ஆவணி மாதம், சுக்கில பட்சம் வெள்ளிக் கிழமை வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் மகாலட்சுமி பாற்கடலில் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
ரிக்வேதம், "ஆக்கத்திற்கும் அருளுக்கும் தெய்வம் லட்சுமி” என்று குறிப்பிடுகிறது.
"சூரிய மண்டலத்தின் நடுவில் இருப்பவள் லட்சுமி” என்கிறது யஜுர் வேதம்.
அதர்வ வேதம், “மகாலட்சுமி நன்மை செய்பவள்” என்று கூறுகிறது.
அழகு, கருணை, இயற்கைக் காட்சி, நாணம், அன்பு, செழிப்பு, இசை, பஞ்ச பூதங்கள் மற்றும் அவற்றின் சேர்க்கைகள், மனம், புத்தி, பிராணன் ஆகியவை அனைத்தும் மகாலட்சுமியின் தோற்றங்களாக விளங்குகின்றன.
வரலட்சுமி விரதம் குறித்த கதை ஒன்று இருக்கிறது.
சித்திரநேமி என்பவள் பூதகண தேவதைகளில் ஒருத்தியாக இருந்தாள்.
அவள் ஒரு சமயம் நடுவராக இருந்து தீர்ப்பு வழங்கியபோது, முறைதவறிப் பாரபட்சமாக நடந்து கொண்டாள்.
அதனால் பார்வதிதேவி, சித்திரநேமிக்கு, "நீ குஷ்டரோகியாவாய்!" என்று சாபம் கொடுத்தாள்.
சித்திரநேமி தன் தவறை உணர்ந்து மனம் வருந்தி, பார்வதிதேவியின் பாதங்களைப் பணிந்து, "எனக்கு சாப விமோசனம் தந்தருளுங்கள்" என்று மனமுருகிப் பிரார்த்தனை செய்தாள்.
பார்வதிதேவியும் கருணை கூர்ந்து சித்திர நேமியிடம், “இன்னும் சில நாட்களில் தேவ கன்னிகைகள் புண்ணியம் தரவல்ல வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடித்துப் பூஜை செய்ய இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் அந்தப் பூஜையின் புண்ணிய தரிசனத்தால் உன்னுடைய நோய் நீங்கி, சாபத்திலிருந்து நீ விடுபட்டுப் பழைய நிலையை அடைவாய்” என்று கூறி அருள் புரிந்தாள்.
சில நாட்கள் கழிந்ததும் ஒரு குளக்கரையில் தேவகன்னிகைகள் சிலர் வரலட்சுமி பூஜை செய்துகொண்டிருந்தார்கள்.
அவர்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதா, சிந்து, கோதாவரி, துங்கபத்ரா, காவிரி ஆகிய புண்ணியத் தீர்த்தங்களை ஆவாஹனம் செய்து வரலட்சுமி விரத பூஜைகளைச் செய்தனர்.
அதைத் தரிசித்ததால் சித்திரநேமி சாபம் நீங்கப் பெற்றாள்.
இதே போன்று, இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது.
மகத நாட்டைச் சேர்ந்த குண்டினபுரம் என்ற ஊரில் தெய்வபக்தியும், நற்பண்புகளும் வாய்ந்த 'சாருமதி' என்ற பெண் வாழ்ந்து வந்தாள்.
அவள் தன் கணவன், மாமனார், மாமியார் ஆகியவர்களை சாதாரணமாக, உறவினர்கள் - மனிதர்கள் என்று கருதாமல், இறைவனே அவர்களின் வடிவத்தில் எழுந்தருளியிருப்பதாகக் கருதி, அவர்களுக்குப் பணிவிடை செய்து வந்தாள்.
அவளது உயர்ந்த ஆன்மிக மனப்பான்மை லட்சுமிதேவிக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. ஆதலால், லட்சுமிதேவி ஒருநாள் சாருமதியின் கனவில் தோன்றி அருள் புரிந்தாள்.
அப்போதிலிருந்து சாருமதி வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தாள்.
இந்த நோன்பு பரம்பரைப் பரம்பரையாகப் பல குடும்பங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விரதம் எப்படி இருப்பது?
தென்கிழக்கு மூலையில் அழகான மண்டபம் அமைத்து அதில் வாழைமரம், மாவிலைத் தோரணம் கட்டுவார்கள். அங்கு சுவற்றில் படமாகவோ, அல்லது வெள்ளியாலோ வரலட்சுமிதேவியின் திருமுகத்தை வைப்பார்கள். தேவிக்குத் தோடு, மூக்குத்தி, சங்கிலி, வளையல் ஆகியவற்றைப் பூட்டி தாழம்பூப் பின்னலிட்டுப் பூச்சூட்டுவார்கள்.
வாழையிலையின் மீது ஒரு படி அரிசியைப் பரப்பி அதன் மீது தேங்காய், மாவிலைக் கொத்து, எலுமிச்சை, காதோலை கருகமணியோடு உதகும்பம் வைத்து பொன்னையும், பழங்களையும் மாந்துளிர்களையும் வைத்துப் புதிய வஸ்திரத்தைச் சுற்றி வரலட்சுமியை ஆவாஹனம் செய்ய வேண்டும்.
ஐந்து வகையான ஆரத்திகளோடு பூஜை செய்ய வேண்டும்.
* உள்ளத்தில் எழுந்தருளும் --- படி வரலட்சுமியிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
* அருகம்புல் கொண்டு அஷ்டலட்சுமியைப் பூஜிப்பது நல்லது.
* கலசத்தின் முன்பக்கம் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், பூ ஆகியவற்றைப் படைத்துத் தேவையான அளவு நோன்புக் கயிற்றையும் வைத்து வழிபடுவார்கள்.
* கலச பூஜைக்குப் பிறகு கணேச பூஜை நடைபெறும்.
* பின்னர் வந்திருக்கும் பெண்களுக்குத் தாம்பூலம், தேங்காய் முதலியவற்றைக் கொடுத்து மஞ்சள் கயிற்றை வலது கையில் கட்டுவார்கள்.
* லட்சுமிதேவிக்கு இனிப்புக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்து, பாத்யம், அர்க்யம் முதலிய பதினாறு வகையான உபசாரங்களையும் செய்ய வேண்டும்.
இரவில் கலசத்தை அரிசிப் பாத்திரத்தில் வைத்தால் அன்னபூரணியின் அருள் என்றும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கலசத்தில் வைத்துப் பூஜித்த தேங்காயை அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமையன்று உடைத்துப் பாயசம் செய்யப் பயன்படுத்துவார்கள்.
வரலட்சுமி விரத பூஜையின்போது லட்சுமி தேவியைப் பற்றிய பாடல்களைப் பாடுவதும், ஸ்தோத்திரங்களைச் சொல்வதும் வழக்கம். விரத பலன்கள் லட்சுமிதேவி தன் பக்தர்களுக்கு உயர்ந்த ஞானத்தையும் அளித்தருள்கிறாள். அவள் வித்யாசக்தி. தன் பக்தர்களை ஸ்ரீமந் நாராயணனுக்கு அறிமுகம் செய்து அவர்களுக்காகப் பரிந்துரைக்கிறாள்.
வரலட்சுமி விரதம் இருந்தால் விரும்பிய நலன்களைப் பெற்றுப் பெருவாழ்வு வாழலாம்.