வேதவியாசர் அருளிய பாகவத புராணத்தில் கலியுகத்தைப் பற்றிய சில குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. இக்குறிப்புகள் தற்போது சரியாக இருக்கிறதா? என்று பாருங்கள்.
1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும். (பாகவத புராணம் 12.2.1)
2. கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும். மற்றபடி ஒருவனின் முறையான பழக்க வழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை. மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும். (பாகவத புராணம் 12.2.2)
3. ஆண்களும் பெண்களும் வெறும் உடலுறவுக்காக மட்டுமே தொடர்பு கொண்டிருப்பார்கள். தொழில்துறைகளில் வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும். (பாகவத புராணம் 12.2.36)
4. ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள். கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலி குருக்களை நம்பி வழிதவறிச் செல்வார்கள். வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார்.(பாகவத புராணம் 12.2.4)
5. கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் (பணம்) இல்லாதவனைத் தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர். குளிப்பதாலும் அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமே ஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வான். (பாகவத புராணம் 12.2.5)
6. அலங்காரம் செய்தவனெல்லாம் அழகானவன் என்றறியப்படுவான். முரட்டுத்தனமான பேச்சு உண்மை என்று எளிதில் நம்பப்படும். வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். பல மதங்கள் ஆட்களைச் சேர்த்துக் கொள்வதையும் பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும். (பாகவத புராணம் 12.2.6)
7. உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர். தன் சமூகத்தினிடையே தன்னைப் பலமானவன் என்று காட்டிக் கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான். (பாகவத புராணம் 12.2.7)
8. ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும். மேலும், அரசின் அலட்சியப் போக்கினால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள். கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகித் துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக் கொள்வார்கள். (பாகவத புராணம் 12.2.9)
9. கடுங்குளிர், புயல், கடும் வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கைப் பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள். இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங்களிலும் சிக்கிக் கொள்வார்கள். (பாகவத புராணம் 12.2.10)
10. கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 50 ஆண்டுகளாக குறையும். (பாகவத புராணம் 12.2.11)
11. தன்னை ஊட்டி வளர்த்தப் பெற்றோர்களை இறுதிக் காலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான். (பாகவத புராணம் 12.3.42)
12. பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான். நட்பு என்ற உயரிய பண்பைப் போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான். (பாகவத புராணம் 12.3.41)
13. வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே தானம் அளிப்பார்கள். தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள். தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்மப் பாதைக்கு இழுத்துச் செல்வார்கள். (பாகவத புராணம் 12.3.38)
14. தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில் தனக்கு இத்தனைக் காலமாக உழைத்துத் தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான். இத்தனைக் காலம் பால் கொடுத்த பசு பால் கொடுப்பது குறைந்துவிட்டால் அப்பசுக்களும் கொல்லப்படும். நன்றிக் கடன் மறக்கப்படும். (பாகவத புராணம் 12.3.36)
15. நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர்; வேதங்கள் கயவர்களால் தங்கள் சுயநல கோட்பாடுகளைப் பரப்ப பொய்யான முறையில் மொழிப்பெயர்க்கப்படும். அரசியல்வாதிகள் மக்களை மெல்ல மெல்லப் பல விதமாகக் கொடுமை செய்வார்கள். போலி ஆச்சாரியர்கள் தோன்றி பக்தர்களைப் பயன்படுத்தித் தங்கள் வயிற்றையும் காமத்தையும் பூர்த்தி செய்து கொள்வார்கள். (பாகவத புராணம் 12.3.32)