இந்து சமயத்தில் ‘கிரஹஸ்தம்’ என்பது மனித வாழ்வில் இரண்டாம் நிலையாகும். இல்லற வாழ்வில் ஈடுபட்டு அறம் பிறழாமல் தானதர்மங்களைச் செய்து வாழ்தல், மக்களைப் பெற்றெடுத்து கல்வி புகட்டி, நன்னிலை அடையச் செய்தல். அவர்களுக்கு மணம் செய்வித்து நல்வாழ்வு வாழச் செய்வதுமான காலம். இருபத்தைந்து வயதுக்கு மேற்பட்டு ஐம்பது வயதுக்கு உட்பட்ட காலத்தில் இவைகளை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
ஒரு கிரஹஸ்தன் அறவழியில் பணம் ஈட்டி, இல்லறத்தை நல்லறமாக நடத்த வேண்டும். இவர்கள் பஞ்ச மகா யக்ஞங்கள் செய்வது சிறந்தது என இந்து சமயம் கூறுகிறது.
1. தேவ யக்ஞம் - மந்திரங்கள் ஓதுவது. வேதங்கள் ஓதி யாகம் வளர்த்து தேவர்களுக்கு காணிக்கை செய்வது.
2. ரிசி யக்ஞம் - கீதை, திருமுறை, திருக்குறள் போன்ற மகான்கள் பாடிய தெய்வீக நூல்களை பாராயணம் செய்வது.
3. பித்ரு யக்ஞம் - தர்ப்பணம் அல்லது நீத்தார்களுக்கு காணிக்கை வழங்குதல். மூதாதைர்களுக்கு திதி கொடுப்பது.
4. அதிதி யக்ஞம் - விருந்தாளிகளுக்கு அமுது படைத்து உபசரிப்பது. விருந்தோம்பல்.
5. பூத யக்ஞம் - பசுக்கள், காகங்கள் அல்லது மற்ற விலங்குகளுக்கு உணவு வழங்குதல்.