வேள்விகள் நடைபெறும் போது, பலவிதக் குச்சிகளை (சமித்து) நெருப்பில் (அக்னியில்) போட்டு மந்திரங்களைச் சொல்லி வேண்டுதல் நடைபெறும். அப்படி வேள்விக்கான நெருப்புக்குண்டத்தில் போடப்படும் ஒவ்வொரு குச்சிகளுக்கும் தனித்தனிப் பலன் உண்டு. வேள்வியில் போடப்படும் சில பொருட்களுக்கும் தனிப்பலன்கள் உண்டு.
வில்வம்
சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது. வில்வக் குச்சியினைக் கொண்டு வேள்வி செய்தால் ராஜயோகம் கிடைக்கும். வில்வப்பழ வேள்வியால் சக்தி மற்றும் செல்வங்களைப் பெறலாம். சிவசக்தி தொடர்பான சண்டி வேள்வி போன்ற வேள்விகளில் வில்வம் குச்சியினைப் பயன்படுத்தினால் நிறைய பலன்கள் உண்டு.
துளசி
நாராயணனுக்குப் பிடித்தது. துளசிக் குச்சியினால் வேள்வி செய்தால் நீண்ட காலமாகத் திருமணம் ஆகாதவர்களுக்கும் திருமணம் கைகூடி நடைபெறும். எண்ணிய செயல்கள் அனைத்தும் நடைபெறும்.
அத்தி
சுக்கிரனுக்குப் பிடித்தது. பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும். பில்லி, சூனியம், பிசாசு பயங்களிலிருந்து விடுவித்து சத்ருக்களை வெல்லும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும் ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும். மக்கட்பேறு கிடைக்கும்.
நாயுருவி
புதனுக்குப் பிடித்தது. இது புதுக் கிரகக் குச்சியாகும். இதனால் லட்சுமி அருள் கிடைக்கும். சுதர்சன வேள்விக்கு இதுவேச் சிறந்தது.
பலா
சந்திரனுக்குப் பிடித்தது. பலாசு புஷ்பத்தால் விரும்பிய அனைத்துச் செயல்களும், பலாசு ரசத்தால் அறிவு வளர்ச்சியும், சிறந்த புத்தியும் பெறலாம். பலாசுக் குச்சிகளைக் கொண்டு அக்னி வேள்வி செய்தால் பிரம்ம ஞானம் அடைந்து பரப்பிரம்ம சொரூபம் அடையலாம்.
அரசு
குருவிற்குப் பிடித்தது. அரச மரத்தின் சமித்தால் தலைமைப் பதவி வரும். போரில் வெற்றி அடைந்து அரச தன்மை கிடைக்கும்.
வன்னி
சனீஸ்வரனுக்குப் பிடித்தது. இதில் அக்னிப் பகவான் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. வன்னிக் குட்டி வேள்வியில் கிடைத்த சாம்பலை பூசிக்கொண்டால், அது நெற்றியில் எழுதியிருக்கும் எமன் தொடர்பான எழுத்தைத் தொலைத்து விடும். இந்தக் குச்சியின் சாம்பல் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் மூவுலகினையும் மூன்று அக்னிகளையும் முக்குணங்களையும் குறிப்பதாக இருக்கிறது. அனைத்துத் தெய்வ, தேவாதிகளும் இக்குச்சியினால் மகிழ்ச்சி அடைகிறார்கள். பூகம்பங்களால் உண்டாகிற பயங்கள் நீங்கும். சகல தோசங்களும் சரியாகிவிடும்.
ஆல்
இது ம்ருத்யஞ்சய வேள்வியின் முக்கியக் குச்சி. எமனுக்குப் பிடித்தமானது. இதனால் நோய்கள் நீங்கும். ஆயுள் நீடிக்கும்.
மா
சர்வமங்களங்களையும் சித்திக்கும்.
புங்கம்
இதன் சமித்து வெற்றியைத் தரும்.
செம்மரம்
இது அங்காரக கிரகக் குச்சியாகும். இதனால் ரண ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும்.
சந்தனம்
இதன் குச்சியால் வேள்வி செய்தால் மூதேவி முதலிய சகல பீடைகளையும் விலக்கி, லட்சுமி அருள் கிடைக்கும். அனைத்து வசதிகளுடனும் வாழ்வர்.
