விநாயகப் பெருமானை எந்தெந்த மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் வழிபடும் அடியவர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும்? என்று தெரிந்து கொள்ளலாம். வாங்க...
வன்னிமரப் பிள்ளையார்
அவிட்ட நட்சத்திரத் தினத்தில், வன்னி விநாயகரை நெற்பொரியினால், அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் கைகூடும்.
புன்னைமரப் பிள்ளையார்
ஆயில்ய நட்சத்திரத் தினத்தில், விநாயகருக்கு இளநீர் அபிஷேகம் செய்து, வஸ்திரங்கள் அணிவித்துப் பின் ஏழைகள் மற்றும் நோயாளிகளுக்கு உணவு, உடைகள் தானம் செய்து, விநாயகரை வழிபட்டால் கணவன், மனைவி தம்பதிகளுக்கிடையே உள்ள மனக்கசப்பு நீங்கும்.
மகிழமரத்தடிப் பிள்ளையார்
அனுஷ நட்சத்திரத்தன்று இந்தப் பிள்ளையாருக்கு, மாதுளம்பழ முத்துக்களால், அபிஷேகம் செய்தால் பணிக்காகக் குடும்பத்தை விட்டுப்பிரிந்து சென்றிருப்பவர்கள் நலமுடன் இருப்பர்.
மாமரத்தடிப் பிள்ளையார்
கேட்டை நட்சத்திரத்தில், இந்தப் பிள்ளையாருக்கு விபூதிக் காப்பிட்டு, ஏழைச் சுமங்கலிப் பெண்களுக்கு உடை, உணவு அளித்து வந்தால் கோபம், பொறாமை, பகைமை நீங்கிப், பாதிக்கப்பட்ட வியாபாரம் சீர்பெறும்.
வேப்பமரத்தடி விநாயகர்
உத்திரட்டாதி நட்சத்திர நாளில் தீபம் ஏற்றி இவரை வழிபட்டால் கன்னிப் பெண்களுக்கு மனம்போல மாங்கல்ய பாக்கியம் கிட்டும்.
ஆலமரத்தடிப் பிள்ளையார்
ஆலமரத்தின் கீழ் வடக்கு நோக்கி வீற்றிருக்கும் விநாயகருக்கு மகம் நட்சத்திரத் தினத்தன்று, சித்திரான்னங்களை நிவேதனம் செய்து தானம் அளித்தால் கடுமையான நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.
வில்வமரத்தடிப் பிள்ளையார்
சித்திரை நட்சத்திரத்தன்று, இவ்விநாயகருக்கு அர்ச்சனை செய்து, வழிபட்டு, ஏழைகளுக்கு முடிந்தளவு தானம் அளித்து வில்வ மரத்தைச் சுற்றி வந்தால் பிரிந்த தம்பதியர், மீளவும் ஒன்று சேர்வர்.
அரசமரத்தடிப் பிள்ளையார்
பூச நட்சத்திரத்தன்று, இவ்விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்து, வழிபட்டால், விளைபொருள்கள் மற்றும் பூமியால் லாபம் கூடும்.