சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சைவ சமய ஒழுக்கங்களில் இன்றியமையாதது சிவ சின்னங்களில் ஒன்றாகிய திருநீறு அணிதலாகும். திருநீற்றுக்கு விபூதி, பசிதம், பசுமம், இரட்சை, ஷாரம் என்கிற வேறு பெயர்களும் உண்டு.
தன்னைத் தரித்தவர்களுக்கு மேலான செல்வத்தைக் கொடுத்தலினால் விபூதி எனவும், ஒளியைக் கொடுப்பதினால் பசிதம் எனவும், பாவங்களை எரித்து நீறாக்குவதனால் பசுமம் எனவும், தன்னைத் தரித்த ஆன்மாக்கள் எல்லாவற்றையும் இரட்சிப்பதனால் (காப்பதனால்) இரட்சை எனவும், உயிர்களது மலத்தை நீக்குதலால் ஷாரம் எனவும் பெயர் பெறுகின்றது.
குற்றமற்ற பசுவின் சாணத்தை நெருப்பினாலே சுடுவதனால் உண்டாகும் நீறே தூய திருநீறாகும். திருநீறு வெண்மை நிறமானது. வெள்ளைநிறத் திருநீறு அணியத்தக்கதுமாகும். ஏனைய நிறத் திருநீறு அணியத்தகாது. வெண்மை நிறம் தூய்மைக்கு அடையாளம். வெள்ளை நிறத் திருநீற்றை அணிவதனால் நமது அகமும் புறமும் தூய்மை அடைகின்றன.
இங்கே நீறாக்க எடுத்துக்கொள்ளும் சாணம் ஆன்மாவையும், சாணத்தில் உள்ள அழுக்குகள் ஆன்மாவோடு உள்ள மலங்களையும், நெருப்பு திருவருளையும், எரித்தல் திருவருள் பதிதலையும், எரித்த பின் வந்த வெண்ணீறு மலங்கள் நீங்கத் தூய்மையடையும் ஆன்மாவையும் குறிக்கும் என்பர்.
திருநீறு இருவகையாகத் தரிக்கப்படும். ஒன்று உத்தூளனமாக அணிதல். பரவிப் பூசுதலையே இப்பெயர் கொண்டழைப்பர். இரண்டாவது வகை திரிபுண்டரம் எனப்படும். திருநீற்றை நீரிற் குழைத்து மூன்று குறியாகத் தரிப்பதனையே திரிபுண்டரம் என்பர். சமயத் தீட்சை பெற்றோர் மாத்திரமே இவ்வாறு தரிக்கத் தகுதியுடையவர்கள்.
திரிபுண்டரமாக தரிக்கும் பொழுது, குறிகள் வளையாதும், இடையறாதும், ஒன்றை யொன்று தீண்டாதும், அகலாதும், ஒவ்வோர் அங்குல இடைவெளி இருத்தல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். உச்சி, நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள், புயங்கள், முழங்கைகள், மணிக்கட்டுக்கள், விலாப் புறங்கள், முதுகு, கழுத்து என்னும் பதினாறு உறுப்புகளில் அணிந்திட வேண்டும்.
திருநீறு அணியும்பொழுது உத்தம திக்குக்களான வடக்கு முகம், கிழக்கு முகமாக இருந்து கொண்டு தரித்தல் வேண்டும். அதனைத் தரிக்கும் போது சிவபெருமானைத் தியானித்து, சிறிதாயினும் நிலத்தில் சிந்தாதபடி அண்ணாந்து, “சிவ சிவ" என்று சொல்லிக் கொண்டு, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் தரித்தல் வேண்டும். தரையிலே சிந்தப் பெற்றால், சிந்திய நீற்றை எடுத்துவிட்டு அவ்விடத்தைச் சுத்தம் செய்தல் வேண்டும்.
சந்தியாகாலம் மூன்றும் (காலை. உச்சி, மாலை), சூரியோதயம், சூரிய அஸ்தமனம், நித்திரைக்கு முன்னும் பின்னும், பல்துலக்கிய உடனும், நீராடிய உடனும்,பூசைக்கு முன்னும் பின்னும், உணவுக்கு முன்னும் பின்னும், தம் கடமைகளைச் செய்யச் செல்லும்போதும், சிறப்பு நிகழ்ச்சிகளின் போதும் கட்டாயமாகத் திருநீறு அணிதல் வேண்டும்.
அக்கினியில் எரித்தெடுத்தத் தூய வெண்ணீற்றைப் புதிய பாத்திரத்திலிட்டு, நறுமலர்கள் தூவிப் பாத்திரத்தின் வாயைத் தூயத் துணியினாலே கட்டிப் பாதுகாத்தல் வேண்டும்: அணிவதற்கு வேண்டிய திருநீற்றை மட்டும் பட்டுப்பையில், சம்புடத்தில் வைத்திருக்கலாம். திருநீற்றைச் சிவமாகவும், திருநீறு வைத்திருக்கும் பையைச் சிவாலயமாகவும் மதிக்க வேண்டும்.
குரு, சிவனடியார் முதலியோர் திருநீறு தந்தால், அமைதியாக அடக்கத்துடன் அவர்களை வணங்கி, இரு கைகளையும் நீட்டி வாங்கி அணிதல் வேண்டும்.
திருநீற்றுக்கு மேலே சந்தனம், குங்குமம் அணிதலாகாது. திருநீற்றுக்குக் கீழே புருவ நடுவில் அவற்றைத் தரிக்கலாம். “நீறில்லா நெற்றி பாழ்'' என்பதும் இதனை ஒட்டியதே என்பதனைத் தெரிந்து கொள்ளவும்.
திருநீற்றின் மகிமை ஆளுடைய பிள்ளையார் அருளிய திருநீற்றுப் பதிகத்தில் விரிவாகவும், மற்றையோர் பாடல்களில் பரவலாகவும் கூறப்பட்டுள்ளது.
ஞானாக்கினியினாலே சுடப்பட்ட பசு மல நீக்கத்தால் விளங்கும் சிவத்துவப் பேற்றின் அறிகுறியே திருநீறாகும். திருநீறணிவதனால் முத்தியும், சிவஞானமும் கைகூடுமென அருள் நூல்கள் கூறுகின்றன.
முத்தி தருவது நீறு'', "போதந் தருவது நீறு'', ''சித்தி தருவது நீறு'', ''சுந்தரமாவது நீறு", "தேசம் புகழ்வது நீறு' என்னும் சம்பந்தர் திருவாக்குகளால் இதனை நாம் உணரலாம்.
ஒருவன் திருநீறு அணியும் பொழுது அத்திருநீறு படிகின்ற இட மெல்லாம் சிவலிங்கமாகின்றதெனச் சைவ நூல்கள் கூறுகின்றன.