1. தினசரி பிரதோஷம் :
* தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும்.
** இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது சிறப்புக்குரியதாகும். நித்தியப்பிரதோஷத்தை ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறவர்களுக்கு முக்தி கிடைக்கும்.
2. பட்சப் பிரதோஷம் :
* அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் "திரயோதசி'' திதியே பட்சப் பிரதோஷம் ஆகும்.
** இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு செய்வது சிறப்புடையதாகும். குறிப்பாகஅன்னை பார்வதிதேவி மயில் உருவாய் ஈசனை வழிபட்ட தலமாகிய மயிலாப்பூர் கபாலீஸ்வரரை வழிபடுவது சிறப்பாகும். நற்பலன்களைப் பெற முடியும்.
3. மாதப் பிரதோஷம் :
* பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் "திர யோதசி'' திதியே மாதப் பிரதோஷம் ஆகும்.
** இந்த திதியின் மாலை நேரத்தில் பாணலிங்க வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும்.
4. நட்சத்திரப் பிரதோஷம் :
* பிரதோஷ திதியாகிய திரயோதசி திதியில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய சிவபெருமானைப் பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திரப் பிரதோஷம் ஆகும்.
** இவ்வழிபாட்டில் கலந்து கொள்பவர்களுக்குப் பல்வேறு சிறப்புகள் கிடைக்கும்.
5. பூரண பிரதோஷம் :
* திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும்.
** இந்தப் பிரதோஷத்தின் போது, சுயம்பு லிங்கத்தைத் தரிசனம் செய்வது சிறந்த பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.
6. திவ்யப்பிரதோஷம் :
* பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது திவ்யப் பிரதோஷம் ஆகும்.
** இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் முன்ஜென்ம வினை முழுவதும் நீங்கும்.
7. தீபப் பிரதோஷம் :
* பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட வேண்டும்.
** இப்படிச் செய்பவர்களுக்குச் சொந்த வீடு அமையும்.
8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :
* வானத்தில் "வ'' வடிவில் தெரியும் நடத்திரக் கூட்டங்களைச் சப்தரிஷி மண்டலம் என்கின்றனர். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும்.
** இந்த வழிபாட்டைச் செய்பவர்களுக்கும் சிவபெருமான் அருள் முழுமையாகக் கிடைக்கும்.
9. மகாப் பிரதோஷம் :
* சிவபெருமான் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் மகாப் பிரதோஷம் ஆகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும் மகா பிரதோஷம் எனப்படும்.
** இந்த மகாப் பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் சிறப்புடையதாகும்.
10. உத்தம மகா பிரதோஷம் :
* சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும்.
** இப்பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபட்டால், வெற்றியும், அதன் மூலம் சிறப்பும் கிடைக்கும்.
11. ஏகாட்சர பிரதோஷம் :
* வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை ஏகாட்சர பிரதோஷம் என்பர்.
** இந்நாளில் சிவாலயம் சென்று, `ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை சொல்லி வழிபட முடியுமோ, அத்தனை முறை சொல்லி வழிபடலாம். அதன் பிறகு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல்வேறு நன்மைகள் ஏற்படும்.
12. அர்த்தநாரி பிரதோஷம் :
* வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர்.
** அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர்வார்கள்.
13. திரிகரண பிரதோஷம் :
* வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம்.
* இப்பிரதோசத்தை முறையாகக் கடைப்பிடித்து சிவபெருமானை வழிபடுவதால் அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும்.
14. பிரம்மப் பிரதோஷம் :
* ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம் எனப்படும்.
** பிரம்மாவுக்கு ஏற்பட்ட சாபம் நீங்குவதற்காக அவர் ஒரு வருடத்தில் நான்கு முறை சனிக்கிழமையும், திரயோதசியும் வரும் போது முறையாக பிரதோஷ வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றார். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.
15. அட்சரப் பிரதோஷம் :
* வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம் ஆகும்.
** தாருகா வனத்து ரிஷிகள். `நான்' என்ற அகந்தையில் சிவபெருமானை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.
16. கந்தப் பிரதோஷம் :
* சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம் எனப்படும்.
** இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவபெருமான் அருளுடன் முருகப்பெருமான் அருளும் சேர்ந்து கிடைக்கும்.
17. சட்ஜ பிரபா பிரதோஷம் :
* ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்' எனப்படும்.
** தேவகியும் வாசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் கடைப்பிடித்ததால், அவர்களுக்கு எட்டாவது குழந்தையாகக் கிருஷ்ணர் பிறந்தார் என்பர். இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.
18. அஷ்டதிக் பிரதோஷம் :
* ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடிப்பிடித்து சிவபெருமானை வழிபடுவது அஷ்ட திக் பிரதோஷம் எனப்படும்.
** இப்பிரதோஷம் கடைப்பிடிப்பவர்களுக்கு அஷ்ட திக்குப் பாலகர்கள் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.
19. நவக்கிரகப் பிரதோஷம் :
* ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது.
** இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக்கிரகங்களின் அருளும் கிடைக்கும். அனைத்து தீயபலன்களும் அகன்று நற்பலன்கள் கிடைக்கும்.
20. துத்தப் பிரதோஷம் :
* ஒரு வருடத்தில் அரிதிலும் அரிதாகப் பத்து மகாபிரதோஷம் வருவது.
** துத்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் உடல் குறைகள் எதுவாக இருப்பினும் அது நீங்கிவிடும். தொழுநோய் உள்ளிட்ட தீராத நோய்கள் அனைத்தும் நீங்கும்.