இறைவன் சிவபெருமானுடைய வடிவம் மூன்று. அருவம், அருவுருவம், உருவம் என்னும் மூன்றுமாம். அருவத் திருமேனியையுடை ய பொழுது சிவன் எனவும், அருவுருவத் திருமேனியையுடைய பொழுது சதாசிவன் எனவும், உருவத்திருமேனியையுடைய பொழுது மகேசுவரன் எனவும் அழைக்கப்படுகிறார்.
சிவபெருமான் பொதுவாகப் பத்மாசன நிலையில் அமர்ந்திருப்பதைக் காண்கிறோம். அவனின் ஒளி மிகுந்த கண்கள் முக்கால் பாகம் மூடிய நிலையில். இரு புருவங்களுக்கும் நடுவில் நெற்றிக்கண். நெற்றியில் திருநீற்றினால் மூன்று கோடுகள். செம்மை நிற சடைமுடியான். அவன் தலையில் கங்கை ஆறாக பெருக் கெடுத்து ஓடுகிறாள். பிறையை தலையில் சூடிய பெருமானாய் இருக்கிறான். சிவனுக்கு பிடித்த கொன்றை மலரைத் தலையில் அணிந்திருக்கிறான். உடல் முழுவதும் திருநீற்று கோடுகள். கைகளிலும் கழுத்திலும் உருத்திராட்ச மாலை. கழுத்தில் பாம்பு. உடுக்கையும் சூலாயுதத்தையும் வைத்திருக்கிறான். விடையாகிய காளை மாட்டை வாகனமாக வைத்துள்ளான். புலித்தோலை இடையில் அணி ந்துள்ளான். கைலாய மலையை வீடாக வைத்து உள்ளான். நடனத்தை உருவாக்கியவனாய் நடராசனாய் இருக்கிறான். இப்பிரபஞ்ச அதிர்வுகள் யாவையும் கடந்த சலனமில்லாத முக பாவனையோடு நமக்கு காட்சி தருகிறான். இன்னும் இன்னும் நமக்கு புலப்படாத எவ்வளவோ தத்துவங்களை அடக்கியவனாய் நமக்கு வேண்டும் வரங்களை அள்ளித்தந்து அருள் புரிகிறான்.
இந்த சிவபெருமானுக்கு இருக்கும் முக்கியமான சில அடையாளங்களுக்கான விளக்கங்களைத் தெரிந்து கொள்ளலாமா?
நெற்றிக்கண்
நமது இரண்டு கண்களுக்கும், மூக்கின் மேல் சுழி முனைக்கும், புருவங்களின் இடை நடுவே, சிறு ஊசித்துவாரத்தில் பத்தில் ஒரு பாக அளவில் மிக நுட்பமாக இருக்கும் துவாரத்திற்கு “நெற்றிக் கண்” என்று பெயர். இதை மிக இலேசான சவ்வு மூடிக்கொண்டிருக்கிறது. குண்டலினி சக்தியை மேலே எழுப்பி தலையின் நடு உச்சிப் பகுதிக்குக் கொண்டு வரும் போது அளப்பரிய ஞானம் தோன்றும். அப்போது நெற்றிக்கண்ணும் திறக்கும். நெற்றிக்கண்ணினால் பல விசயங்களை உணர முடியும். நெற்றிக்கண் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். நெற்றிக்கண் ஞானத்தின் உச்சத்தை குறிக்கும்.
உடுக்கை
உடுக்கை பிரபஞ்ச படைப்பின் ஒலியை ஒலிக்கிறது. உடுக்கையை அடிக்கும் போது ஓம் என்ற பிரணவ மந்திர ஒலி பிறக்கிறது. இந்த நாத ஒலி பிரபஞ்ச ஆக்கத்தின் பிறப்பிடம். பிரபஞ்சப் படைப்பை ஆக்கும் ஆனந்தத் தாண்டவத்தைத் தொடங்கும் முன்னர் சிவன், உடுக்கையை 14 முறை அடிக்கிறார். இது பிரபஞ்ச இயக்கத்துக்கு தேவையான சாத்திரத்தை உருவாக்குகிற து. இவ்வாறு பிரபஞ்ச இயக்கத்துக்குத் தேவையானவற்றை உருவாக்கிய பின்னர் சிவன், ஆனந்தத் தாண்டவத்தை தொடங்குகிறார். ஆகவே, உடுக்கை பிரபஞ்ச படைப்பின் ஒலிக்குறிப்பாகும்.
