிப்பழம், கொய்யாப்பழம், இளநீர், பன்னீர் ஆகியவை.
2. இராசசகுணப்பொருள்கள்
சவ்வரிசி, துவரை, கடலை, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, மஞ்சள், பெருங்காயம், சீரகம், புளி, மிளகாய், உப்பு, கடுகு, கொத்தமல்லி (தனியா), இலவங்கம், இலவங்கப்பட்டை, கசகசா, பாக்கு, ஆட்டுப்பால், புடலங்காய், வெண்டைக்காய், பூசணிக்காய், அத்திக்காய், புளியங்காய், மரிமாங்காய், எலுமிச்சங்காய், பூமி சர்க்கரைக் கிழங்கு, கருணைக்கிழங்கு, வெற்றிலை, வள்ளிக்கிழங்கு, கொட்டிக்கிழங்கு, புளியன் மறியன் கொழுந்துகள், வெற்றிலை, புதினா, வாழைப்பூ, ஆவிரம்பூ, சீமை அத்திப்பழம், மாதுளம்பழம், அன்னாசிப்பழம் ஆகியவை.
3. தாமசகுணப் பொருள்கள்
புழுங்கலரிசி, கேழ்வரகு, வரகு, கம்பு, சோளம், பட்டாணி, மொச்சை, பனிப்பயிறு, கொள்ளு, பனை, ஈச்சை, தென்னை வெல்லங்கள், பனங்கற்கண்டு, எருமைப்பால் முதலானவை. கத்திரிக்காய், அவரைக்காய், கீரை, பூண்டு, முதல் இரண்டு வகைகளில் சொல்லாத கிழங்குகள் (எடுத்துக்காட்டுகள்: உருளை, மரவள்ளிக்கிழங்கு) வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மற்றையக் கீரை வகைகள், சீதாப்பழம், பனம்பழம், நுங்கு, ஆமணக்கெண்ணெய்.