பாஞ்சசன்யம் அல்லது பாஞ்சன்னிபம் என்பது திருமாலுடைய சங்கின் பெயராகும். இந்தச் சங்கானது கடலில் கிடைக்கும் வலம்புரிச் சங்கின் வகையைச் சார்ந்தாக கருதப்பெறுகிறது. ஆழ்வார்களில் ஒருவரான பொய்கையாழ்வார் இந்தச் சங்கின் அம்சமாக கருதப் பெறுகிறார். பாஞ்சசன்யம் சங்காயுதம் என்றும், பொதுவாக சங்கு என்ற பெயரிலும் அறியப் பெறுகிறது.
தமக்கு வில்வித்தை கற்றுத்தந்த 'சாந்தீபனி' முனிவரின் மகனை மீட்க கடலில் வாழ்ந்த 'பாஞ்சஜன்யன்' என்ற அசுரனை ஸ்ரீகிருஷ்ணர் அழித்தார். அசுரன் இறக்கும் வேளையில் கிருஷ்ணரைப் பணிந்த அந்த அரக்கனின் வேண்டுகோளின்படி, அவனது சாம்பலைத் திரட்டி சங்காக மாற்றி அவனது பெயராலேயே ஏந்திக் கொண்டார் என்று பாகவத புராணம் கூறுகிறது.
இந்த சங்கு பாஞ்சன் என்ற அசுரனிடம் இருந்ததாகவும், திருமால் அவனை போரில் வென்று சங்கினை பெற்றுக் கொண்டதால் பாஞ்சசன்யம் என்று பெயர் வந்தது. பஞ்ச இந்திரியங்களை அடக்குவதைக் குறிக்கவும் இப்பெயர் வழங்கப்படலாயிற்று என்றும் சொல்வதுண்டு.
அமிர்தம் வேண்டி தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது ,வெளிவந்த பதினாறு வகை தெய்வீகப் பொருட்களில் இதுவும் ஒன்று என்றும் சொல்லபடுவது உண்டு. மகாபாரதக் கதையில் குருகுல வாசம் முடிந்ததும் குருநாதர் சாந்திபனிடம் குருதட்சணையாக என்ன வேண்டும்? என்று கிருஷ்ணன் வினவிய போது,குரு தன் ஒரே மகனை பஞ்சஜணன் என்ற அரக்கன் கடத்தி கடலுக்கு அடியில் வைத்திருபதாகவும் ,அவனை மீட்டுக்கு கொடுக்குமாறும் கேட்டார். கிருஷ்ணரும் அந்த அரக்கனை வென்று அந்த சங்கு வடிவத்தை வைத்துக்கொண்டதாக மகாபாரதம் கூறுகிறது.
தலைச்சங்க நாண்மதியம் என்னும் திருத்தலத்தில் இறைவனின் சங்கு மிளிர்ந்ததைக் கண்டு வியந்த திருமங்கை ஆழ்வார் அச்சங்கின் திருவழகைக் கண்டு, வியந்து அத்திருத்தலத்தை குறித்து பாசுரம் பாடினார்.