தீப வழிபாடு என்பது ஒரு வீட்டினுடைய இருளை நீக்கி, லட்சுமி கடாட்சத்தை கொண்டு வரும். வீட்டில் காலையும், மாலையும் விளக்கேற்றுவது நடைமுறையில் இருப்பதுதான். இன்னும் சிலர், வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றுவதுடன் வீட்டு வாசலிலும், மாலை வேளையில் விளக்கேற்றுவார்கள். இது வீட்டிற்கு மகாலட்சுமியை வரவழைக்கும்.
நாம் செய்த கர்மவினைப் பலனை நாம் அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்பது விதி. சாஸ்திரமும் அதைத்தான் சொல்கிறது. கர்மவினையால் உங்களுக்கு உண்டாகக்கூடிய கஷ்டங்களை, அந்தக் கஷ்டத்தின் தாக்கத்தினை, கஷ்டத்தினால் வரும் பாதிப்பினை, ஓரளவிற்குக் குறைக்கக்கூடிய சக்தி இந்தப் பரிகாரங்களுக்கு உண்டு. அதிலும் குறிப்பிட்டத் திரியைக் கொண்டு விளக்கேற்றுவதும், வழிபடுவதும் கூடுதல் பலன்களைத் தந்தருளும்.
தாமரைத் தண்டு திரி
மகாலட்சுமி வாசம் செய்யும் தாமரைப்பூவில் இருந்து எடுக்கப்படும் தாமரைத்தண்டு திரியில் ஏற்றக்கூடிய தீபத்திற்கு, வறுமையை விரட்டி அழிக்கக்கூடிய சக்தி அதிகமாகவே உள்ளது. தாமரைப்பூத்தண்டினைச் சிறிதாக உடைக்கும் போது அதில் நார் போல் நூல் வரும். அந்த நூலை திரியாக மாற்றி விளக்கேற்றுவது சிறப்பு. தாமரைத்திரியினை விளக்கு வழிபாட்டிற்காகப் பயன்படுத்தினால் முன்வினைக் கர்ம பாவங்கள் நீங்கும். மறுபிறப்பற்ற நிலை உருவாகும். இந்தத் தாமரைத் தண்டுத் திரியை, காமாட்சி விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றியோ அல்லது நல்லெண்ணெய்க்கு பதிலாக சுத்தமான பசுநெய் கிடைக்கும் பட்சத்தில், பசுநெய் ஊற்றியோ, தாமரைத் தண்டு திரி சேர்த்து விளக்கு ஏற்றினால், வீட்டில் வறுமை என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது. பணவரவு இருந்து கொண்டே இருக்கும். முன்வினை பாவங்கள் யாவும் நீங்கும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் மதிப்பும், மரியாதையும் கூடும். புகழும், கௌரவமும் கிடைத்து, பதவி உயர்வுடன் திகழலாம்.
விளக்கேற்றும் முறை
தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய்யை ஊற்றிய பிறகே திரியை வைக்க வேண்டும். விளக்கில் எண்ணெய் விட்ட பிறகு குறைந்தபட்சம் விளக்கில் இரண்டு திரிகளாவது போட்டு ஏற்றுவது நல்லது. இரண்டு திரிகளின் நுனிகளை இணைத்து, அதை நன்றாக முறுக்கி தீபமேற்றுவது உன்னதமான வாழ்வுக்கு அடித்தளமிடும். கிழக்குத் திசையை நோக்கித் திரி ஏற்றினால், பலன்கள் அனைத்தும் முழுமையாகக் கிடைக்கும்.