ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சந்நிதிக்கு வெளியே ஐந்து குழி, மூன்று வாசல் இருக்கும். அதற்கான காரணமென்ன தெரியுமா?
இந்த இடத்தில் தாயார் தன் ஐந்து விரல்களை வைத்துப் பெருமாள் தாயார் சன்னதி நோக்கி எழுந்தருள்வதை ஆவலுடன் பார்க்கிறாள் எனப் பலர் கூறுவர்.
ஆனால் இந்த இடத்தின் அடிப்படை நோக்கம் வேறு:
1. ஸ்ரீரங்கம் தாயார் படி தாண்டாப் பத்தினி. எனவே வெளியே வந்து பார்த்திருக்கச் சாத்தியமில்லை.
2. பெருமாள் இவ்வழியில் தாயார் சன்னதிக்கு வருவது வழக்கம் இல்லை. ஒரு நாள் மட்டுமே இந்த வழியாக எழுந்தருள்வார். மற்ற நேரங்களில் ஆழ்வான் திருசுற்று (5வது பிரகாரம்) வழியாகத்தான் எழுந்தருள்வார்.
இந்த ஐந்து குழி அர்த்த பஞ்சக ஞானத்தைக் குறிக்கும். மூன்று வாசல் தத்வத்ரயத்தைக் குறிப்பதாகும். தத்வத்ரயம் என்பது சித், அசித், ஈஸ்வர தத்துவம்.
அர்த்தபஞ்சகம் என்பது
1. அடையப்படும் பிரம்மம்
2. அடையும் ஜீவன்
3. அடையும் வழி
4. அடைவதால் ஏற்படும் பயன்
5. அடைவதற்கு உள்ள தடைகள்
ஆகியவற்றைக் குறிக்கும்.
இந்த ஐந்து குழிகளில் ஐந்து விரல்களை வைத்துத் தெற்குப் பக்கம் பார்த்தால் பரமபதவாசல் தெரியும்.
ஒரு ஜீவாத்மா, பரமாத்மாவை இந்தத் தத்துவங்களைக் கொண்டு அடைந்தால் அந்த ஜீவாத்மாவுக்குப் பரமபதம் நிச்சயம் என்பதுதான் இதன் பொருள்.