கோவிலில் ஏற்றப்படும் தீபத்திற்குத் தனிச்சிறப்பு உண்டு. நம் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவங்கள் கூட கோவிலில் தீபம் ஏற்றுவதாலும், தீபத்தைத் தரிசிப்பதாலும் விலகி விடும். அதனால், திருக்கார்த்திகை அன்று கோவில்களில் தீபஸ்தம்பம், அணையாதீபம், லட்சதீபம், கோடி தீபம் என்று பல பெயர்களில் தீபம் ஏற்றி வைக்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. கோவில் முன் சொக்கப்பனை கொளுத்துவதுமுண்டு. இதன் மூலம் சிவனையும், முருகனையும் அக்னி வடிவமாக வழிபடுகின்றனர்.
திருவண்ணாமலையில் கார்த்திகை
கார்த்திகைத் திருநாள் திருவண்ணாமலையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பஞ்ச பூதங்களில் நெருப்புக்குரிய தலமாகத் திகழ்வது திருவண்ணாமலை. கார்த்திகை தினத்தன்று தமிழகத்தின் வீடுகள் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். எங்கெங்கு காணினும் விளக்குதான். விளக்கின் ஒளி புற இருளைப் போக்கும். ஈசனின் நினைவு அக இருளைப் போக்கும். கார்த்திகை தினத்தன்று மாலை அகல் விளக்குகளுக்கு குங்குமப் பொட்டு வைக்கப்பட்டு, அதில் எண்ணெய் ஊற்றி, பஞ்சாலோ, திரியாலோ ஆன திரியைப் போட்டு பூஜை செய்து, விளக்கு ஏற்றப்பட்டு வீட்டின் அறைகளிலும், ஜன்னல்களிலும், வாசலிலும் ஏற்றி வைக்கப்படும். அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் விளக்குகள் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். இரவைப் பகலாக்கும் இந்தத் தீபத் திருநாள் மூன்று நாட்கள் கொண்டாடுப்படுகின்றன.
கார்த்திகை விளக்கின் தத்துவம்
எண்ணெய் கரைகிறது, திரி கருகுகிறது. ஆம்… தீபம் என்பது தன்னை கரைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு ஒளி வழங்குகிறது. பிறர் நலம் பேணுவதற்காகத் தன் உயிரையேத் தியாகம் செய்ய வேண்டும் என்பது கார்த்திகை தீபத் தத்துவம்.
தீபம் ஏற்றும் முறை
திருக்கார்த்திகைத் திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்குத் திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்குத் திசை நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும். எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.
தீபத்திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றவேண்டும். வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது. கார்த்திகைத் திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாகப் படைத்தால் சிவனருள் கிடைக்கும்.
ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்.
இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்.
மூன்று முகம் ஏற்றினால் – புத்திர தோஷம் நீங்கும்.
நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்.
ஐந்து முகம் ஏற்றினால் – சகல நன்மைகளும் உண்டாகும்.
இத்தனை சிறப்பு வாய்ந்த திருக்கார்த்திகை நன்னாளில் விளக்கேற்றி... வாழ்வில் வளம் பெறுவோம்...