பிரம்மாவின் புதல்வர் புலஸ்திய மகரிஷி. இவரது மகன் குபேரன். இவனை ஆன்மிகத்தில் ஈடுபடுத்த புலஸ்தியர் விரும்பினார். அவனோ சிவனை வேண்டிப் பெரும் செல்வம் பெற்று, ராஜபோக வாழ்வு வாழ்ந்தான்.
இது புலஸ்தியருக்கு பிடிக்கவில்லை. மகனைத் திருத்த எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. எனவே குபேரனை ஆன்மிகப்பாதைக்கு திருப்ப, தன் உடலிலிருந்து பலம் மிக்க வஜ்ரவாகு என்ற மகனை உருவாக்கினார்.
வஜ்ரவாகுவை குபேரனுடன் மோத விட ஏற்பாடு செய்தார். தந்திரக்காரனான குபேரன், வஜ்ரவாகுவை ‘காக்கா’ பிடித்து, “நீங்கள் என் தந்தையின் உடலில் இருந்து பிறந்ததால், நீங்களும் எனக்குத் தந்தையே. உங்கள் பிள்ளையை ஆசிர்வதியுங்கள்,” என்றான். அத்துடன் அழகே வடிவான புறகடை, மாலினி, வாகை என்ற மூன்று பெண்களை அவருக்கு பணிவிடை செய்ய அனுப்பி வைத்தான்.
குபேரனின் பணிவும், சேவையும் வஜ்ரவாகுவைக் கவர்ந்தது. ஆனால் ரிஷிகள் நடத்த விரும்புவது நடக்காமல் போகாது. குபேரனின் வாழ்வில் விதி விளையாடியது.
ஒரு கட்டத்தில், தனக்குப் பணிவிடை செய்ய வந்த பெண்களின் சேவை போதும் என குபேரனிடமே திருப்பி அனுப்ப வஜ்ரவாகு முடிவு செய்தார்.
அவர்கள் செய்த சேவைக்கு என்ன பரிசு கேட்டாலும் தருவதாக வாக்களித்தார். அவர்கள் தங்களைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டனர்.
வாக்கு மாற முடியாத வஜ்ரவாகு அவர்களைத் திருமணம் செய்தார். அவர்களில் புறகடைக்கு தசக்ரீவன் என்ற மகன் பிறந்தான். ‘தசம்’ என்றால் ‘பத்து’. ‘க்ரீவம்’ என்றால் ‘தலை’. பத்து தலையுடைய அவன் ராவணன் என பெயர் பெற்றான். இவளுக்கு கும்பகர்ணன் என்ற மகனும் பிறந்தான். மாலினிக்கு விபீஷணனும், வாகைக்கு கரன் என்ற மகனும், சூர்ப்பனகை என்ற மகளும் பிறந்தனர்.
ராவணன் சிவபக்தனாகி உலகையே ஆளும் வரத்தைப் பெற்றான். தேவர்களை அடக்கியாண்டான். தேவர்கள் குபேரனை அணுகி, ‘‘உங்கள் உறவினனான ராணவனை அடக்கி வையுங்கள்’’ என்றனர்.
ராவணனை அடங்கியிருக்கும்படி குபேரன் துாது அனுப்பினான். ஆனால் மாவீரனான ராவணன், “சர்வலோகத்தையும் அடக்கியாளும் என்னைக் கண்டிக்க நீ யார்? ஒழுங்காக உன் செல்வத்தை என்னிடம் கொடுத்து விட்டு, எங்காவது ஓடி விடு<” என எச்சரித்தான்.
குபேரன் மாட்டிக் கொண்டான். செல்வத்தை இழந்தான். புலஸ்தியரின் எண்ணப்படி தவமிருக்கப் போய்விட்டான்.
எல்லா விஷயத்திலும் சரியாக இருந்த ராவணன், அடுத்தவன் மனைவியை அடைய வேண்டும் என்ற ஒரே தவறான எண்ணத்தால் ராமனிடம் சிக்கி அழிந்தான்.
வடமாநிலங்களில் ராமலீலா என்ற நிகழ்ச்சி, புரட்டாசியில் நடக்கும். அப்போது நடக்கும் நிகழ்ச்சிகளில், ராவணனின் கதையை இவ்வாறாகச் சொல்வர்.