18 படிகளும் ஒரே கல்லினால் ஆனது எல்லாப் படிகளும் 9 அங்குல உயரமும் 5 அடி நீளமும் உடையதாகும். தேங்காய் உடைத்துப் படிகள் தேய்வதைத் தடுக்கும் பொருட்டு திருவாங்கூர் தேவஸ்தானம் 1985ம் ஆண்டு அக்டோபர் மாதம் பஞ்ச லோகத்தினால் (தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, ஈயம்) தகடு செய்து படிகளின் மேல் அமைத்துள்ளனர். தற்போது 2015 ல் மறுபடியும் தகடுகள் சிதிலமடைந்ததைத் தொடர்ந்து அக்டோபர் 2015 புதுக்கவசம் படிகளுக்குச் சாத்தப்பட்டது.
ஐயப்பன் பதினெட்டு படிகளுக்கான செய்திகளாகப் பல்வேறு தகவல் தெரிவிக்கப்படுகின்றன. அவைகளைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பதினெட்டுக் கருவிகள்
ஐயப்பன் தன்னுடைய 18 கருவிகளைக் கொண்டு 18 படிகளை உருவாக்கியதாகக் கூறுகின்றனர். அந்த 18 போர்க் கருவிகள் இங்கே...
1. வில்
2. வாள்
3. வேல்
4. கதை
5. அங்குசம்
6. பரசு
7. பிந்திபாவம்
8. பரிசை
9. குந்தம்
10. ஈட்டி
11. கை வாள்
12. முன்தடி
13. கடுத்தி வை
14. பாசம்
15. சக்கரம்
16. ஹலம்
17. மழு
18. முஸலம்
வாழ்க்கைக்குப் பதினெட்டு
இந்திரியங்கள் ஐந்து (5) - பஞ்சேந்திரியம் - கண், காது, மூக்கு, நாக்கு, கை கால்கள்
புலன்கள் ஐந்து (5) - ஐம்புலன்கள் - பார்த்தல், கேட்டல், சுவாசித்தல், ருசித்தல், ஸ்பரிசித்தல்
கோசங்கள் ஐந்து (5) - பஞ்ச கோசங்கள் - அன்னமய கோசம், ஆனந்தமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், ஞானமய கோசம்
குணங்கள் மூன்று (3) - த்ரி குணங்கள் - ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம்
எனும் இந்தப் பதினெட்டையும் கட்டுப்படுத்தியோ ஜெயித்தோ வாழப் பதினெட்டுப் படிகளை ஏற வேண்டும் என்று சொல்கின்றனர்.
பதினெட்டு குணங்கள்
1. மெய்
2. வாய்
3. கண்
4. காது
5. மூக்கு
6. சினம்
7. காமம்
8. பொய்
9. களவு
10. சூது
11. சுயநலம்
12. பிராமண
13. க்ஷத்திரிய
14. வைசிய
15. சூத்திர
16. ஸத்ய
17. தாமஸ
18. ராஜஸ
என்ற 18 வகை குணங்களைக் கடந்தால் பகவான் ஐயப்பனைக் காண முடியும்.
மலைத் தெய்வங்கள்
பதினெட்டு தெய்வங்கள் பதினெட்டு படிகளில் இருப்பதாகச் சொல்கின்றனர். அவை;
1. ஒன்றாம் திருப்படி - சூரிய பகவான்
2. இரண்டாம் திருப்படி - சிவன்
3. மூன்றாம் திருப்படி - சந்திர பகவான்
4. நான்காம் திருப்படி - பராசக்தி
5. ஐந்தாம் திருப்படி - அங்காரக பகவான்
6. ஆறாம் திருப்படி - முருகன்
7. ஏழாம் திருப்படி - புத பகவான்
8. எட்டாம் திருப்படி - விஷ்ணு
9. ஒன்பதாம் திருப்படி - வியாழ (குரு) பகவான்
10. பத்தாம் திருப்படி - பிரம்மா
11. பதினொராம் திருப்படி - சுக்கிர பகவான்
12. பனிரெண்டாம் திருப்படி - இலட்சுமி
13. பதிமூன்றாம் திருப்படி - சனி பகவான்
14. பதிநான்காம் திருப்படி - எம தர்ம ராஜன்
15. பதினைந்தாம் திருப்படி - இராகு பகவான்
16. பதினாறாம் திருப்படி - சரஸ்வதி
17. பதினேழாம் திருப்படி - கேது பகவான்
18. பதினெட்டாம் திருப்படி - விநாயகப் பெருமான்
(இங்கு ஒற்றைப்படை வரிசையில் நவக்கிரக தெய்வங்களும், இரட்டைப்படை வரிசையில் தெய்வங்களும் இருப்பதைக் கவனிக்கலாம்)
எனவேதான் சபரிமலையில் படிபூஜை சிறந்த முறையில் செய்யப்படுகிறது. படிபூஜை நடைபெறும் தினத்தன்று 18 படிகளையும், பூக்களாலும், விளக்குகளாலும் அலங்கரித்து அவற்றிற்குக் கீழே 18 படி ஏறுமிடத்தில் முதன்மை அர்ச்சர்கர் (பிரதான தந்திரி) 18 வெள்ளிக் கலசங்களை வைத்து படிபூஜை செய்கிறார். இப்பூஜையில் ஒவ்வொரு படியிலும் பீடபூஜையும், மூர்த்தி பூஜையும் நடத்துவார். பிறகு 18 படிகளுக்கும் கலசாபிஷேகம் நடைபெறும். தேங்காயை இரண்டாக உடைத்து அதன் மூடியில் நெய் ஊற்றி ஏற்றப்படும் நீராஞ்சன தீபம் காண்பிப்பார். படிபூஜைக்கு உபயோகப்படுத்தும் பொருட்கள் அனைத்தும் வெள்ளியால் செய்யப்பட்டவையாகும். 18 படிகளும் வெள்ளி மற்றும் பித்தளை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் நைவேத்தியம் காட்டிய பின் பிரசன்ன பூஜை செய்வார். பிறகு கற்பூரஜோதி ஏற்றித் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, சபரிமலை பிரதான தந்திரியும், மேல்சாந்தியும் மற்றும் சில பக்தர்களும் படியேறிச் செல்வார்கள் பிறகு சன்னிதானத்தில் ஐயப்பனுக்கு அரவணப் பாயசம் நைவேத்யம் செய்து தீபாராதனை காண்பிப்பார்கள்.
