பூணூலினைப் பெரும்பான்மையாகப் பிராமணர்கள் அணிகின்றனர். பிராமணர்கள் தவிர்த்து, சில சமூகத்தினரும் அணிந்து கொண்டிருக்கின்றனர்.
பூணூல் மூன்று நூல்களைக் கொண்டிருக்கிறது. இதன் வழியாக மூன்று பிரிவுகளிலான தத்துவங்கள் உணர்த்தப்படுகின்றன.
1. முதல் தத்துவம் – மூன்று நூலும் நமக்கிருக்கும் மூன்று கடன்களை நினைவூட்டுகிறது.
1. ரிஷி கடன் – வேத அத்யயனம்
2. தேவ கடன் – யாகம் & யஞ்யம் புரிதல்
3. பித்ரு கடன் – நல்ல சந்ததிகளை உருவாக்குவது
இரண்டாம் தத்துவம் – மூன்று நூலும் நமக்குள்ளிருக்கும் மூன்று நாடிகளைக் குறிக்கின்றன. நாடி என்பது பிராண வாயு இயங்கும் வழிப்பாதை எனலாம்.
1. ஈடா – முதுகெலும்பின் இடது புறத்தில் இயங்கும் பாதை
2. பிங்களா – முதுகெலும்பின் வலது புறத்தில் இயங்கும் பாதை
3. சுஷும்னா – முதுகெலும்பின் நடுவில் இயங்கும் பாதை
மூன்றாம் தத்துவம் – மூன்று நூலும் நமக்கிருக்கும் மூன்று குணங்களை குறிக்கின்றன.
1. சத்வ குணம்
2. ரஜோ குணம்
3. தாமச குணம்
பூணூலில் ஒரு முடிச்சு ஏன்?
பூணூலில் இடும் ஒரு முடிச்சைப் பிரம்ம முடிச்சு என்கின்றனர்.
ஜீவன் முக்தி அடைய இந்த முடிச்சு அவிழ்க்கப் படவேண்டும். பிராண வாயு, ஈடா மற்றும் பிங்களா வழியாக இயங்கும். ஆனால், சுஷும்னா வழியாக அதனால் சஞ்சரிக்க இயலாது. முதுகெலும்பின் நடுவில் உள்ள சுஷும்னா நாடி வழியாக இயங்கத் தடையாக இருப்பது அங்கே இருக்கும் இந்தப் பிரம்ம முடிச்சு. இது அவிழ்க்கப்பட்டு, இதன் வாயிலாக ஜீவன் பிரிந்தால் மோட்சம் என வேதம் உரைக்கிறது. இதனை அறிவிக்கவே பூணூலில் ஒரு முடிச்சு.
பிரம்மச்சாரிக்கு ஒரு பூணூல், திருமணத்திற்கு பிறகு இரண்டு பூணூல் என்று இருக்கிறதே, இது ஏன்?
ஒரு பூணூல் தனக்கான கடனை நினைவூட்ட , இன்னொன்று மனைவிக்கான கடனுக்கும் கணவன்தான் பொறுப்பு என்பதைக் குறிக்கிறது.
சிலர் மூன்றாவது பூணூல் அணிகின்றனரே, ஏன்?
ஒரு கிரஹஸ்தன் உத்தரீயம் (அங்கவஸ்திரம்) இல்லாமல் வேத காரியங்கள் புரியக் கூடாது. அக்னி ஹோத்ரம் புரிபவர்கள் எக்காலமும் ஹோமம் வளர்த்து கொண்டிருப்பர், உத்தரீயத்தை மறக்க நேரிடும், அதற்குச் சமானம் இந்த மூன்றாவது பூணூல்.
பூணூலை ஏன் தேவ காரியத்தில் உபவீதமாகவும் பித்ரு காரியத்தில் ப்ராசீனாவீதமாகவும் அணிகின்றனர்?
வேள்வியின் போது நாம் சூரியனை நோக்கிக் கிழக்கு முகமாக அமர்ந்து வேள்வி வளர்க்கின்றோம். அதிலிருந்து வடக்கில் தேவலோகம் , தெற்கில் பித்ருலோகம் அமைந்திருக்கிறது. இதனால்தான், தேவ காரியம் புரியும் பொழுது பூணூல் வடக்கு நோக்கி இருக்க இடது தோளிலிருந்து உபவீதமாக அணிகின்றனர். இதேபோன்று, முன்னோர் காரியத்திற்குத் தெற்கு பக்கம் இருக்க வலது தோளில் ப்ராசீனாவீதமாக அணிகின்றனர். மற்ற லௌகிக விஷயத்திற்கு மாலையாக (நிவீதம்) அணிதல் வேண்டும்.