வழிபாட்டுக்காகக் கோயில்களுக்குச் செல்லும் பக்தர்கள் அங்கிருக்கும் யானைகளிடம் ஆசி பெறுவது வழக்கமாக இருக்கிறது. யானையிடம் ஆசி பெறுவது அவசியமா? என்று நமக்குள் சிறு சந்தேகம் எழுவது இயல்பே!
மூலிகைத் தாவரங்களை மட்டும் சாப்பிட்டு, விலங்குகளில் பலமுள்ளதாக இருக்கும் உயிரினம் யானை. யானை பல்வேறு தெய்வீக நிலைகள் பொருந்தியது. உலகில் வாழும் உயிரினங்களில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிக்கும் தன்மை யானைக்கு மட்டுமே உண்டு.
நமக்கு இரு நாசித்துவாரங்கள் இருந்த போதிலும், நமுடைய ஒரு நாசித் துவாரம் வழியாகவே எப்போதும் சுவாசம் நடைபெறும். தினமும் 24 நிமிடங்களுக்கு ஒருமுறை நம்முடைய சுவாசம் ஒரு நாசித் துவாரத்திலிருந்து இன்னொரு நாசித் துவாரத்திற்கு மாறிக் கொண்டே இருக்கும். இதற்கு சூரியக்கலை, சந்திரக்கலை என்ற பெயரும் உண்டு. வலது நாசி வழியாகச் சுவாசம் நடைபெறும் போது சூரியக்கலை என்றும், இடது நாசி வழியாகச் சுவாசம் நடைபெறும் போது, சந்திரக்கலை என்றும் பெயர். சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் மற்றும் முறைப்படுத்தும் ஆன்மீக முயற்சிகளுக்கு சரகலை என்று பெயர்.
பிராணயாமம், வாசியோகம் போன்றவைகளும் நமது சுவாசத்தைத் தெய்வீகத் தன்மைக்கு முன்னேற்றம் அடைய வைக்கும் ஆன்மீகப் பயிற்சி முறைகளாகும். யோகப் பயிற்சி செய்பவர்கள் வாசியோகம் அல்லது பிராணாயாமத்தில் மேல் நிலையை எட்டியவர்கள் எப்போதும் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் சுவாசிக்கும் திறமையைப் பெற்று விடுவார்கள். இதற்கு சுழுமுனை வாசி யோகம் என்று பெயர். இரண்டு நாசிகளாலும் சதாசர்வ காலமும் சுவாசிக்கும் தன்மையை பெற்றவர்கள் ஞானிகளாகின்றார்கள்.
ஞானிகளிடம் ஆசி பெற்றால் நன்மை நடைபெறுவது போலவே, இயற்கையாகவே சுழுமுனை வாசியோகம் உள்ள யானை அதன் தும்பிக்கையை தலையில் வைத்து ஆசி செய்வதால், யானையிடம் ஆசி பெற்றவர்களுக்கு, அவர்களின் மூச்சுக்காற்று சீராகச் செயல்பட்டு மனதில் தீய எண்ணம் வராமல் தடுத்து நல்ல சிந்தனைகளை வளரச் செய்யும். நல்ல சிந்தனைகள் இறைவனைச் சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும். வழக்கத்தைக் கொடுக்கும். தர்ம சிந்தனைகள் வளரும். மனதில் அன்பு நிறைந்து இருக்கும்.
எப்போதும் இறைவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு எந்நாளும் துன்பம் இல்லை என்பதுதான், யானையிடம் ஆசி வாங்குவதன் முதன்மை நோக்கமாகும்.