சபரிமலை செல்பவர்கள் யாத்திரையின் பல முக்கிய அங்கங்களான மாலையணியும் காலம், யாத்திரை செல்லும் காலம், இருமுடி, புனித இடங்கள் ஆகியவற்றின் உட்பொருளை உணர வேண்டும்.
ஐயப்பப் பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் மாலையணிந்து, மார்கழி இறுதி வரை விரதம் கடைப்பிடிப்பது ஏன்?
பந்தள மன்னர் கார்த்திகை முதல் நாளில், சபரி மலையில் ஐயப்பன் கோயிலைக் கட்டத் தொடங்கினார். கோயில் கட்டுமானப் பணிகள் முடிந்து மார்கழிக் கடைசி நாளன்று, பரசுராமரால் வடிக்கப்பட்ட ஐயப்பனின் சிலையைப் பந்தள மன்னர் தமது கையால் நிறுவினார். இந்த இரு நாட்களுக்கும் இடைப்பட்டக் காலத்தில் ஐயப்பப் பக்தர்கள் விரதமிருப்பதே பயன் தரும்.
ஐயப்பப் பக்தர்கள் தேங்காயில் நெய் கொண்டு செல்வது ஏன்?
முக்கண் உடைய தேங்காய் சிவனின் வடிவம், பசு நெய் விஷ்ணுவின் வடிவம். தேங்காயில் பசு நெய்யை நிரப்புவது சிவ - விஷ்ணுவின் ஒன்றிணைவதைக் குறிக்கிறது. ஐயப்பன் சைவ - வைஷ்ணவ சமயக் கடவுளாக இருக்கிறார் என்பதை வலியுறுத்தவே ஐயப்பன் அபிஷேகத்திற்கான நெய்யைத் தேங்காயில் நிரப்பி எடுத்துச் செல்கின்றனர்.
ஐயப்பப் பக்தர்கள் கோயிலுக்கு இருமுடி கொண்டு செல்வது ஏன்?
இருமுடியின் முன்முடியில் இறைவனின் அபிஷேகம் ஆராதனை, நைவேத்தியம் ஆகியவற்றிற்கான பொருட்களும், பின்முடியில் பக்தனுக்குத் தேவையான உணவுப் பொருட்களும் இருக்கும். இறைவனை நெருங்க நெருங்கப் பின்முடியில் பக்தனுக்குத் தேவையான பொருட்கள் குறைந்து வரும். கோயிலை அடைந்ததும் வழிபாட்டுப் பொருள்கள் மட்டுமே இருக்கும். தரிசனம் செய்து திரும்பும் போது பிரசாதம் ஒன்றே இருமுடியில் இருக்கும். இறைவனை நெருங்க நெருங்க நம்முடையவை யாவும் குறைந்து வரும்; அவரை அடைந்த பின் அவரிடமிருந்து நாம் பெறுவது அவரது அருள் பிரசாதம் ஒன்றே என்பதை உணர்த்துவதுதான் இருமுடியின் தத்துவம்.
பேட்டைத்துள்ளல் நிகழ்வு ஏன்?
எருமேலி என்ற இடம் வனத்தின் தொடக்கத்தில் உள்ளது. இங்கு ஐயப்பன் வேட்டைக்காரனாகக் காட்சி தருகிறார். எருமேலியில் பக்தர்கள் ‘பேட்டைத் துள்ளல்’ என்ற நிகழ்ச்சியை நடத்துகின்றனர். வேடுவர்கள் வனம் சென்று மிருகங்களை வேட்டையாடிக் கிடைத்த விலங்குகளை மூட்டையாகக் கட்டி ஒரு கழியில் தொங்கவிட்டுச் சுமந்தபடி ஆனந்தமாக ஆடி வருவர். அது போல் காய்கறிகளையும் மூட்டையாகக் கழியில் கட்டித் தோளில் சுமந்து ஆடி வருவர். இதே போன்று, நாமும் நம் உள்ளம் எனும் வனத்தில் இருக்கும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யங்களை வேட்டையாடி அழித்து அவற்றை மூட்டை கட்ட வேண்டும் என்பது பேட்டைத் துள்ளலின் உட்பொருள்.
