சிவபெருமானுக்கு உகந்த நாள் சோமவாரம் என அழைக்கப்படும் திங்கட்கிழமை ஆகும். ‘சோம’ என்ற சொல்லுக்கு இரண்டு பொருள்கள் உண்டு. பார்வதியுடன் கூடிய சிவபெருமான் மற்றும் சந்திரன் என்று பொருள்படும். பார்வதியுடன் கூடிய சிவபெருமானை வழிபட்டு வந்தால் வாழ்வு வளம் பெறும்.
ஒரு முறை சந்திரன் கொடிய நோயால் அவதியுற்ற பொழுது, நோய் குணமாகச் சிவனை வேண்டித் தவமிருந்த சந்திரன், சிவபெருமானின் அருளால் நோய் நீங்கப் பெற்றார். சந்திரன் நவக்கிரகங்களில் ஒருவராகவும் மாறினார். சந்திரன் அருள் பெற்று அவர் பெயராலேத் தோன்றியதே சோமவாரம். சந்திரனின் வேண்டுகோளின்படி, அவனது பெயரால் அவனது வாரத்தில், அதாவது திங்கள்கிழமை அன்று விரதம் இருந்து சிவபெருமானை வேண்டிக்கொண்ட நாளே சோமவார விரதம் எனப் பெயர் பெற்றது.
சோம வாரப் பூஜையின் பயனாகப் பிரிந்த குடும்பம் ஒன்று சேர்க்க முடியும். விரும்புபவர்கள் ஒன்று சேர, திங்கட்கிழமையன்று பயபக்தியுடன் சாம்ப பரமேசுவரரை நினைத்து இந்த சோமவார விரதத்தைக் கடைப்பிடித்து வந்தால் வெகுதூரத்தில் உள்ள கணவன் மனைவி உற்றார் உறவினர் ஒன்று சேர்ந்து வாழ்வார்கள்.
சோமவார விரதமானது மகத்துவம் வாய்ந்த ஒன்றாகும். சோம வார பூஜையானது மனைவி, குழந்தைகளை விட்டுப் பிரிந்து சென்ற கணவன், மனம் மாறி வீடு வந்து சேருவான். மேலும் மாங்கல்ய தோஷம், களத்திரதோஷம், நீங்கும்.
ஆர்யா வர்த்தா நாட்டை ஆண்ட சித்ரவர்மன் என்ற மன்னனின் ஒரே மகள் சீமந்தினி. மகள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த மன்னன் சித்ரவர்மன், சிறந்த ஜோதிடர்களை வரவழைத்து தனது மகளுக்கு ஜாதகம் கணிக்க உத்தரவிட்டான். ஜாதகத்தில் உள்ள தோசம் காரணமாகத் தனது மகளுக்குக் கணவன் இருக்கமாட்டார் எனக் கூறப்பட்டது. இந்தப் பிரச்சனையைப் போக்க மன்னர் வழி தேடி அலைந்தார். இதனைப் போக்க அவருக்குக் கிடைத்த வழியேச் சோமவார விரதம் ஆகும். சீமந்தினியும் முறையாகச் சோமவார விரதத்தைக் கடைப்பிடித்தாள். அதன் பயனாக, சீமந்தினிக்கு நளனின் பேரன், இந்திரசேனன் மகனுமான சந்திராங்கதனுடன் திருமணம் நடந்தது.
ஒருநாள் நண்பர்களுடன் நதியில் நீராடச்சென்ற சந்திராங்கதன் தண்ணீரில் மூழ்கினார். அவனைத் தேடி கிடைக்காததால் மனநிலை சற்றும் குலையாத சீமந்தினி சோமவார விரதத்தை விடாமல் கடைப்பிடித்தாள். பரமேஸ்வரனையும், பார்வதியையும் மனதாரப் பிரார்த்தனை செய்தாள். அவள் விரதத்திற்குப் பலன் கிடைக்கப் பெற்றாள். திடீரென்று ஒருநாள் நீரில் மூழ்கிய அவளது கணவன் சந்திராங்கதன் திரும்பி வந்தான். தண்ணீரில் மூழ்கிய அவனை சில நாகர்கள் அழைத்துப் போனதாகவும், சில நாட்கள் அவர்களது இருப்பிடத்தில் தங்க வைத்து உபசரித்ததாகவும், சீமாந்தினி செய்யும் சோமவார விரதம் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டு, மறுபடியும் தன்னைக் கொண்டு வந்து விட்டதாகவும் கூறினான்.
சோமவார விரதத்தை சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் முதல் திங்கட்கிழமை தொடங்கி தொடர்ந்து கடைப்பிடிக்கலாம். ஆண், பெண்கள் இருவரும் இதனைப் பின்ப்பற்றி வருதல் சிறப்பு தரும்.
விடியற்காலையிலேயே ராகு காலத்துக்கு முன்பே விநாயகர் பூஜை செய்து சங்கல்பம் செய்தபின், மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துத் தேங்காய் உடைத்துக் கற்பூரம் காட்டி வழிபட வேண்டும். கலசத்தில் தண்ணீர் வைத்து அதில் நாணயம், மஞ்சள்பொடி கலந்து கலசத்துக்கு மேலே மாவிலைக்கொத்தைச் செருகி, மையத்தில் மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். பின்னர் பூஜையைத் தொடங்க வேண்டும்.
திங்கள் கிழமை செய்யும் பூஜையானது நைவேத்தியமாக சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றைப் படைக்க வேண்டும். சிவநாமங்களைச் சொல்லி, கற்பூர ஆரத்தி காட்டுதல் சிறப்பு தரும். சோம வார பூஜை முடித்து, வயதான தம்பதியரை பார்வதி பரமேஸ்வரனாக மனதில் நினைத்து, சந்தனம், குங்குமம் அளித்து வணங்கி, அவர்களுக்கு புதுவேட்டி, சட்டை, புடவை, வெற்றிலைப் பாக்கு, பழம் ஆகியவற்றுடன் தட்சணை ஆகியவைக் கொடுத்து, அவர்களை வணங்கி ஆசி பெற்றிட வேண்டும்.