1. தனலட்சுமி
நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.
2. வித்யாலட்சுமி
எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால், நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் வித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.
3. தான்யலட்சுமி
ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து தான்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.
4. வரலட்சுமி
உடல் பலம் மட்டும் வீரமாகாது, மனதில் உறுதி வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும், நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் வரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.
5. சவுபாக்யலட்சுமி
ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மறற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்தால் சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.
6. சந்தானலட்சுமி
எல்லாக் குழந்தைகளையும் தன் குழந்தையாகப் பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண்டும். தாயன்புடன் சந்தான லட்சுமியை வழிபட்டால் பலன் உண்டு.
7. காருண்யலட்சுமி
எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர்வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை, ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால் காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.
8. மகாலட்சுமி
நாம் நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். என்றுமே நம் உள்ளத்தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால், நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் மகாலட்சுமி நம்மைப் பிறருக்குக் கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.
9. சக்திலட்சுமி
எந்த வேலையும் என்னால் முடி யாது என்ற சொல்லாமல், எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் சக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.
10. சாந்தி லட்சுமி
நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களைச் சமமாகப் பாவித்து வாழப் பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். சாந்தி லட்சுமியை தியானம் செய்தால் எப்பொழுதும் மன அமைதியுடன் வாழலாம்.
11. சாயாலட்சுமி
நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போலக் கடமையைச் செய்து, பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் சாய்ந்து சாயாலட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.
12. த்ருஷ்ணாலட்சுமி
எப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் த்ருஷ்ணாலட்சுமியைத் வணங்கி நலம் அடையலாம்.
13. சாந்தலட்சுமி
பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.
14. கிருத்திலட்சுமி
நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் கீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
15. விஜயலட்சுமி
விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். விஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.
16. ஆரோக்கிய லட்சுமி
நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும்.