பிறைச் சந்திரன்
பிறைச் சந்திரன் வளரும், தேயும் குணமுடையது. காலச் சக்கரத்தில் இந்த வளர்தலும் தேய்தலும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருக்கும். காலத்தை நாம் இரவு பகல் என்று உணர்ந்தாலும், தினமும் நிகழும் கால மாற்றம் சந்திரன் மூலம் நம் கண் முன்னே காலம் நகர்ந்து செல்வதை எளிதாக உணர்த்துகிறது. இந்த பிரஞ்சத்தைப் படைத்த இறைவன், காலத்தை வென்றவனாவான். இந்தத் தத்துவத்தையே பிறை சந்திரன் உணர்த்துகிறது.
நெற்றியில் மூன்று திருநீற்று கோடுகள்
இவ்வுலகில் பிறந்த உயிரினங்கள் யாவும் இறுதியில் தீயில் வெந்து சாம்பலாகும் தத்துவத்தை தாங்கியுள்ளது திருநீறு. காராம் பசுவின் சாணம் மருத்துவக் குணம் மிக்கதாகத் திகழ்கிறது. இந்தச் சாணத்தை நிலத்தில் படாமல், அருகம்புல்லின் மேல் விழ வைத்து, அந்த அருகம்புல்லுடன் அதனைத் தீயிலிட்டுத் திருநீறு போல் ஆக்கி, அதனைப் பூசி வந்தால் தீராத நோயும் தீரும் என மருத்துவ நூல்கள் கூறுகின்றன. திருநீறு உடலில் உள்ள நீர்த்தன்மையை உறிஞ்ச வல்லது. நம்மைச் சுற்றியுள்ள அதிர்வலைகளில் நமக்கு நன்மை பயக்ககூடிய நல்ல அதிர்வலைகளை மட்டுமே உள்வாங்கும் தன்மையுடையது. திருநீற்றை முக்குறியாக அணிகிறோம். ஏனென்றால் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன் று மலங்களை வேரோடு நீக்கினால் தான் நாம் முக்திக்கு தகுதி உடையவர் ஆகிறோம் என்பதை அக்குறி உணர்த்துகிறது.
சூலாயுதம்
மூன்று முனைகளைக் கொண்ட சூலாயுதம், சிவனின் இச்சா, கிரியா மற்றும் ஞான சக்தியை குறிக்கிறது. இச்சையினால் படைத்தலும், கிரியையால் காத்தலும், ஞானத்தினால் நன்மை பெறுதலும் ஆகும். இந்த ஆயுதம் வல்வினைகளை அழித்து நன்மை பயப்பவை.
கொன்றை மலர்
ஆண்டுக்கு ஒரு முறை மட்டும், கோடையின் துவக்கத்தில் மலரக்கூடியது கொன்றை மலர்கள். இதற்குச் சொர்ணபுஷ்பம் என்ற மற்றொரு பெயருமுண்டு. சரக்கொன்றை, சிறுகொன்றை, செங்கொன்றை, மஞ்சள்கொன்றை, மைக்கொன்றை, மயில்கொன்றை, புலிநகக்கொன்றை, பெருங்கொன்றை என பல வகையாக இருக்கும் கொன்றை, தமிழகத்தைப் பொறுத்தவரை காடும் காடு சார்ந்த பகுதியான முல்லை பகுதிக்கு உரிய மரம். மருத்துவ குணத்திலும் கொன்றை மரம் ஈடு இணையற்றது. சரக்கொன்றை சிறந்த நோய்க்கொல்லியாகிறது. கண் நோய்கள், மலச்சிக்கல், தோல் நோய்கள், சர்க்கரை நோய், சளி என்று பல்வேறு நோய்களை கட்டுபடுத்தப் பயன்படுகிறது. சிவன் கொன்றை மலர் தரித்தவனாக காட்சி தருகிறான்.
புலித்தோல்
புலி மிகுந்த ஊக்கமுடைய விலங்காகும். புலித்தோல் இயற்கையின் சக்தியைக் குறிக்கிறது. இது உலகி ன் ஆக்க சக்திகளுக்கு மூலமாகவும் இருக்கிறது. சிவன் புலித்தோலின் மேல் அமர்ந்திருப்பது, அவன் எல்லா சக்திகளுக்கும் அப்பாற்பட்டவர் என்பதை உணர்த்துகிறது.
உருத்திராக்க மாலை
உருத்திராக்கம் என்பது இமய மலையில் உண்டாகும் ஓர் மரத்தின் விதையாகும். இந்த உருத்திராக்கத்திற்கு மனித உடலில் ஏற்படும் பலவித நோய்களை நீக்கும் தன்மை இருக்கிறது. உருத்திராக்கம் மனித உடலின் அதிக வெப்பத்தை உறிஞ்சக்கூடியது. மனித உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது வயிற்றிலும் வாயிலும் புண் உருவாகிறது. பஞ்ச பூதங்களின் வெவ்வேறு விகிதச் சேர்க்கையே நவக்கிரகங்களாகும். இந்த நவகிரகங்களினால் உண்டாகும் பாதிப்புகளை குறைக்க உருத்திராக்கம் பெரிதும் உதவுகிறது.
