கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் இப்படி நான்கு வகையான யுகங்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அகத்தியர், வாத சௌமியம் என்னும் நூலில் பதினெட்டு யுகங்கள் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
அகத்தியர் பாடல்
“கேளடா புலத்தியனே மைந்தா நீயுங்
கெணிதமுள்ள யுகமதுதான் பதினெட்டுப்பா
ஆளடா வரியினுகம் ஈரேழுகோடி
அற்புதனார் யுகமதுதான் ஈரைந்துகோடி
வாளடா தன்மயுகம் ஈராறுகோடி
மகத்தான ராசியுகம் ஈரெட்டுகோடி
காலடா யுகமெல்லாஞ் சொல்லிவாரேன்
கனமான வீராசன் நாலைந்துதானே.
தானென்ற விண்ணதனில் ஈரெட்டுகோடி
தருவான வாய்தனக்கு யுகம்ஏழுகோடி
மானென்ற மைனயுகம் இருமூன்றுகோடி
மகத்தான மணிகள்யுகம் இருமூன்றுகோடி
பானென்ற பணியிரதம் நான்குகோடி
பதிவான விஸ்வாசன்யுகம் மூன்றுகோடி
வானென்ற வாய்தன்யுகம் ஒருகோடியாகும்
மார்க்கமுடன் திரேதாயுகந் தன்னைப்பாரே.
பாரடா திரேதாயுகம் அதனைக்கேளு
பதினேழு லக்ஷத்தொன் பதினாயிரமாம்
மேரடா கிரேதாயுகம் அதனைக்கேளு
விருபது லக்ஷத்தொன் பதினாயிரமாம்
தேரடா துவாபரயுகம் தனைக்கேளு
தீர்க்கமுடன் ஒன்பதுலக்ஷத்து ஒன்பதனாயிரமாம்
காரடா கலியுகம் வெகு கடினமைந்தா
கண்டுபார் லக்ஷத்து முப்பதினாயிரமாம்”
அகத்தியர் பாடலில் குறிப்பிட்ட யுகங்களும், அதற்கான ஆண்டுகளும் பின் வருமாறு:
1. வரியின் யுகம் - பதினான்கு கோடி ஆண்டுகள்
2. அற்புதனார் யுகம் - பத்து கோடி ஆண்டுகள்
3. தன்ம யுகம் - பன்னிரெண்டு கோடி ஆண்டுகள்
4. ராசி யுகம் - பதினாறு கோடி ஆண்டுகள்
5. சன்ய யுகம் - பத்து கோடி ஆண்டுகள்
6. வீர ராசன் யுகம் - இருபது கோடி ஆண்டுகள்
7. விண் யுகம் - பதினாறு கோடி ஆண்டுகள்
8. வாயு யுகம் - ஏழு கோடி ஆண்டுகள்
9. மைன யுகம் - ஆறு கோடி ஆண்டுகள்
10. மணிகள் யுகம் ஆறு கோடி ஆண்டுகள்
11. அத்தே யுகம் - பத்தொன்பது கோடி ஆண்டுகள்
12. பணியிரத யுகம் - நான்கு கோடி ஆண்டுகள்
13. விஸ்வாசன யுகம் - மூன்று கோடி ஆண்டுகள்
14. வாய்தன் யுகம் ஒரு கோடி ஆண்டுகள்
15. திரேதா யுகம் - பதினேழு லட்சத்து ஒன்பதனாயிரம் ஆண்டுகள்
16. கிரேதா யுகம் - இருபது லட்சத்து பத்தாயிரம் ஆண்டுகள்
17. துபாபர யுகம் - ஒன்பது லட்சத்து ஒன்பதாயிரம் ஆண்டுகள்
18. கலியுகம் - ஒரு லட்சத்து முப்பதாயிரம் ஆண்டுகள்.
மேலே உள்ள பாடலை கவனித்தோமானால் இதுவரை நாம் தெரிந்து வைத்துள்ள நான்கு யுகங்களும் அதில் இருக்கின்றன. அவை நான்கும் தான் இறுதி யுகங்களாக அகத்தியர் குறிப்பிட்டுளளார். அதே போல ஒவ்வொரு யுகத்திற்கான கால அளவையும் அகத்தியர் தெள்ளத்தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.