மலைப்பகுதியில் நடந்து செல்வது ஏன்?
ஆயுர்வேத மருத்துவத்தின்படி, உடலில் வாத, பித்த, கப தாதுக்கள் உள்ளன. வாத ரோகத்தை அடக்குவதற்கு கருங்குறிஞ்சி மூலிகை உதவும். எருமேலியிலிருந்து கல்லிடும் குன்று வரையில் இந்த மூலிகை நிறைந்துள்ளது. கப ரோகத்தைத் தீர்க்கும் மூலிகைகள் கல்லிடும் குன்றிலிருந்து கரிமலை ஆறாவது தட்டு வரை அடர்ந்து வளர்ந்துள்ளன. அங்கிருந்து புல்மேடு வரை உள்ள மலைப் பிரதேசத்தில் பித்தரோகத்தை நீக்கும் மூலிகைகள் மண்டியுள்ளன. இந்த வழியே செல்கின்ற போது மூலிகைகளின் மணமுள்ள காற்றைச் சுவாசிப்பதாலும், மூலிகைகளை எரித்த சாம்பலைத் தரிப்பதாலும் வியாதிகள் நீங்கி உடல் நலம் பெறமுடியும்.
பொன்னம்பலத் தரிசனம் ஏன்?
சபரிமலை சந்நிதிக்கு நேர் எதிரிலுள்ளது பொன்னம்பல மலை. அதன் உச்சி பொன்னம்பல மேடு எனப்படும். இந்த இடத்தில்தான் ஆலயத் திருப்பணிகளை மேற்பார்வையிட வந்த மன்னனுக்கு, தங்கமயமான ஆலயத்தில் சத்தியமும் தர்மமும் வாயிற்படியைக் காத்து வர நவரத்தின சிம்மாசனத்தில் ஆலவட்டக் குடையுடன், சர்வாலங்கார பூஷிதனாய் ஸ்ரீபூதநாதன் லோக சக்ராதிபதியாகக் காட்சி தந்தார். பூலோகநாதனின் இந்த அரிய காட்சியைக் கண்ட மன்னன் மகிழ்ச்சியில் கண்கள் குளமாகி பகவானை வணங்கினான்.
அப்போது பகவான், “மன்னா, எல்லாவற்றையும் துறந்த நான் இவ்வளவு ஆடம்பரமாகக் காட்சி தருவது எனக்காக அல்ல! முனிவர்கள் விருப்பத்தாலும், தங்கமயமான விதானத்தின் கீழ் நவரத்தின சிம்மாசனத்தில் அகில லோகாதிபதியாக நான் காட்சி தர வேண்டும் என்கிற என் குருநாதர் விரும்பியதாலும் இப்படி இருக்கிறேன்’’ என்றார்.
திருவாபரணப் பெட்டிகள் கொண்டு செல்வது ஏன்?
சுவாமியின் திருவாபரணப் பெட்டிகள் மூன்று. தனுர் (மார்கழி) மாதம் 28-ஆம் நாளன்று பந்தளத்திலிருந்து கிளம்பி அதற்கென்று உரிய வழியில் மூன்று நாட்கள் ஊர்வலமாகக் கொண்டு சென்று சங்கராந்தி (தை முதல்நாள்) நாளன்று சந்நிதியைச் சென்றடைகின்றன திருவாபரணப் பெட்டிகள்.
