காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளின் ஆதி மூர்த்தம்தான் அத்தி வரதர். தற்போது நாம் கருவறையில் தரிசிப்பது வரதராஜப் பெருமாள் என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் அவர் பழைய சீவரம் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட தேவராஜப் பெருமாள். இந்தக் கோயிலின் ஆதி மூர்த்தியான அத்தி வரதர் பிரம்மதேவரால் உருவாக்கப்பட்டவர் என்றும், அத்தி வரதர் திருக்குளத்தில் இருப்பதுடன், 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளியில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். அத்தி வரதர் எதற்காகக் குளத்தினுள் இருக்கிறார்? அவர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியில் வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பது ஏன்? என்று தெரியுமா?
பிரம்மதேவர், தனது படைப்புத் தொழில் சிறப்பாக நடைபெற வேண்டுமென்பதற்காகக் காஞ்சியில் ஒரு யாகம் செய்யத் தொடங்கினார். தன்னை அழைக்காமல் யாகம் செய்த பிரம்மதேவரிடம் கோபம் கொண்ட சரஸ்வதி தேவி, யாகத்துக்கு வரவில்லை. சரஸ்வதி தேவி இல்லாமல் பிரம்மதேவரால் யாகத்தை முழுமையாகச் செய்ய முடியாது. எனவே, பிரம்ம தேவர் சரஸ்வதி தேவிக்குப் பதிலாக காயத்ரி, சாவித்திரி ஆகியோரின் துணையுடன் யாகத்தைத் தொடங்கினார். அதனைக் கண்டு கோபம் கொண்ட சரஸ்வதி தேவி, பிரம்மதேவரின் யாகசாலையை அழிக்கும் நோக்கத்தில் வேகவதி எனும் ஆறாக மாறி வெள்ளப் பெருக்கெடுத்து வந்தாள். பிரம்மதேவரின் யாகத்தைக் காக்க நினைத்த திருமால், நதிக்கு நடுவில் சயனக் கோலம் கொண்டார். அதனால், வெட்கிய சரஸ்வதி தேவி தன் பாதையை மாற்றிக் கொண்டு திரும்பினாள். பிரம்மதேவரின் யாகமும் நிறைவு பெற்றது. தனக்காக வந்து யாகத்தைக் காத்த பெருமாளின் கருணையை எண்ணி நெகிழ்ந்த பிரம்மதேவர், அவரை வணங்கினார். தேவர்களும் அவரை வணங்கி வரங்களைக் கேட்டனர். அவர்கள் விரும்பிய எல்லா வரங்களையும் திருமால் கொடுத்ததால், அவருக்கு `வரதர்' என்ற திருப்பெயர் கொண்டார்.
திருமால் தனக்கு உதவி செய்ததால் மகிழ்ச்சி அடைந்திருந்த பிரம்மா, அவருக்கு ஒரு சிலை செய்ய முடிவு செய்தார். அந்த சிலை எப்படி அமைய வேண்டும் என்று அவரிடமே விளக்கமும் கேட்டார்.
உடனே அவர், சங்கு, சக்கரம், கதை தாங்கிய திருக்கோலத்தில் காட்சி அளித்தார். தேவர்கள் அனைவருக்கும் புண்ணியகோடி விமானத்தில் சங்கு, சக்கரம், கதை தாங்கிய திருக்கோலத்தில் காட்சி தந்தார். அந்நாள், சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் அமைந்தது. எனவே, அதே நாளில் பிரம்மதேவர், தனக்குத் தரிசனம் தந்த பெருமாளின் திருவடிவத்தை அத்தி மரத்தில் வடித்து வழிபட்டார். இப்படித்தான் அத்தி வரதர் மண்ணுலகில் எழுந்தருளினார். பிரம்மதேவரால் உருவான அத்திமர வரதராஜரைத் தேவலோக யானையான ஐராவதம் தனது முதுகில் சுமந்தது. பின்னர் ஐராவதம் சிறு குன்றாக உருமாறி அத்தி (யானை) கிரி, வேழமலை என்று பெயர் பெற்றது. அத்திகிரியில் எழுந்தருளிய பெருமாள் ஞானியர்களுக்கும் தேவர்களுக்கும் வேண்டும் வரங்களை வேண்டியபடியே அருள்புரிந்து வந்தார்.
பின்னர் ஒருமுறை பிரம்மதேவர் அத்தி வரதரை முன் வைத்து ஒரு யாகம் செய்தார். யாகத் தீயின் காரணமாக அத்தி வரதர் பின்னப்பட்டுவிட்டார். பிரம்மதேவர் பதறிப் போனார். வேறு எந்த வடிவத்திலும் பெருமாளை உருவாக்க முடியாத சூழலில், பிரம்மா திருமாலை வேண்டினார். அவருடைய ஆலோசனையின்படி, அத்தி வரதரை, கோயிலிலுள்ள நூற்றுக் கால் மண்டபத்துக்கு வடக்கிலுள்ள இரண்டு திருக்குளங்களில் தென் திசையிலுள்ள நீராழி மண்டபத்துக்குக் கீழே உள்ள மற்றொரு மண்டபத்தில் வெள்ளிப் பேழையில் சயனக் கோலத்தில் வைத்தார். யாகத்தீயில் வெப்பமான பெருமான், கலியுகம் முழுக்க இந்த அமிர்தசரஸ் எனும் ஆனந்த புஷ்கரணி திருக்குளத்தில் குளிர்ந்த நிலையில் இருப்பார் என்றும், இதனால் எந்தக் காலத்திலும் இந்தத் திருக்குளம் வற்றாது என்றும் பிரம்மதேவருக்குச் சொல்லப்பட்டது. அத்தி வரதர் திருக்குளத்துக்கு அடியே சென்றதும், பழைய சீவரம் என்ற ஊரில் இருந்த தேவராஜப் பெருமாள் அத்திகிரிக்கு கொண்டு வரப்பட்டார்.
ஆதியில் தோன்றிய அத்தி வரதர் நீருக்கடியில் நீண்ட உறக்கத்தில் இருப்பார். பிரம்மதேவருக்குத் திருமால் இட்ட கட்டளையிட்டபடி, 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்து நீரை எல்லாம் இறைத்து விட்டு மேலே கொண்டு வரப்படுகிறார். பின்னர் படுக்கை (சயனம்) நிலையில் 24 நாட்கள் மற்றும் நின்ற நிலையில் 24 நாட்கள் என்று மொத்தம் 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்நிலையில் அவர் பக்தர்கள் வேண்டியதை வழங்குவார் என்கிற நம்பிக்கை பக்தர்களிடையே இருக்கிறது. வாழ்வில் ஒருமுறையேனும் இவரை தரிசிப்பது மோட்சத்தை அளிக்கும் என்பார்கள். இரண்டாவது முறை யாரேனும் தரிசித்தால் வைகுந்த பதவி பெறுவார்கள் என்பதும் தொன்ம நம்பிக்கை. மூன்று முறை தரிசித்தவர்கள் மகா பாக்கியவான்கள் என்கின்றனர். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறையே இவரைத் தரிசிக்க முடியும் என்பதால், பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும்.