பதினெட்டு ஐயப்பன்
18 படிகளிலும் ஐயப்பன் 18 வகையான திருநாமங்களுடன் அமர்ந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவை;
1. ஒன்றாம் திருப்படி - குளத்துப்புழை பாலகன்
2. இரண்டாம் திருப்படி - ஆரியங்காவு ஐயன்
3. மூன்றாம் திருப்படி - எரிமேலி சாஸ்தா
4. நான்காம் திருப்படி - அச்சன்கோயில் அரசன்
5. ஐந்தாம் திருப்படி - புவனேஸ்வரன்
6. ஆறாம் திருப்படி - வீரமணிகண்டன்
7. ஏழாம் திருப்படி - பொன்னம்பல வாஸன்
8. எட்டாம் திருப்படி - மோஹினி பாலன்
9. ஒன்பதாம் திருப்படி - சிவ புத்ரன்
10. பத்தாம் திருப்படி - ஆனந்த சித்தன்
11. பதினொன்றாம் திருப்படி - இருமுடிப் பிரியன்
12. பன்னிரெண்டாம் திருப்படி - பந்தள ராஜகுமாரன்
13. பதின்மூன்றாம் திருப்படி - பம்பா வாஸன்
14. பதினான்காம் திருப்படி - வன்புலி வாஹனன்
15. பதினைந்தாம் திருப்படி - ஹரிஹர சுதன்
16. பதினாறாம் திருப்படி - ஸத்குரு நாதன்
17. பதினேழாம் திருப்படி - பிரம்மாண்ட நாயகன்
18. பதினெட்டாம் திருப்படி - ஸத்ய ஸ்வரூபன்
பதினெட்டு மலைகள்
பதினெட்டு படிகளில் பதினெட்டு மலை தேவதைகளை வழிபாடு செய்வதற்காகத்தான் படி பூஜை நடத்துகிறார்கள் என்றும் சிலர் சொல்கின்றனர்.
1. சபரி மலை
2. பொன்னம்பல மேடு
3 .கவுண்ட மலை
4. நாக மலை
5. சுந்தர மலை
6. சிற்றம்பல மேடு
7. கல்கி மலை
8. மாதங்க மலை
9. மயிலாடும் மலை
10. ஸ்ரீ மாத மலை
11. தேவர் மலை
12. நீலக்கல் மலை
13. தலப்பாறை மலை
14. நீலி மலை
15. கரி மலை
16. புதுச்சேரி
17. அப்பாச்சி மேடு
18. இஞ்சிப் பாறை
பதினெட்டு படிகள் - பலன்கள்
சபரிமலையில் 18 படிகளில் ஒவ்வொரு படியாக, ஐயப்ப பக்தர் அடி எடுத்து வைக்கும் பொழுது கர்மவினைகளை உண்டாக்கும் ஒவ்வொரு பழக்கமும் நம்மை விட்டு விலகுவதாக நம்பப்படுகிறது.
1 ஆம் படி - காமம்
2 ஆம் படி - குரோதம்
3 ஆம் படி - லோபம்
4 ஆம் படி - மோகம்
5 ஆம் படி - மதம்
6 ஆம் படி - மாச்சர்யம்
7 ஆம் படி - வீண்பெருமை
8 ஆம் படி - அலங்காரம்
9 ஆம் படி - பிறரை இழிவுபடுத்துதல்
10 ஆம் படி - பொறாமை
11 ஆம் படி - இல்லறப்பற்று
12 ஆம் படி - புத்திரபாசம்
13 ஆம் படி - பணத்தாசை
14 ஆம் படி - பிறவி வினை
15 ஆம் படி - செயல்வினை
16 ஆம் படி - பழக்கவினை
17 ஆம் படி- மனம்
18 ஆம் படி- புத்தி
இருமுடி இல்லாமல் பதினெட்டு படிகள் யார் ஏறலாம்?
சபரிமலையில் 18 படிகளில் ஏறிச் செல்ல இருமுடிக் கட்டுடன் வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இருமுடிக் கட்டு இல்லாமல் படியேறி வரச் சிலருக்கு மட்டும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.
1. பந்தள ராஜ குடும்பத்தினர்
2. தந்திரிகள்
3. மகர சங்கராந்தியன்று திருவாபரணப் பெட்டியை சுமந்து வரும் ராஜ பிரதிநிதி
4. திருவாபரணப் பெட்டியையும் தங்க அங்கியையும் வரவேற்கும் தேவஸ்தான உறுப்பினர்கள் (வரவேற்கும் சமயத்தில் இவர்கள் ஐயப்பன் அனுமதி பெற்று மாலையணிந்திருக்க வேண்டும்)
5. படிபூஜையின் போது மேல்சாந்தி / தந்திரி / கீழ்சாந்தி மற்றும் கட்டளைதாரர் 3 பேர்
6. பலிகளை அர்ப்பணிக்கும் குருக்கள்