விஷ்ணுவின் பத்து தோற்றங்களில் மூன்றாவது தோற்றம் வராகத் தோற்றம். வராகம் தென் மாநிலங்களில் விஷ்ணுவின் மூன்றாவது தோற்றமான வராக (பன்றி) தோற்றம் மனித உடலும், வராகம் (பன்றி) தலையும் கொண்டதாக இருக்கிறது. இத்தோற்றத்தில் விஷ்ணுவின் மனைவியான லட்சுமியை மடியில் அமர்த்தி, அணைத்தபடி காட்சி தருகிறார். ஆனால், வடமாநிலங்களில் இருக்கும் வராகமூர்த்தி சிலைகளில் மனித கால், கைகள் இல்லை. நான்கு கால்கள் கொண்ட வராக வடிவத்திலேயே விஷ்ணு இருக்கிறார்.
பிரளயத்தின் முடிவில், இருட்டில் மூழ்கிக் கிடந்த புவியை வராகத் தோற்றத்தில் விஷ்ணு உயர்த்தி வெளியில் கொண்டு வந்து சேர்த்தார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. வராகம் என்றால் என்ன? வர + அஹ = வராஹ. வர என்றால் மூடுபவர் என்றும், அஹ என்றால் எல்லை இல்லாததற்கு, எல்லை நிர்ணயித்தல் என்றும் பொருள். எனவே வராஹ என்றால் உருவற்ற ஒன்றுக்கு எல்லை காண்பவர் என்றும், அதற்கு உறை இடுபவர் என்றும் பொருள் கொள்ளலாம்.
வராகத் தோற்றத்திற்கு யஜ்ஞ வராகம் என்று ஒரு பெயர் சொல்லப்படுகிறது. பூமிதேவி வராகத்தைத் துதி செய்தாள். அதனால் மகிழ்ச்சி கொண்ட நாராயணன் பூமியைக் கடலிலிருந்து மீட்க என்ன வடிவம் கொள்ள வேண்டும் என்று எண்ணிப் பார்த்தார். கடைசியாக யஜ்ஞ வராக வடிவம் எடுக்கத் தீர்மானித்தார். அந்தச் சுலோகங்கள் வாயு, பிரம்மாண்ட, பத்ம, பிரம்ம, மச்ச புராணங்களில் உள்ளன. மேலும் விவரங்கள் விஷ்ணு புராணம், பாகவத புராணங்களிலும் காணலாம். ஆனால் வராக புராணத்தில் அவை இல்லை.
யஜ்ஞம் என்றால் உலகைத் தோற்றுவிக்கும் சிறந்த சக்தி உடைய எண்ணம். வராகம் = கலவரம், குழப்பங்களிலிருந்து உலகை உயர்த்தும் சக்தி. யஜ்ஞம் என்பது வேள்வி. அதாவது, யஜ்ஞத்தின் மூலத் தோற்ற சக்தியை வெளிப்படுத்த உதவும் ஒரு சமயச் சடங்கு. யஜ்ஞ வராகத்தை விவரிக்க முப்பத்தைந்து வகையான பெயர்கள் இருக்கின்றன. அவை;
1. வேத பாதம் - வராகத்தின் நான்கு பாதங்களும் நான்கு வேதங்கள்.
2. யுபதம்ஷ்ட்ரம் - வராகத்தின் இரண்டு தந்தங்கள். விலங்குகளைப் பலியிட உபயோகப்படுத்தும் மேடை போன்றது.
3. கிரது தந்தம் - ஒரு யஜ்ஞத்தில் செய்யப்பட வேண்டிய அறுபத்து நான்கு பலிகளைக் குறிப்பது கிரது. இவை போன்று வராகத்தின் பற்கள் உள்ளவை.
4. சிதி மூலம் - சிதி என்றால் அக்கினிமேடை (அ) பலிபீடம். வராகம் வாய் பிளத்தல் இதை போன்றதாகும்.
5. அக்கினி ஜிஹ்வ - வராகத்தின் நாக்கு அக்கினி போலுள்ளது.
6. தர்ப்பலோமம் - வராகத்தின் உடல் மீதுள்ள உரோமம் மேடை மீது பரப்பப்படும் தர்ப்பைப் புல் போன்றது.
7. பிரம்ம சீர்ஷம் - வராகத்தின் தலை பிரம்மாவைப் போல் உள்ளது.
8. அஹோர திரிக்ஷானாதாரம் - இரவும், பகலும் வராகத்தின் இரண்டு கண்கள் ஆகும்.
9. வேதாங்க ச்ருதி பூஷனம் - அறிவின் பிரிவுகளாகிய ஆறு வேதாங்கங்கள் வராகத்தின் காதணிகள் ஆகும்.
