மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி நாள் மகா சிவராத்திரியாகக் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகா சிவ ராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு இறைவனின் அருட்பார்வை கிடைப்பதுடன் பல்வேறு நற்பலன்களையும் பெறமுடியும்.
சிவராத்திரி மேன்மை
சிவராத்திரி விரதத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதை இது.
வேடுவன் ஒருவன் வேட்டைக்குச் சென்றான். அன்று, அவனுக்கு எந்த மிருகமும் சிக்கவில்லை. பகல் பொழுது கழிந்து, இரவு வேளை நெருங்கி விட்டது. வீட்டுக்கு வெறுங்கையோடு திரும்பிப் போனால், குடும்பத்தினர் சாப்பிடுவதற்கு ஏதுமிருக்காதே என்று கவலைப்பட்ட அவன், ஏதேனும் மிருகம் சிக்கும் வரை காட்டிலேயே இருக்கலாமென்று முடிவெடுத்தான். அதனால், ஒரு மரத்தின் மீதேறி, விடிய விடியக் கண்விழித்து அமர்ந்திருந்தான். அவனது குடுவையில் சிறிது தண்ணீர் இருந்தது. அவனது அசைவில், அவ்வப்போது சிறிது கீழே கொட்டியது. அவன் அமர்ந்திருந்த மரத்தின் இலைகளும் கீழே உதிர்ந்து விழுந்தன.
விடிந்து விட்டது. மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம்.
அதன் மேல், குடுவையில் இருந்து கொட்டிய நீர் வழிந்திருந்தது. அவன் அமர்ந்திருந்த வில்வமரத்தின் இலைகள், லிங்கத்தின் முன் விழுந்து கிடந்தது. அந்த வேடன் மரத்தில் அமர்ந்திருந்த நாள் சிவராத்திரி என்பதால், தற்செயலாக நிகழ்ந்த அந்த நிகழ்வைக் கூட, தனக்கு நடந்த அபிஷேகமாகவும், பூசையாகவும் இறைவன் ஏற்றுக் கொண்டார். மறுபிறவியில், குகன் என்னும், வேடுவ குலமன்னனாக பிறந்து புகழ் பெற்றான். அதனால் தான், சிவராத்திரியன்று கண்விழித்து, வில்வ இலை தூவி, அபிஷேகம் செய்து சிவனை வழிபட்டால், அனைத்து வளங்களையும் அடையலாம் என்கின்றனர்.
சிவராத்திரி விரதம்
சிவராத்திரி அன்று, அதிகாலையில் நீராடி, சிவன் கோவிலுக்குச் சென்று. 'நமசிவாய' அல்லது 'சிவாயநம' என, பஞ்சாட்சர மந்திரங்களைச் சொல்ல வேண்டும். பகலில் சாப்பிடக்கூடாது. நோயாளிகள், முடியாதவர்கள் எளிய உணவு எடுத்துக் கொள்ளலாம். மாலையில், சிவாலயத்திற்கு வில்வ இலை கொண்டு செல்வதுடன், இரவு மற்றும் கடைசி கால பூசை வரை, அபிஷேகம் பார்க்க வேண்டும். மறுநாள் காலையில், அன்னதானம் செய்த பின், சாப்பிட்டு, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
பலன்கள்
* சிவனுக்குப் பல வடிவங்கள் உண்டு. நமக்கு என்ன பலன் தேவையோ, அதற்கேற்ற வடிவத்தில் வழிபட்டுப் பலன் பெறலாம். சாந்தமே உருவான தட்சிணாமூர்த்தியாக வழிபடுபவர்கள், மனஅமைதியும், ஞானமும் பெறுவர்.
* சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நீங்கிப் போகும்.
* மகா சிவராத்திரி நாளில் இரவெல்லாம் கண் விழித்து, சிவபெருமானை வழிபட வேண்டும். இதனால் இறைவன் அருள் கிடைப்பதோடு நினைத்த காரியம் நடக்கும் என்பது முன்னோர்கள் வாக்கு.
* ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
* இந்த நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.