குரு பூர்ணிமா, ஆடி மாதத்தில் வரும் ழுழுநிலவு (பௌர்ணமி) நாளன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்குக் கல்வி அறிவு புகட்டிய குருவைப் (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனைத் துறவிகள், வியாசபூசை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர்.
இவ்வழிபாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு.
குருவிடம் மந்திரதீட்சை பெற்றுத்தான் மந்திரங்களை ஜபம் செய்ய வேண்டும். அப்போதுதான் மந்திரங்கள் உரிய பலனைத் தரும்.
குரு ஒருவரைச் சரணடைந்து அவரது அனுக்கிரகத்தைப் பெற்றவனே ஆத்மஞானம் பெறுவதற்குத் தகுதி உடையவன் ஆகிறான்.
ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் தொடர்பு ஏற்படுத்துபவரே குரு ஆவார்.
உலகில் இறைவனின் பிரதிநிதியாக குரு விளங்குகிறார்.
குருவின் போதனைகளைப் பின்பற்றி நடப்பதுதான் உண்மையான குரு வழிபாடாகும்.
“எவருக்குத் தெய்வத்திடம் பக்தி இருக்கிறதோ, தெய்வத்திடம் இருப்பது போலவே குருவிடமும் பக்தி இருக்கிறதோ, அந்த மகாத்மாவிற்கு உபநிஷதங்களில் சொல்லப்பட்டிருக்கும் உண்மைகள் தாமாகவே அனுபவமாகும்" என்று சுவேதாசுவதர உபநிஷதம் கூறுகிறது.
"ஜபம், தவம், விரதம், தீர்த்தம், யாகம், தானம் ஆகியவை அனைத்தும் குரு தத்துவத்தை அறியாதவனிடம் பயனளிக்காமல் வீணாகிவிடும். குரு புத்தி ஒன்றே ஆன்மாவிற்கு சத்தியமாகும். ஆதலால் புத்திமான்கள் முக்கியமாக குருபுத்தியை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும்" என்று குருகீதையில் சிவபெருமான் பார்வதியிடம் கூறுகிறார்.
குருவின் பெருமையைத் திருமந்திரம் பின்வருமாறு விளக்குகிறது:
“தெளிவு குருவின் திருமேனி காணல்
தெளிவு குருவின் திருவார்த்தைக் கேட்டல்
தெளிவு குருவின் திருநாமம் சொல்லல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே."
மாணவர்கள் தங்களுக்குக் கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதை அருளிய கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுசர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர்.