முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனை இருந்தாலும், கந்த சஷ்டி கவசம் அவற்றில் உயர்ந்து நிற்கிறது. அதனை இயற்றியவர் பாலதேவராய சுவாமிகள். இவர் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கியது எப்படி தெரியுமா? வாங்க, தெரிந்து கொள்ளலாம்.
ஒரு சமயம் பாலதேவராய சுவாமிகள் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். அக்காலத்தில் எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. விரக்தியடைந்த அவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்குச் சென்றார். அப்போது, அங்கு கந்த சஷ்டி விழா தொடங்கியிருந்தது. தீவிர முருக பக்தரான அவர், திருவிழாக் காட்சிகளைப் பார்த்துச் சற்று மனம் மாறினார்.
திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை மேற்கொள்ளலாம் என நினைத்தவர், முருகப்பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார். முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு, கோயில் மண்டபத்தில் கண்களை மூடித் தியானத்தில் அமர்ந்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு, தனக்காகச் சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார். அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது.
“சஷ்டியை நோக்க சரவண பவனர்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்...”
என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார். அதற்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு, முருகப்பெருமானின் மற்ற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டிக் கவசங்களை இயற்றி முடித்தார். ஆறு சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடித்த போது, அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போயிருந்தது. கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவேத் தன்னை முருகப்பெருமான் சோதித்துத் திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
திருச்செந்தூர் திருத்தலத்துக்கான சஷ்டி கவசம் மட்டுமின்றி, மற்ற ஐந்து படை வீடுகளுக்கும் சேர்த்து பாலதேவராய சுவாமிகள் இயற்றிய சஷ்டிக் கவசங்களையும் பாராயணம் செய்வது நல்லது.
கந்த சஷ்டிக் கவசம் படிப்பதால் நம்மை பிடித்த தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பொதுவாக, சஷ்டி கவசத்தினை நாள்தோறும் பாராயணம் செய்வதால், நோய்கள் எதுவுமின்றி மனமகிழ்ச்சியுடனான வாழ்வும் சேர்ந்து கிடைக்கும்.