கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல. கல்லைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற்சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட நடைமுறைகளை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளனர். சாதாரணமான சிலைக்கேப் பல விதிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது, கடவுளாக நிறுவப்படும் கற்சிற்பத்திற்கு அதனை விடக் கூடுதலான நடைமுறைகள் இருக்கின்றன. அறிவியலும் ஆன்மிகமும் கலந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்குக் கடவுள் நிலைக்குக் கொண்டு வருகிறார்கள். கல் ஒன்று கடவுளாக மாறும் வழிமுறை இதுதான்.
சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் தண்ணீருக்குள் வைக்கப்படுகிறது.
மூன்று புண்ணிய நதிகளின் நீரையும், முக்கியத் தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த இடத்தில் வைக்கப்பட இருக்கிறதோ அந்தத் தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டல காலத்திற்கு (48 நாட்கள்) நீருக்குள் மூழ்க வைக்க வேண்டும். நீருக்குள்ளிருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும்.
அறிவியல் முறைப்படி நீருக்குள் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும். இதனால் அந்தச் சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம். இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது. குறைவுபட்ட சிலையை நிறுவுவது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் துன்பத்தை உருவாக்கி விடும். அதைத் தொடக்க நிலையிலேயேத் தடுத்து விடும் வழிமுறைதான் இந்த நீருக்குள் வைக்கும் முறை. 48 நாட்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து, அடுத்ததாக தான்ய வாசத்தில் வைக்கிறார்கள். அதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவ தானியங்களைப் போட்டு வைக்கிறார்கள். இதனை தான்ய வாசம் என்கின்றனர். இதுவும் 48 நாட்கள் வரை இருக்க வேண்டும். நவதானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்புக் காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது.
முந்தைய மன்னர்கள் காலத்தில் கோயில்களில் நிறுவப்படும் சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டன. ஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்ன வாசம். அதன் பிறகு, பொற்காசுகளில் மூழ்க வைக்கும் தன வாசம். பின்னர் வஸ்திர வாசம், அதில் பட்டாடைகளில் அந்த கடவுள் சிலை வாசம் செய்யும். இறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது ஹம்சதூளிகா மஞ்சம் எனப்படும் அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான் தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலை வைக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும்.
இந்த ஆறு வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் வாய்ப்பில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக் கொள்ளப்படுகிறது. எனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.
சரி... ஏன் இந்த தான்ய வாசம்? நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால், ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும். நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையைத் தாக்கும். 48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும். தேரை இருப்பது போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தைக் காட்டிக்கொடுத்து விடும். அதாவது ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும். அதைப்போல தான் ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களைச் சிலைகள் பெரும். அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும்.
ஆறு மண்டல வாசமும் முடிந்து தயாராகும் சிலைகளின் கண்கள், பிரதிஷ்டை செய்யப்போகும் இரண்டு நாளுக்கு முன்னர் தான் திறக்கப்படும். தெய்வச் சிலைகள் வடிவமைக்கப்பட்ட பின்னர், தன்ணீர்வாசம், தான்யவாசம் எனும் அறிவியல் முறையிலான நடைமுறைப்படி வைத்து குளிர், உஷ்ணம் இவற்றால் பாதிக்கப்படாத நிலையை சிலைகளுக்குக் கொண்டு வருவார்கள். இதனால் அப்பழுக்கு இல்லாத முழுமையான சிலை உருவாகிறது. அதன்பிறகு, ஏழு நாட்கள் வரை மலர்கள் வாசத்தில் சிலையை வைக்கிறார்கள். பல்வேறு விதமான நறுமண மலர்களில் சிலை இருக்கும்போது, அந்த சிலைக்கு நறுமணம் மட்டுமில்லாது, மலர்களின் சத்தும் ஊறி, அந்தச் சிலைகள் மூலிகைச் சத்தினைப் பெறுகிறது.
மலர்கள் வாசத்துக்குப் பிறகு கண்களைத் திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக, அந்த தெய்வ சிலை சயனாதி வாசத்தில் வைக்கப்படுகிறது. நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கேப் பார்த்துக் கடவுள் சிலையை வைத்து விடுகிறார்கள். இந்த வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது. தகுந்த பூஜை நடைமுறைகளுக்குப் பிறகு தலைமை ஸ்தபதியால் தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படுகிறது. அதன்பிறகே அந்தத் தெய்வச்சிலைக்கு முழுமையான அழகு வருகிறது. பின்னர் கும்பாபிசேகத்தின் போது தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்களால் தெய்வச்சிலைக்குத் தெய்வீகத் தன்மை ஊட்டப்படுகிறது.
ஸ்பரிசவாதி என்னும் இந்த கடைசி வாசத்தில் ஸ்வாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம்ஓதப்பட்டு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக மாற்றி அமைக்கப்படுகிறது. இந்தச் செயல்பாட்டைக் கருவறையில் முதன்மை அர்ச்சகர் செய்து வைப்பார். கல்லில் இருந்து வடிக்கப்பட்ட சிலை இவ்வாறு பல்வேறு அறிவியல், ஆன்மிக வழிமுறைகளின்படி தான் அருள்மிக்க கடவுளாக மாற்றம் பெறுகிறது.
கல்லை வடித்துப் பொதுவில் வைத்தால் அது சிலை. அதனையே மேற்காணும் நடைமுறைகளுடன் புனித வழிகளால் மேம்படுத்தப்பட்டால், அது நாம் வணங்கும் கடவுளாக மாறுகிறது.
மனிதனும் அப்படித்தான், வாழ்க்கையில் பல்வேறு பக்குவங்களை அடைந்தால்தான் அவனும் வணங்கத்தக்கவனாக மாறுவான் என்பதையும் இதன் மூலம் உணர்ந்து கொள்ள வேண்டும்.