தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும், “தீபலட்சுமியே நமோ நம” என்று கூறி வணங்குவது அவசியம் என்கின்றனர்.
தீபத்திலும் பல வகைகள் இருக்கின்றன. அவை;
சித்ர தீபம் - வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன் மீது ஏற்றப்படும் தீபம் சித்ர தீபம் ஆகும்.
மாலா தீபம் - அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபம் ஆகும்.
ஆகாச தீபம் - வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றி வைக்கப்படும் தீபம் ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதி நாளில் இந்தத் தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.
ஜல தீபம் - தீபத்தை ஏற்றி நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபம் ஜல தீபம் ஆகும்.
படகு தீபம் - நதியில் மாலை வேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றி வைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் மிதக்கவிடுவதற்கு பெயர் படகு தீபம் ஆகும். கங்கையில் இத்தீபம் அதிக அளவில் ஏற்றப்படுகின்றன.
சர்வ தீபம் - வீட்டின் அனைத்துப் பாகங்களிலும் வரிசையாக ஏற்றி வைக்கப்படுபவை சர்வ தீபமாகும்.
மோட்ச தீபம் - முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோயில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம் மோட்ச தீபம் ஆகும்.
சர்வாலய தீபம் - கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலை வேளையில் சிவன் கோயில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபமாகும்.
அகண்ட தீபம் - மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம் ஆகும்.
லட்ச தீபம் - ஒரு லட்சம் விளக்குகளால் கோயிலை அலங்கரிப்பது லட்சதீபமாகும்.
மாவிளக்கு தீபம் - அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றித் திரிபோட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம் ஆகும்.