சிவபெருமான் நந்தி பகவானைக் கணங்களின் தலைவராக நியமித்தார். அந்நிலையில் நந்திபகவான் இறைவன் சிவபெருமானிடம், சிவனடியார்கள் வேண்டும் பதினாறு வரங்களைத் தந்தருள வேண்டுமென்று வேண்டினார். இறைவன் சிவபெருமானும், அவர் கேட்டப் பதினாறு வரங்களை தந்தருளினார்.
அதற்கான பாடல்:
“மறைகள் நிந்தனை சைவ நிந்தனை பொறா மனமும்
தறுகண் ஐம் புலன்களுக் கேவல் செய்யுறாச் சதுரும்
பிறவி தீதெனாப் பேதையர் தம்மொழு பிணக்கும்
உறுதி நல்லறம் செய்பவர் தங்களோ டுறவும்
யாது நல்லன்பர் கேட்கினும் உதவுறும் இயல்பும்
மாத வத்தினோர் ஒறுப்பினும் வணங்கிடு மகிழ்வும்
ஓது நல்லுப தேச மெய் யுறுதியும்
அன்பர் தீது செய்யினும் சிவச்செயல் எனக் கொளுந் தெளிவும்
மனமும் வாக்கும் நின்னன்பர்பால் ஒருப்படு செயலும்
கனவிலும் உனதடியருக் கன்பராங் கருத்தும்
நினைவில் வேறொரு கடவுளை வழிபடா நிலையும்
புனித நின் புகழ் நாள்தொறும் உரைத்திடும் பொலிவும்
தீமையாம் புறச்சமயங்கள் ஒழித்திடு திறனும்
வாய்மை யாகவே பிறர்பொருள் விழைவறா வளனும்
ஏமு றும் பர தாரம் நச்சிடாத நன்னோன்பும்
தூய்மை நெஞ்சில் யான் எனச் செருக்குறாத் துறவும்
துறக்கமீ துறைகினும் நரகில் தோய்க்கினும்
இறக்கினும் பிறக்கினும் இன்பம் துய்க்கினும்
பிறைக்கொழுந் தணிசடைப் பெரும இவ்வரம்
மறுத்திடா தெனக்குநீ வழங்கல் வேண்டுமால்”
பொருள் விளக்கம்:
1. வேதங்களையும், சைவத்தையும் நிந்தனை செய்வதைப் பொறாத மனம்.
2. ஐம்புலன்களுக்கு அடிமையாகி அவற்றுக்காகப் பணி செய்யாத நிலை.
3. பிறவி தீதென்று கருதி, உலக சுகத்தைப் பெரிதென்று கருதும் பேதையரை விலகி நிற்கும் உறுதி.
4. நல்லறங்களைச் செய்தவருடன் உறவு.
5. நல்லவர்கள் என்ன கேட்டாலும், உதவி செய்கின்ற இயல்பு.
6. அரும்தவம் செய்தோரை வணங்கிடும் பண்பு.
7. நல்ல உபதேசங்களை ஏற்றுக் கொள்ளும் தன்மை.
8. அன்பர்கள் தீது செய்தாலும், அவற்றைச் சிவச்செயல் என ஏற்கும் தெளிவு.
9. மனமும் வாக்கும் அன்பர்பால் ஒருமைப்படும் செயல்.
10. கனவிலும் சிவனடியாருக்கு அடிமையாதல்.
11. சிவபெருமானைத் தவிர வேறு யாரையும் இறைவனாக வழிபடாத நிலை.
12. சிவபெருமானின் புகழை நாள்தோறும் உரைத்திடும் பொலிவு.
13. பிற சமயங்களை விட்டு விலகி நிற்கும் ஆற்றல்.
14. பிறர் பொருள் மீது ஆசை ஏற்படாமை.
15. நல்ல நோன்புகளை நோற்றிருத்தல்.
16. நான், எனது என்னும் செருக்கும் சுயநலமும் இல்லாமை.
மேற்காணும் பதினாறு வரங்களையும் நந்திதேவர் சிவபெருமானிடம் தனக்காகக் கேட்கவில்லை. அவர், இவ்வுலக மக்களுக்காகவே இறைவனிடம் வேண்டினார். அதனால், இறைவன் சிவபெருமானையும், நந்திதேவரையும் வணங்கி மேற்காணும் பதினாறு வரங்களைப் பெற்று நலமுடன் வாழ்ந்திடுவோம்.