* சிவனின் நடனத்தோற்றம் இறைவனின் ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைக் குறித்து நிற்பதாகச் சைவ நூல்கள் கூறுகின்றன. உடுக்கை - படைத்தலையும், அடைக்கலம் தரும் கை - காத்தலையும், தீச்சுவாலை - அழித்தலையும், தூக்கிய கால்கள் அருளல் ஆகியன - முத்தி நிலையைக் குறிப்பதாகவும் கொள்ளப்படுகின்றது.
* ஒற்றைக் காலில் நின்றாடும் போதும் நடராஜனின் தலை சமநிலையில் நேரக நிற்கிறது. ஆடுவது தாண்டவமானாலும், சிற்சபை வாசனின் முகமோ சாந்த ஸ்வரூபம். இரண்டு காதுகளிலும் வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம். இடது காதில் கனிவாய் குழையும் தோடு வளையம். இந்தக் கோலத்திலும் உமையும் தன்னில் பாதி என்பதை இது உணர்த்துகிறது. முக்கண்ணனின் நெற்றியில், புருவங்களுக்கு மத்தியில், நெருப்பாய் எரியும் மூன்றாவது கண். முக்காலத்தையும் கடந்த ஞானத்தைக் குறிக்கிறது.
* பொன்னம்பலவனின் ஆனந்தத் தாண்டவத்தில் பல திசைகளிலும் பறக்கிறது அவன் கேசம். கேசத்தில் ஒரு சீராக முடிச்சுகளைக் காணலாம். அந்தக் கேச முடிச்சுகளில் கீழே உள்ளவற்றையும் பார்க்கலாம்;
சேஷநாகம் – கால சுயற்சியையும், கபாலம் – இவன் ருத்ரன் என்பதையும், கங்கை – அவன் வற்றா அருளையும், ஐந்தாம் நாள் பிறைச்சந்திரன் – அழிப்பது மட்டுமல்ல, ஆக்கத்திற்கும் இவனே மூலம் என்பதையும் குறிக்கின்றன.
* பின் இடது கரத்தில் அக்னி, சிவன் – சம்ஹார மூர்த்தி என்பதைக் காட்டுகிறது. நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரத்தின் (ஐந்தெழுத்து மந்திரம்) முதல் எழுத்தான ‘ந’ வைக் குறிக்கிறது இந்தக் கரம்.
ஊன்றி நிற்கும் அவனது வலது கால்களோ, ‘ம’ என்ற எழுத்தை குறிக்கிறது. மேலும் வலது கால், திரோதண சக்தியை காட்டுகிறது. இந்தச் சக்தியால் தான் மனிதர் உயர் ஞானத்தைத் தேடலினால் அனுபவ அறிவாகப் பெறுகிறார்.
* வலது காலின் கீழே இருப்பது ‘அபஸ்மாரன்’ எனும் அசுரன் – ஆணவத்தினால் மனித மனம் கொள்ளும் இருளைக் குறிக்கிறான். அவனோ நடராஜன் தூக்கிய இடது காலைப் பார்த்து இருக்கிறான் தஞ்சம் வேண்டி.
தூக்கிய இடது கால், ஆணவம் மற்றும் மாயை ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட்டு ஆண்டவனின் அனுக்கிரஹத்தினை அடைந்திட வழி வகை செய்யும்.
* முன் இடது கரமோ, பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான ‘வா’ வை குறிக்கிறது. இந்தக் கரம் யானையின் துதிக்கைபோல் இருக்க, தூக்கிய இடது காலைப் பாரும் – அங்குதான் மாயை அகற்றி அருள் தரும் அனுக்கிரக சக்தி இருக்கிறதெனக் கைகாட்டிச் சொல்கிறது.
* பின் வலது கரம், பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான ‘சி’ யை குறிக்கிறது. அந்தக் கையில்தான் உடுக்கை (டமரு) என்னும் ஒலி எழுப்பும் இசைக் கருவி. இந்த உடுக்கையின் ஒலியில் இருந்துதான் ப்ரணவ நாதம் தோன்றியது என்பார்கள்.
* அடுத்தாக, ஆடல் வல்லானினின் முன் வலது கரமோ, அபயம் அளித்து, ‘அஞ்சாதே’ என்று அருளும் காட்சி, பஞ்சாக்ஷர மந்திரத்தின் கடைசி எழுத்தான ‘ய’ வைக் காட்டுகிறது.
* நடராஜனின் திருஉடலில் நாகம் ஒன்று தரித்திருப்பதைப் பார்க்கலாம். இந்த நாகம் – சாதரணமாய் சுருண்டு இருக்கும், யோகத்தினால் எழுப்பினால் உச்சி வரை மேலெழும்பிடும் குண்டலினி சக்தியைக் குறிக்கிறது. அவன் இடையைச் சுற்றி இருக்கும் புலித்தோல், இயற்கையின் சக்தியைக் காட்டுகிறது. அதற்குச் சற்று மேலேக் கட்டியிருக்கும் இடைத்துணியோ அவன் ஆடலில், இடது பக்கமாய் பறந்து கொண்டிருக்கிறது.
* பொன்னம்பலம் தன்னில் நின்றாடும் நடன சபேசனைச் சுற்றி இருக்கும் நெருப்பு வட்டம், அவன் ஞானவெளியில் தாண்டவாமடுவதைக் காட்டுகிறது. ஒவ்வொரு தீஜூவாலையிலும் மூன்று சிறிய ஜூவாலைகளைக் காணலாம். அதன் மேலே ‘மகாகாலம்’. அது, காலத்தின், தொடக்கம், நடப்பு மற்றும் முடிவு தனைக் குறித்திடும். நடராஜராஜன் நின்றாடும் ‘இரட்டைத் தாமரை’ பீடத்தின் பெயர் ‘மஹாம்புஜ பீடம்’. இந்த பீடத்திலிருந்துதான் அண்ட சராசரமும் விரிவடைகிறது என்கிறார்கள்.