நம்மாழ்வார் 16 ஆண்டுகள் உண்ணாமல் உறங்காமல் பேசாமல் ஒரு புளியமரத்தின் பொந்துக்குள் யோக நிலையில் இருந்தார். உலகம் அவரை ஊமை என்று நினைத்தது.
மௌனத்தையே மொழியாகக் கொண்ட அவரிடம் ஒரு தத்துவப் புதிரைக் கேள்வியாகக் கேட்டார் மதுரகவி ஆழ்வார்.
மதுரகவி ஆழ்வாரின் கேள்வி இதுதான்:
செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?
இந்த கேள்வியின் விளக்கம்:
அறிவில்லாத ஒரு ஜடப் பொருளின் (உடலின்) உள்ளே மிகச் சிறிய ஒரு உயிர் (ஆத்மா) புகுந்து கொண்டால் அது எதை அனுபவித்துக் கொண்டு எங்கே தங்கியிருக்கும்?
இதற்கு நம்மாழ்வார் அளித்த பதில்:
அத்தைத் தின்று அங்கே கிடக்கும்.
அதாவது, உடலால் ஏற்படும் இன்ப துன்பங்களை நுகர்ந்து கொண்டு உயிர் (ஆத்மா) அந்த உடலிலேயே தங்கியிருக்கும்.
இந்தத் தத்துவக் கேள்வி பதிலில் மறைந்துள்ள தத்துவ உண்மை:
செத்தது (உடல்):
நம் உடல் என்பது தானாக இயங்காத ஒரு ஜடப் பொருள். உயிர் இல்லையென்றால் அது வெறும் ஜடம்.
சிறியது (ஆத்மா):
நம் உடல் பெரியதாக இருக்கலாம் ஆனால் அதற்குள் இருக்கும் உயிர் (ஆத்மா) அணுவை விடச் சிறியது.
எத்தைத் தின்று?:
இந்த உயிர் உடலுக்குள் புகுந்தவுடன் வினைகளை ஆசைகளை அனுபவிக்க நான் எனது என்ற அகங்காரத்தில் சிக்கிக் கொள்கிறது. உடலுக்குப் பசிக்கும் போது உணவை உண்கிறது. மனம் ஆசைப்படும் போது இன்பத்தைத் தேடுகிறது. பாவ புண்ணியங்களை அனுபவிக்கிறது. இதைத்தான் அத்தைத் தின்று (அந்த உடலின் வினைகளையே உண்டு) என்கிறார்.
எங்கே கிடக்கும்?:
இந்த மாயையில் இருந்து விடுபடத் தெரியாமல் மீண்டும் மீண்டும் அதே உடல்களில் பிறந்து உழன்று கொண்டிருக்கும்.
16 ஆண்டுகள் பேசாத நம்மாழ்வார் இந்தப் பதிலின் மூலம் மனிதன் ஏன் பிறக்கிறான்? அவன் எப்படி இந்த உலக மாயையில் சிக்கிக் கொள்கிறான்? என்பதை உலகிற்கு உணர்த்தினார். இதைக் கேட்ட மாத்திரத்திலேயே மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டார். ஞானம் என்பது இப்படியும் சில சொற்களில் இருக்கிறது. நாம்தான் புரிந்து கொண்டு உண்மையை உணர வேண்டும்.