ஒவ்வொரு மாதமும் வரும் முழுநிலவு (பௌர்ணமி) நாளில் ஏதேனும் ஒரு விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழா நாட்களில் செய்யப்படும் வழிபாடுகளும் அவற்றால் கிடைக்கும் பலன்களும் என்னவென்பதை அறிந்து கொள்ளலாம்.
1. சித்திரை பௌர்ணமி
சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி சித்ரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. சித்திரை மாதத்தில், பொதுவாக சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறது. சித்திர குப்தனின் பிறந்த நாளாக இந்தப் பௌர்ணமி கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினம் விளக்கேற்றி வழிபாடு செய்ய நீடித்த ஆயுள் கிடைக்கும். மரண பயம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
2. வைகாசி பௌர்ணமி
வைகாசி மாதத்தில் வரும் பௌர்ணமி, பொதுவாக விசாக நட்சத்திரத்தில் வருகிறது. இன்றைய தினம் தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் பிறந்த தினமாகவும், புத்தர் பிறந்த தினமாகவும் கொண்டாடப்படுகின்றன.
வைகாசி பௌர்ணமியில் விளக்கு ஏற்றி வழிபட அறிவு மேம்படும். முருகனின் அருளால் ஞானம் கிடைக்கும்.
3. ஆனி பௌர்ணமி
ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி, பொதுவாக மூல நட்சத்திரத்தில் வருகிறது. ஆனி பௌர்ணமி அன்று இறைவனுக்கு முக்கனிகள் படைக்கப்படுகின்றன.
இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட வேண்டுதல்கள் எதுவாயினும் நிறைவேறும். சுமங்கலித்தன்மை நிலைத்திருக்கும். ஆனி பௌர்ணமி அன்று கண்ணனை நினைத்து விரதமிருக்கக் காதல் கைகூடும்.
4. ஆடி பௌர்ணமி
ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமியானது, பொதுவாக உத்திராட நட்சத்திரத்தில் வருகிறது. ஆடி பௌர்ணமி அன்று திருமாலை வழிபாடு செய்வது சிறப்பாகும்.
இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபடப் பதவி, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். குடும்பத்தில் வளர்ச்சியும், அமைதியும் கிடைக்கும். புண்ணியம் கிட்டும்.
5. ஆவணி பௌர்ணமி
ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமியானது, பொதுவாக அவிட்ட நட்சத்திரத்தில் வருகிறது. ஆவணி பௌர்ணமி அன்று ஓணமும், ரக்சாபந்தனும் கொண்டாடப்படுகின்றன.
இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபடக் கடன் தொல்லை தீரும். சகோதர வாழ்வு மேம்படும்.
6. புரட்டாசி பௌர்ணமி
புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமி, பொதுவாக உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வருகிறது. புரட்டாசி பௌர்ணமி அன்று உமாமகேஸ்வர வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
இன்றைய தினத்தில் அம்மையப்பர் வழிபாடு கடன் தொல்லையை நீக்கும். காரியத் தடைகள் விலகும். புரட்டாசி பௌர்ணமியில் விளக்கு ஏற்றி வழிபட அனைத்து நலன்களும் கிடைக்கும். நல்ல திருமணப்பேற்றினை நல்கும்.
7. ஐப்பசி பௌர்ணமி
ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி பொதுவாக அசுவனி நட்சத்திரத்தில் வரும். ஐப்பசி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு அன்னாபிசேகம் நடத்தப் பெறுகிறது.
இன்றைய தினத்தில் விளக்கு ஏற்றி வழிபட விருப்பங்கள் நிறைவேறும். வரங்கள் அதிகம் கிடைக்கும். எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
8. கார்த்திகை பௌர்ணமி
கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி, கார்த்திகை நட்சத்திரத்தில் வரும். அன்றைய தினத்தில் தான் இறைவன் ஒளி (ஜோதி) வடிவில் காட்சியளித்தார்.
ஆலயங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் தீபம் ஏற்றப்படுகிறது. இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட மனக்கவலைகள் நீங்கும். கண்நோய் தீரும். எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
9. மார்கழி பௌர்ணமி
மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி, பொதுவாகத் திருவாதிரை நட்சத்திரத்தில் வரும். இன்றைய தினத்தில் சிவபெருமான் ஆனந்த நடனமாடி நடராஜராக காட்சியருளிய நாள். அதனால் மார்கழி பௌர்ணமியன்று நடராஜருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றது.
இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட நம் குறைகள் நீங்கும். நோய்கள் குணமாகும். காரிய வெற்றி கிடைக்கும்.
10. தை பௌர்ணமி
தை மாதத்தில் வரும் பௌர்ணமி, பொதுவாக பூசம் நட்சத்திரத்தில் வருகிறது. இன்றைய தினத்தில் சிவன் மற்றும் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
இன்றைய தினத்தில் வழிபாடு மேற்கொள்ள பிறவிப் பயன் கடந்து முக்தி கிடைக்கும். தை பௌர்ணமியில் விளக்கேற்ற ஆயுள் விருத்தி கிடைக்கும்.
11. மாசி பௌர்ணமி
மாசி மாதத்தில் வரும் பௌர்ணமியானது, பொதுவாக மகம் நட்சத்திரத்தில் வருகிறது. இன்றைய தினத்தில் நீர்நிலைகளில் நீராடுவது சிறப்பானது. கும்பமேளா, மாசி மகம் போன்ற விழாக்கள் மாசி பௌர்ணமியில் கொண்டாடப்படுகின்றன.
இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட நற்கதி கிடைக்கும்.
12. பங்குனி பௌர்ணமி
பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமியானது, உத்திரம் நட்சத்திரத்தில் வருகிறது. அன்றைய தினத்தில்தான் பார்வதி - பரமேஸ்வரர், முருகன் - தெய்வயானை, ராமன் - சீதை உள்ளிட்ட தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றன.
எனவே பங்குனி பௌர்ணமி வழிபாடு நற்திருமணப் பேற்றினை அருளும். இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபாடு மேற்கொள்ள துன்பங்கள் துயரங்கள் நீங்கி நற்கதி கிடைக்கும்.