ராகு, கேது பெயர்ச்சியின் போது, ஜாதகரீதியாக சில துன்பங்கள் வரும் நிலையில், துர்க்கை வழிபாடு செய்வது சிறப்பானது. துர்க்கை வழிபாட்டைக் கிழமைக்கேற்றவாறு, குறிப்பிட்ட நேரத்தில் கீழ்க்காணும் வழிமுறைப்படி செய்து பயனடையலாம்.
ஞாயிறு :
ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னதியில் மாலை 4.30 - 6.00 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.
சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கிச் செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.
திங்கள் :
திங்கள்கிழமை காலை 7.30 - 9. 00 மணிக்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண்பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும்.
இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும், வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும் என்பதும் நம்பிக்கை.
செவ்வாய் :
செவ்வாய்க்கிழமை ராகு கால நேரமான மாலை 3.00 - 4.30 மணிக்குள் வடக்கு முகமாகத் தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும்.
இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
புதன் :
புதன் கிழமை மதியம் 12 - 1.30 மணிக்குள் பஞ்சில் திரிசெய்து, விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும்.
இதனால் பதவி உயர்வு கிட்டும் என்பதும், ரத்த சம்பந்தமான நோய் தீரும் என்பதும் நம்பிக்கை.
வியாழன் :
வியாழக்கிழமை மதியம் 1.30 - 3 மணிக்குள் விளக்கேற்றி, எலுமிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும்.
இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
வெள்ளி :
வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரமான காலை 10.30 - 12.00 மணிக்குள் துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதைக் குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.
சனி :
சனிக்கிழமை காலை 9.00 -10.30 மணிக்குள் மஞ்சள்துணி திரியில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரகக் கோளாறு நீங்கும் என்பது நம்பிக்கை.