கோயில்கள் சில தகவல்கள்
கோயில்களின் வகைகள்
ஆலயங்களில் உள்ள இறை வடிவங்களில் பல வகைகள் உள்ளன. சுயம்பு, தைவீகம், ஆர்ஷம், மானுஷம், ஆசுரம் என ஐந்து வகைகள் உண்டு.
சுயம்பு
தாமாகவே தோன்றிய திருவுருவங்கள்.
தைவீகம்
பிரம்மாதி தேவர்களால் உருவாக்கப்பட்டவை.
ஆர்ஷம்
சித்தர்களாலும், ரிஷிகளாலும் ஏற்படுத்தப்பட்டவை.
மானுஷம்
அடியார்களாலும், பக்தர்களாலும், மன்னர்களாலும் பிரதிஷ்டை செய்யப்பட்டவை.
ஆசுரம்
அசுரர்களால் அமைக்கப்பட்டவை.
கும்பாபிசேக வகைகள்
ஆவர்த்தம்
ஓரிடத்தில் புதிதாக கோவில் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டு மூர்த்திகளுக்கு கும்பாபிசேகம் செய்யப்படுவதை, ஆவர்த்தம் என்பர்.
அனாவர்த்தம்
அனாவர்த்தம் என்பது வெகு காலமாக கோவில்களில் பூஜைகளில்லாமலோ, கோயில் சேதமடைந்து வழிபாடு நின்று போயிருந்தாலோ, புதிதாக அதை நிர்மாணம் செய்து மூர்த்திகளுக்கு கும்பாபிசேகம் செய்வதை அனாவர்த்தம் என்பர்.
புனராவர்த்தம்
கர்ப்பகிரகம், விமானம் போன்றவை பழுதாகியிருந்தால், அவற்றைப் புதுப்பித்து அஷ்ட பந்தனம் இல்லாவிட்டால், அதை சாத்தித் திரும்ப மூலஸ்தானத்தில் அந்த மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வதை புனராவர்த்தம் என்பர்.
கோவில் அமைய வேண்டிய இடங்கள்
1. செளமிய மற்றும் போக மூர்த்திகளின் ஆலயங்கள் கிராமங்கள், நகரங்களுக்குள் அமைக்கப்படலாம். உக்கிர மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்படும் ஆலயங்கள் மக்கள் குடியிருக்கும் ஊர்களின் மத்தியில் அமைக்க ஆகமங்கள் அனுமதிக்கவில்லை. இவை ஊரின் எல்லையிலேயே அமைக்கப்படும்.
2. யோக மூர்த்திகளுக்கான ஆலயங்கள் ஊருக்குத் தொலைவில் உள்ள காடுகள் சூழ்ந்துள்ள மலை உச்சியில் அமைக்கப்பட வேண்டும்.
3. மாரியம்மன் கோவில் ஊரில் வடகிழக்கு, மேற்கு திசைகளில் அமைந்திருக்கும்.
4. சிவன் கோவில் நகரின் ஈசான (வடகிழக்கு) மூலையில் அமைக்க வேண்டும். தென்கிழக்கு மூலையில் உள்ள அக்னி பாகத்திலும் அமைக்கலாம் என காமிகா ஆகமம் கூறுகிறது. சிவலிங்கங்கள் கிழக்கு நோக்கியே இருக்க வேண்டும். சிவனின் பார்வை ஊரின் குடியிருப்பை நோக்கி இருக்கக் கூடாது. சில இடங்களில் சிவன் மேற்கு நோக்கி அபூர்வமாக அமைந்திருக்கும். அந்த சிவன் உக்கிர மூர்த்தியாவார்.
5. விஷ்ணுவின் ஆலயங்கள் ஊரின் மேற்குப் பாகத்தில் சூரியனுக்குரிய பாகத்தில் அமைக்கப்பட வேண்டும். பகவானின் திருவுருவம் கிழக்கு நோக்கி குடியிருப்புகளைப் பார்த்தபடி இருக்க வேண்டும் என வைகானச ஆகமமும், பல சிற்ப சாஸ்திர நூல்களும் கூறுகின்றன.
6. கருவறையும் மேலுள்ள கட்டிடப் பகுதியும், ‘விமானம்' எனவும் ‘ஸ்ரீகோவில்' என்றும் அழைக்கப்படும். வாயிலை அலங்கரிக்கும் கட்டிடப் பகுதியே கோபுரமாகும். கருவறைப்பகுதி மேல் உள்ள கட்டிடத்தை அவ்வாறு அழைக்கக்கூடாது.
7. திருடு, கொலை, கொள்ளை காரணமாகத் தீட்டு பட்டு ஆலயங்களின் புனிதம் கெட்டுவிட்டால், அதற்கென சாந்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் சடங்கிற்கு ‘அநதரிதம்' என்று பெயர்.
8. ஆலய அமைப்பிற்கு ‘கர்ஷணம்' என்று பெயர். அதில் உள்ள தெய்வச் சிலைகளுக்கு மந்திர சக்தியால் சாந்நித்யம் உண்டாகுமாறு செய்வதற்குப் ‘பிரதிஷ்டை' என்று பெயர்.
9. கும்பாபிஷேகச் சடங்கில் குறைகள் இருந்தால் அதற்குத் தக்க பரிகாரம் செய்ய வேண்டும். இதற்குப் பிராயச்சித்தம் என்று பெயர்.
10. கல்லால் செய்யப்பட்ட தெய்வ உருவச்சிலையை சன்னதியில் நிறுத்தி வைக்க வேண்டும். அதாவது கல்லோடு கல்லை ஒட்ட வேண்டும். தற்கென ஒரு கலவை தயாரிக்கப்படும். அதற்கு அஷ்ட பந்தனம் என்று பெயர். அதில் எட்டுப் பொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கும். அவை கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காலி, செம்பஞ்சு, சாதிலிங்கம், வெள்ளை மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய - எட்டுப்
பொருள்களாகும், இதை ‘அஷ்டபந்தனம்' என்றும் ‘மருந்து சாத்துதல்' என்றும் சொல்லலாம். ‘அஷ்டம்' என்றால் எட்டு என்று பொருள். ‘பந்தனம்' என்றால் ஒட்டி வைத்தல் என்று பொருள்.
கோயிலில் செய்யத் தகாதவை
1. அவசர அவசரமாகவோ, கோபமாகவோ பூஜை செய்வது, ஆலயம் செல்வது கூடாது.
2. ஈர உடையுடனோ அல்லது தூய்மைக் குறைவான உடையுடனோ கோயிலுக்குச் செல்லக்கூடாது.
3. அசைவ உணவு உண்ட தினத்தன்று கோயிலுக்குச் செல்லக்கூடாது.
4. தாம்பூலம் தரித்துக்கொண்டு கோயிலுக்குச் செல்லக் கூடாது.
5. மூர்த்திகளைத் தொடுவதோ அல்லது மூர்த்திகளின் திருவடிகளில் கற்பூரம் ஏற்றுவதோ கூடாது.
6. இறைவனுக்கு நைவேத்தியம் ஆகும்போது பார்க்கக் கூடாது.
7. திரை போடாமல் நைவேத்தியம் செய்யக் கூடாது.
-வயல்பட்டி கண்ணன்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.