அனுமன் கோயிலுக்குச் செல்பவர்கள் அனைவரும் அனுமனின் வாலில் பொட்டு வைத்து வணங்க வேண்டுமென்கிறார்களே... அனுமனின் வாலுக்கு அப்படி என்ன பெருமை இருக்கிறது?
அனுமன் சூரியனைக் குருவாகக் கொண்டு, பாடம் கேட்டு வலம் வந்த போது மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரியனுடன் அனுமனையும் சேர்த்து வலம் வந்தன. இதனால் அனுமனின் வாலிற்குப் பின்புதான் நவக்கிரகங்கள் இருக்க வேண்டியதாகி விட்டது. இதன் மூலம் அனுமனை வழிபடுபவர்கள் அனைவருக்கும் நவக்கிரகங்களின் பாதிப்புகள் எதுவும் இருக்காது. இது போல், இலங்கையில் இராவணன் அனுமனின் வாலுக்கு தீ வைத்த போது, சீதை வேண்டியதால் வெம்மையும் குளிர்ச்சியாகவே இருந்தது. நெருப்பினால் ஏற்படும் காயங்களிலிருந்து குணம் அடைய அனுமனை வழிபடலாம். மேலும், இராவணனின் சபையில் அனுமன் தன் வாலால் ஏற்படுத்திய சிம்மாசனத்தில் அமர்ந்து பேசித்தான் இராவணின் கர்வத்தை அடக்கினார். இதன் மூலம் அனுமனின் வாலுக்குத் தனிப்பெருமை கிடைத்தது.
அனுமனின் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாகக் கருதப்படுவதால், ஆஞ்சநேயரின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் இட்டு 48 நாட்கள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் நவகிரகங்கள் அனைத்தையும் முழுமையாக வழிபட்டதற்குச் சமமாகும். இந்த வழிபாடு நவக்கிரக வழிபாட்டை விட மேலானதாகக் கருதப்படுகிறது.
பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன்தான் அனுமனுக்கு முதன் முதலாக வால் வழிபாடு செய்ததாகக் கூறப்படுகிறது.
பீமன் பாரிஜாத மலரைத் தேடிக் காட்டில் அலைந்து கொண்டிருந்த போது, களைப்படைந்தான். அந் நிலையில் அவன் சென்று கொண்டிருந்த வழியின் குறுக்கே ஒரு குரங்கின் வால் ஒன்று அவனுக்கு இடையூறாகத் தெரிந்தது.
அது அனுமனின் வால் என்பதை அறியாத பீமன் அனுமனிடம், “ஏய் குரங்கே, பாதையின் மேலிருக்கும் உன் வாலை நகர்த்து” என்று கோபமாகக் கூறினார். அதைக் கேட்ட அனுமன், “முதுமையின் காரணமாக என் வாலை நகர்த்த முடியாமல்தான் நானே படுத்திருக்கிறேன். நீயே என் வாலை ஓரமாக நகர்த்தி வைத்து விட்டுப் போ” என்றார்.
பீமன் அலட்சியத்தோடு அனுமனின் வாலை அகற்ற முயற்சித்தான். ஆனால், அவனால் அந்த வாலைச் சிறிது கூட அசைக்க முடியவில்லை.
அவன் பலமுறை கடுமையாக முயற்சித்தும் வாலை நகர்த்த முடியாமல், தவித்து நின்றான்.
அப்போது அனுமனே, தன்னுடைய வாலை நகர்த்திக் கொண்டு, “நான் சாதாரணக் குரங்கல்ல, நான் வாயுகுமாரனின் புதல்வனான அனுமன்” என்று கூறினார்.
அதனைக் கேட்ட பீமன், தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். பின்னர் அவன் அனுமனின் வலிமையை வியந்து பாராட்டினான்.
அனுமனையும் அனுமனின் வாலையும் வணங்கிய அவன், “எனக்கு அனைத்து சக்திகளையும் அளித்து வாழ்த்தியது போல், தங்கள் வாலைத் தொட்ட்டு வணங்கி வழிபடுபவர்களுக்கு அனைத்து நலன்களையும் தந்தருள வேண்டும் என்று வரம் வேண்டினான். அனுமனும் அவன் கேட்ட வரத்தைக் கொடுத்தார்.
அதன் பிறகு, அனுமனின் வாலை வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.
அனுமன் வாலைத் தொட்டு வழிபடுபவர்களுக்கு, அவர்கள் நினைத்தவையெல்லாம் நிறைவேறும். திருமணமாகாத பெண்கள் ஆஞ்சநேயருக்கான வால் வழிபாடு செய்தால், இறைவி பார்வதி தேவியின் அருளால், விரைவில் திருமணம் நடக்கப் பெறுவர்.