பாயும் கங்கை
கங்கை நதி வளமையும் செல்வ செழிப்பையும் அளிக்கவல்லது. மானுட நல்வாழ்வுக்கு நல்ல ஞானம் மிக அவசியம். கிடைத்தற்கரிய இந்த ஞானம் காலத்தின் மாற்றத்தில் நலிந்துவிடாமல் தலைமுறை தலைமுறையாக ஊடுருவிச் செல்வது அவசியம். இந்த ஞானம் தலைமுறை கடந்து செல்வதையே கங்கை நதி உருவகிக்கிறது. இந்த ஞானம் எல்லா உயிரினங்களுக்கும் நல் வாழ்க்கையும், அமைதியையும் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
காதணி (தோடு)
சிவனின் இரண்டு காதுகளிலும் வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம். இடது காதில் கனிவாய் குழையும் தோடு வளையம். சிவன் உமையொ ரு பாகனாவான். உமையம்மையை தன்னுள் ஒரு பாகமாகக் கொண்டவன். பெண்கள் அணியும் தோடை அணிந்த இவனது இடது காது, இந்தத் தத்துவத்தை உணர்த்திக்கொண்டேயிருக்கும்.
காளை (விடை) வாகனம்
நந்திதேவர். நந்தி என்ற சொல்லுக்கு எப்பொதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்திதேவர் கருதப்படுகின்றார்.
செம்பொருள் ஆகமத்திறம் தெரிந்துநம் பவமறுத்த நந்திவானவர் எனும் செய்யுளிலிருந்து சிவாகமத்தைச் சிவபெருமானிடமிருந்து நேரடியாகத் தெளிந்து உலகத்தவர்களுக்கு அருளியவர் நந்திதேவரே என்பது தெளிவாகின்றது.
நந்தி தேவர் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற உபதேசத்தை இவரிடமிருந்து சனற் குமாரரும், சனற்குமாரரிடமிருந்து சத்தியஞான தரிசினிகளும், சத்தியஞான தரிசினிகளிடமிருந்து பரஞ்சோதியாரும், பரஞ்சோதியாரிடமிருந்து மெய்கண்டாரும் பெற்றனர்.
நந்தி வெண்மையாகிய தூய்மையும் ஆண்மையும் நிறைந்தது. இது தர்மத்தை குறிக்கிறது. தர்மமே இறைவனைத் தாங்கி நிற்கிறது. சிவபெருமானின் ஆணைக்கேற்ப கலியுகத்தில் ஒரு காலை மட்டும் தூக்கி நிற்கும். நந்தி சிவனிடம் பெற்ற வரத்திற்கேற்ப எல்லா கோவில்களிலும் சிவன் முன்னே அவரை நோக்கியபடியே இருக்கும். ஆன்மாக்களாகிய நாம் நம் கவனத்தை நந்தியைப் போல எப்போதுமே இறைவன் மீதே நோக்கியிருக்க வேண்டும் என்பதை உணர முடியும்.
.
கழுத்தில் பாம்பு
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும். பாம்பைச் செல்லப் பிராணியாக வளர்க்க முடியாது. என்ன தான் பால் ஊற்றி வளர்த்தாலு ம், சமயங்களில் வளர்த்தவனையே கடித்து விடும். விளைநிலங்களில் பயிர்களை நாசமாக்கும் எலிகளை பிடித்து உண்பதால் விவசாயிகளின் தோழனாகும். இவ்வாறு பல்வேறு குணமுடைய பாம்பு போன்ற விலங்களின் மீது இறைவனுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதை உணர்த்துகிறது.
இன்னுமொரு முக்கியமான தத்துவம்;
மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியாகிய சிவம் ஒரு அசைவற்ற பாம்பைப் போல உறங்கிக் கொண்டிருக்கிறது. இதை எழுப்பி முதுகுத்தண்டின் வழியே தலையில் இருக்கு ம் சக்தியோடு சிவம் சேரும் போது அளப்பரிய ஞானம் உண்டாகும். ஒருவனுக்கு எட்டு சித்திகளும் கிடைக்கும். இந்தத் தத்துவத்தை விளக்கவே குண்டலினி சக்தியாகிய பாம்பைத் தன் கழுத்தில் அணிந்திருப்பது தெளிவுபடுத்துகிறது.