வேங்கை
இந்தக் குச்சியினால் வேள்வி செய்தால் பில்லி சூன்யம், ஏவல், பிசாசு, பயம் அகலும்.
மகிழம்
இந்தக் குச்சியினால் வேள்வி செய்தால் அனைத்துத் துன்பங்களும் தீர்ந்து, மனம் அமைதி பெறும்.
பூவரசு
இந்தக் குச்சி பூலோக அரச மரம் என்று வழங்கப்படுகிறது. அரசு குச்சி இல்லாதக் குறையைப் போக்கி விடும்.
பாலுள்ள மரத்தின் குச்சிகள்
வியாதி நாசினி.
மாதுளை
அழகான வடிவமும்,வசீகரமும் கிடைக்கும்.
இலந்தை
இந்தக் குச்சியினால் வேள்வி செய்யக் குடும்பம் இனிதாக வாழ வழி உண்டாகும்.
தேவதாரு
இந்தக் குச்சியினால் வேள்வி செய்தால் அனைத்துத் தெய்வங்களும் வேண்டிய வரங்களைக் கொடுப்பார்கள்.
வெள்ளை எருக்கு
இது சூரிய கிரகத்தின் குச்சியாகும். இம்மூலிகை சர்வசக்தி பொருந்தியது. வசியம், மோகனம் ஆகிய அஷ்டாமித்துகளையும் அடையலாம். இக்குச்சிகளால் ராஜ வசியம், ஸ்திரீ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம் ஆக சர்வ வசியங்களையும் அடையலாம். எடுத்த வேலை இனிதே முடியும்.
சோமவல்லிக் கொடி
கொடிக்கள்ளி எனப்படும் இதன் ரசத்தைப் பிழிந்து ’சோமாம்ருதம்’ ம்ருத்யுஜய மந்திரத்தினால் வேள்வி செய்தால் சகல நோய்களும் நீங்கி, தேகத்தில் அமிர்தம் உண்டாகி பிரம்மதேஜஸ் பெறலாம். கொடியை கணுக்கள் தோறும் ஒடித்துப் பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னியிடம் இட வேண்டும். இதனால் காச நோய் அகலும்.
வல்லாரைக் கொடி
இக்கொடியின் குச்சிகளைப் பயன்படுத்தினால், கல்வி சிறப்பாக அமையும். நினைவுத்திறன் அதிகரிக்கும் சரஸ்வதி அருள் கிடைக்கும்.
தர்ப்பை
கேது பகவானுக்கு தர்ப்பை குச்சி மிகவும் பிடித்தமானதாகும். இது அறிவு விருத்தியைத் தரும்.
அருகம் புல்
விநாயகருக்கும் ராகுவுக்கும் பிடித்தது. இதனால் முந்தைய பிறப்பு வினைகளும், அனைத்து இடையூறுகளும் நீங்கிச் செயல்கள் வெற்றியடையும். வெற்றியும் புகழும் பெறலாம். அறிவும், அழகும், வசீகரமும் உண்டாகும். கணபதி வேள்வியில் இதைப் பயன்படுத்துகின்றனர். விஷபயம் நீங்கும்.
கரும்பு
கரும்புத் துண்டுகளையாவது அல்லது கருப்பஞ்சாறையாவது கொண்டு வேள்வி செய்தால் வரனுக்கு விரும்பிய கன்னிகையும், கன்னிகைக்கு விரும்பிய வரனும் கிடைப்பர். இதையும் கணபதி வேள்வியில் பயன்படுத்துவர்.
தாமரை மலர்
லட்சுமிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது.
எள்
வேள்வியில் எள் போட்டுச் செய்ய முந்தைய பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கும். தீராத கடன் தொல்லை தீரும்.
நவதானியங்கள்
அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக வேள்வி செய்தால் கிரக தோசங்கள் விலகும். மகிழ்ச்சி நிலவும்.
மஞ்சள்
முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா வேள்விக்குச் சிறந்தது. அனைத்து நோய்களையும் நீக்கும். அதோடு கல்வியும், செல்வமும் தரும்.