10. ஆஜ்யனசா - நாசித்துவாரங்கள் யாகத்தில் தெளிக்கப்படும் நெய் போன்றுள்ளன.
11. சிருவண் துண்டம் - நீண்டுள்ள மூக்கு யாகத்தில் நெய் ஊற்றப் பயன்படும் கரண்டி போன்றது.
12. சாம கோஷ வன - சாமவேதத்துதிகள் போல் வராகத்தின் குரல்.
13. சத்திய தர்மமாயா - வராகம் முழுவதும் தருமநெறியும், உண்மையும் கொண்டது.
14. கர்மவிகரம் சத்கிருத - புரோகிதர்கள் செய்யும் சடங்குகள் வராகத்தின் சக்தி வாய்ந்த அசைவுகளைப் பெற்றுள்ளன.
15. பிராயச்சித்த நகோகோர - தவத்தின் போது செய்ய வேண்டிய கடினமான சடங்குகளே வராகத்தின் பயங்கர நகங்கள் ஆகும்.
16. பாஷுஜனுரு - பலிகொடுத்த மிருகங்களின் உடைந்த உடல்கள், எலும்புகள் வராகத்தின் முழங்கால் மூட்டுகளுக்கு ஒப்பாகும்.
17. மகாகிரித் - வராகத்தின் தோற்றம் யாகம் அனையது.
18. உத்கத்ரந்தா - நீண்ட சாமச்ருதிகள் வராகத்தின் குடல் போன்றவை.
19. ஹோமாலிங்கா - வராகத்தின் இரகசிய உருப்புக்கு நெய் ஆஹுதி உவமானம்.
20. பிஜோஷதி மாஹாபலா - மூலிகைகள், வேர்கள் வராகத்தின் உற்பத்தி உறுப்பு போன்றவை.
21. வாய்வந்தரத்மா - வராகத்தின் ஆன்மாவுக்கு ஒப்புமை வாயு பகவான்.
22. யஜ்ஞ ஸ்விக்ருதி - யாகத்தில் கூறப்படும் மந்திரங்கள் வராகத்தின் எலும்புகளுக்கு உவமையாகும்.
23. சோமஷானிதா - வராகத்தின் ரத்தம் சோமபானம் போன்றது.
24. வேதிஸ்கந்தம் - வராகத்தின் அகன்ற புஜங்கள் பலிபீடம் ஒத்துள்ளன.
25. ஹவிர் கந்தம் - வராகத்தின் உடல் மணம், யாக நைவேத்தியத்தின் நறுமணம் ஆகும்.
26. ஹவ்யகவ்யதிவேகவனம் - வராகத்தின் அசைவுகளின் ஆர்வம், வேகம் அனையது யாகச் சடங்குகள்.
27. பிரக்வம்சகயம் - வராகத்தின் உடல், யாகசாலை அமைப்பில் குறுக்கு தூலம் போல் உள்ளது.
28. நாநாதிக்ஷ பிரன் விதம் - யாகத்தின் பூர்வாங்கப் பணிகள் வராகத்தின் ஆபரணங்கள் ஆகும்.
29. தக்ஷிணாஹ்ருதயம் - வராகத்தின் இதயம் யாக தக்ஷிணையாம்.
30. மகாசத்திரமாயம் - பெரிய யாகம் போன்றது வராகத்தின் உருவம்.
31. உபாகர்மாமாச்தருசகம் - யாகத்தின் போது படிக்கப்படும் வேதம் வராகத்தின் உதடுகள் போன்றது.
32. பிரவர்க்ய வர்த்த பூஷனம் - பிரவர்க என்பது பெரிய பால் பானை. அதனுள் சூடான வெண்ணெய் ஊற்ற அதிலிருந்து மேலே தீப்பிழம்புகள் எழும். வராகத்தின் மார்பில் உள்ள வளைவுகள் தீப்பிழம்புகள் போல் உள்ளன.
33. நானாசந்தோகதிபதம் - வராகத்தின் பலவித அசைவுகள் மந்திரத்தின் வெவ்வேறு சீர்ப்பிரமாணங்களை ஒக்கும்.
34. குஹ்யோபணிஷடசனம் - உபநிஷத்துகளைக் கற்றறிந்தார் மட்டுமே பங்கு கொள்ளும் விவாதம் போன்றது வராகத்தின் சரீரநிலை.
35. சாயாபத்னிஸஹாயோ - சூரியனை ஒத்துள்ளது வராகம். ஓரியன் (அ) கால புருஷ நட்சத்திரக் கூட்டத்தில் அமைப்பு தேவலோக வராகம் போல் காட்சி அளிக்கின்றது.