1. பழனி தண்டாயுதபாணி சிலைக்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி எனும் நான்கு விதமான அபிசேகப் பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர் பயன்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவையெல்லாம் தண்டாயுதபாணி சிலையின் தலைப்பகுதியில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முடி முதல், அடி வரை அபிசேகம் என்கிற முழு அபிசேகம் சந்தனத்துக்கும், பன்னீருக்கும் மட்டும்தான்.
2. ஒரு நாளைக்கு ஆறு முறை எனத் தண்டாயுதபாணி சிலைக்கு அபிசேகம் அலங்காரம் செய்யப்படுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.
3. அபிசேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிசேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோக் கிடையாது.
4. இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தப்படுகிறது.
5. சிலையின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தனக் காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.
6. தண்டாயுதபாணி சிலை மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிசேகத் தீர்த்தத்துடன் கலந்து, காலை அபிசேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகிறார்கள்.
7. தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராட்சம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கப்பட்டது போல் தெளிவாக இருக்கும். இது போகரின் கை வண்ணம் என்கின்றனர்.
8. தண்டாயுதபாணி சிலையைச் சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் பரவி நிற்கும் என்கின்றனர்.
9. தண்டாயுதபாணி சிலையைச் செய்யப் போகர் ஒன்பது வருடம் வரை எடுத்துக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
10. அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சி எடுத்தார். இதற்காக 4000க்கும் அதிகமான மூலிகைகளைப் பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாகவும் சொல்வதுண்டு.
11. போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி நிறுவினார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்குப் பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.