முதல் பெட்டியில், திருவாபரணம், முகத்தோடு கூடிய கிரீடம், வாள், அரைப்பட்டம், கண்டாபரணங்கள், நவரத்தின மோதிரம், பூர்ணா - புஷ்கலா மற்றும் யானை, குதிரை, புலியின் ரூபங்கள் இருக்கின்றன. இரண்டாம் பெட்டியில், தங்கக் கலசம், மேல்குடை உள்ளன. மூன்றாவது பெட்டியில், தங்கக் குமிழ்களோடு கூடிய கருப்பு, சிகப்பு நிறத்தில் இரண்டு கொடிகள், நெற்றிப்பட்டம், திடம்பு உறை, சுருட்டிய மீசையோடு கூடிய சேவகன் உருவம் ஆகியவை உள்ளன. இந்த ஆபரணங்களைக் கொண்டு சபரிமலை ஐயப்பன் அலங்கரிக்கப்படுகிறார்.
ஐயப்பன் கோயில்கள் நிறுவப்பட்டது எப்படி?
கேரளாவிலுள்ள முக்கிய ஐயப்பன் கோயில்களிலுள்ள விக்கிரகங்கள் யாவும் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை. விக்கிரகத்திற்குக் கீழே ஐந்தடி ஆழத்திலிருந்து ஆதார ஷிலா, நிதிகும்பம், தாமரை, கூர்மம், யோகநாளம், நபும்ஸக ஷிலா, பீரம், விக்கிரகம் என்ற முறையில் நிறுவப்பட்டுள்ளன.
பூதநாத கீதை என்பது எது?
ஹரிஹரசுதனின் அறிவுரைப்படி, ஐயப்பனின் தந்தையான பந்தள மன்னன் அகஸ்திய முனிவரிடம் உபதேசம் பெற்றான். கும்பமுனியிடம் முறைப்படி உபதேசங்களைப் பெற்ற அரசன் ஹரிஹரசுதனின் பாதம் பணிந்தான். ஞானகுருவிடம் உபதேசம் பெற்ற தந்தைக்கு உலகு உய்யும் வழியை குருவிற்கெல்லாம் குருவான மணிகண்டன் திருவாய் மலர்ந்தருளினார். அதுவே ‘பூதநாத கீதை’ என்றானது.
பம்பா நதி குளியல் ஏன்?
பரசுராமர் கேரள ராஜ்யத்தைக் கடலிலிருந்து அகழ்ந்து எடுத்த போது அதைப் பரிசுத்தப்படுத்துவதற்காகப் பரத கண்டத்தில் ஓடும் பல புண்ணிய நதிகளிலிருந்து தீர்த்த கலசங்களைக் கொண்டு வந்து ஒன்று சேர்த்து உருவாகிய நதியே பம்பையாகப் பிரவாகித்து ஓடுகிறது. பாபங்களை நீக்குவதில் கங்கைக்கு ஈடான பெருமையுடையது பம்பா என அருளினார் பரசுராமர். எனவே, பம்பா நதியில் ஐயப்பப் பக்தர்கள் குளித்து வழிபடச் செல்கின்றனர்.
சபரிமலைத் திரிவேணி என்பது எது?
வடக்கே கங்கை, யமுனை, அந்தர்வாகினியான சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் கலக்குமிடம் திரிவேணி சங்கமம். அது போல பம்பா நதியும், கல்லாறும் கலக்குமிடத்தில் அந்தர்வாகினியாக ஓடும் சரஸ்வதியும் சேர்ந்து திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.
ஐயப்பன் கோயில்களில் ஐந்து முக்கிய தலங்கள் எவை?
அச்சங்கோயில், ஆரியங்காவு, குளத்துப்புழை, எரிமேலி, சபரிமலை என்பவை ஐயப்பன் கோயிலில் முக்கியமான தலங்களாகும். ஒருவரது வாழ்வில் குழந்தைப் பருவம், பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்றிருக்கும். இதனை அடிப்படையாகக் கொண்டு, குளத்துப்புழை - குழந்தைப் பருவம், ஆரியங்காவு - பிரம்மசாரிப்பருவம், அச்சங்கோயில் - கிருஹஸ்தன் பருவம், எரிமேலி - வானப்பிரஸ்தம் பருவம், சபரிமலை - சந்நியாசி,யோகி நிலை. இப்படி ஐந்தி நிலைகளில் ஐயப்பன் காட்சி தருகிறார்.