சக்கரத்தாழ்வார் என்பவர், திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் உருவமாக கருதப்பெறுகிறார். இவர் சுதர்சனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்பெறுகிறார். இவர் பதினாறு கைகளை கொண்டவராகவும், சில இடங்களில் முப்பத்திரண்டு கைகள் கொண்டவராகவும் அறியப்பெறுகிறார். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி காணப்பெறுகிறது.
சுவாமி தேசிகர் சக்கரத்தாழ்வாரை ” சக்ர ரூபஸ்ய சக்ரிணி ” என்று குறிப்பிடுகிறார். சக்ரத்தாழ்வார் திருமாலுக்கு இணையானவர் என்று பொருள். மேலும் இவரைப் போற்றி ”சுதர்சனாஷ்டகம்” என்ற சுலோகத்தையும் சுவாமி தேசிகர் எழுதியுள்ளார்.
சக்கரத்தாழ்வார் பின்னால் யோக நரசிம்மர் இருப்பார். நரசிம்ம அவதாரத்தில் அரக்கனை எந்த ஆயுதமும் இல்லாமல் தன் விரல்களால் ஹிரண்யகசிபுவை அழித்த போது நகங்களாய் விளங்கியவர் சுதர்சனர்.
சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் “யோக நரசிம்மர் ” கோலத்தில் வீற்றிருப்பார். இதனைப் பல கோவில்களில் பார்க்கலாம். இவரை, சுதர்சன நரசிம்மர் என்று கூறுவர்.
சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் முப்பிறவியிலும், இப்பிறவியிலும் பாபங்கள் நீங்கும். எதிரிகளின் தீங்கும் நம்மை நெருங்காது நீங்கும்.
முன்பக்கம் சக்கரத்தாழ்வாரையும், பின்புறம் யோக நரசிம்மரையும் ப்ரதட்சணம் செய்து வந்தால், நான்கு வேதங்களையும், பஞ்சபூதங்களையும், அஷ்ட லக்ஷ்மியையும் வணங்கின பலன் கிடைக்கும்.
திருமாலுக்குச் செய்யும் அனைத்து வழிபாட்டு முறைகளும் இவருக்கும் உண்டு.
பிரம்மோட்சவம், மற்றும் கடலுக்கு சென்று தீர்த்தவாரி சமயங்களில் சுதர்சனருக்கு முக்கிய பங்கு உண்டு.
சுதர்சனர் என்கிற சக்கரத்தாழ்வாருக்குச் சிறப்பான ஆராதனைகள் நடைபெறும். இந்த ஆராதனைகள் விகாச என்ற முனிவரால் ஏற்படுத்தப்பட்டது.
சுதர்சனரை உபாசிப்பவர்களுக்கு விரும்பியதை அளித்துக் காத்திடுவார்.
ஸ்ரீ சுதர்சன வழிபாடு பயங்கரமான கனவு, சித்த பிரமை, பில்லி சூன்யம் போன்ற அனைத்துக்கும் விசேஷமானது. சுதர்சன வழிபாட்டு முறையில் ஹோமம் செய்வது முக்கியமாகக் கருதப்படுகிறது.
சுதர்சன காயத்ரி:
“ஸ்ரீ சுதர்சனாய வித்மஹே
மஹா ஜ்வாலய தீமஹி
தந்நோ சக்ர ப்ரசதோயாத் … !”
சுதர்சன மந்த்ரம்:
“க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய
ஸ்ரீம் கோபி ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய
பரமாத்மனே! மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர
ஒளஷத அஸ்த்ர ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி
ஸம்ஹர ஸம்ஹர ம்ருத்யோர் மோசய
மோசய ஓம் மஹா சுதர்சனயா தீப்த்ரே
ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபன
கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா”
மிகவும் சக்தி வாய்ந்த மகா சுதர்சன மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் முறைபடி துதித்து வருபவர்களுக்கு பல விதமான நன்மைகள் உண்டாகும். அவர்களுக்கு பீடைகள் ஒழியும். சௌபாக்கியம் பிறக்கும். அஞ்ஞான இருள் விலகும். எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும். ஆபத்து நீங்கும். பயம் விலகும். தைரியம் பிறக்கும். சந்தோஷம் நிலைக்கும்.