அரச மரத்துக்கு அறிவை வளர்க்கும் சக்தி அதிகம். இதன் அடியில் அமர்ந்தாலேயே மனம் தெளிவடையும். இதன் அடியில் அமர்ந்து மந்திரங்களை ஜபம் செய்தாலோ, தெய்வ சம்பந்தமான தோத்திரங்களை பாராயணம் செய்தாலோ, நிறைவான பலனை அடையலாம். அகிம்சையைப் போதித்த புத்தர். இந்த அரச (போதி) மரத்தடியில் அமர்ந்து, தவம் செய்துதான் ஞானியாக ஆனார். மரங்களுக்குள் நான் அரச மரமாக இருக்கிறேன் என்கிறார் கண்ணபிரான் கீதையில். மேலும், அரச மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மதேவனும், நடுப்பகுதியில் மஹாவிஷ்ணுவும், நுனிப்பகுதியில் பரமசிவனும் வாசம் செய்கிறார்கள். மும்மூர்த்தி வடிவமான அரச மரத்தைப் பூஜைகள் செய்வதும், பிரதட்சணம் செய்வதும் வணங்குவதும், துன்பங்கள் ஏற்படுவதற்குக் காரணமான பாபங்களைப் போக்கி நல்ல அறிவையும் பெற்றுத்தரும் என்கிறது சாஸ்திரம்.
சூரியன் உதயமாகும் நேரம் முதல் காலை சுமார் 10.40 மணி வரையில், சூரியனின் கிரணங்கள் அரச மரத்தில் விழுவதால், அப்போது அரசமரத்திலிருந்து வெளிவரும் காற்று நமக்கும், நமது உடலுக்கும் நன்மையைத் தரும். எனவே, காலை சுமார் 10.40 மணிக்குள் அரச மரத்தைப் பூஜைகள், பிரதட்சணம், நமஸ்காரம் போன்ற வழிபாடுகளைச் செய்ய வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம்.
மற்ற நாட்களை விட, சனிக்கிழமையன்று காலை நேரத்தில் அரச மரத்திலிருந்து வெளிவரும் சக்தி அதிகமாகக் காணப்படும் என்பதால் சனிக்கிழமைகளில், அரச மரத்தின் அடியில் சிறிது நேரம் அமர்ந்திருப்பதும், அரச மரத்தை வலம் வருவதும் மிகவும் நன்மையைத் தரும். குறிப்பாக, பல நாட்களாக குழந்தைப்பேறு இல்லாதவர்களின் தோஷத்தைப் போக்கி குழந்தைப்பேற்றைத் தர இந்த வழிபாடு மிகவும் சுலபமானது.
கடுமையான-நாட்பட்ட, நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் காலை சுமார் 8.20 மணிக்குள், உடல் மற்றும் உள்ள சுத்தியுடன் பக்தியுடன் அரச மரத்தை 108, 54 அல்லது 12 முதற வலம் வர வேண்டும். அத்துடன் அரச மரத்தில் தனது உடலின் அனைத்து அங்கங்களும் படுமாறு, இரண்டு கைகளாலும் இறுக்கி அணைத்துக் கொள்ள வேண்டும். இதனால் தீராத நோய் தீரும். உடல் மற்றும் உள்ளம், வைரம் போல் நல்ல வலிமை பெறும். இது ஒரு சிறந்த பரிகாரமாகும்.
ஆனால், சனிக்கிழமையைத் தவிர, மற்ற நாட்களில் அரச மரத்தை பூஜைகள் வலம் வருதல், நமஸ்காரம் செய்யலாமே தவிர, அரச மரத்தைக் கையால் தொடக்கூடாது. நடுப்பகல், மாலை, இரவு போன்ற நேரங்களைத் தவிர்த்து, காலை சுமார் 10.40 மணிக்கு முன்பாக, அரச மரத்தை பூஜைகள், வலம் வருதல் போன்ற வகையில் வழிபாடு செய்வதே சிறந்தது.