குபேர லட்சுமி விரத பூஜையை எப்போது தொடங்க வேண்டும் வீட்டில் குபேர லட்சுமி விரத பூஜையை கடைப்பிடிக்கச் சில விதிமுறைகள் உள்ளன.
1. அமிர்தயோகம் அல்லது சித்தயோகம் உள்ள அஷ்டமி, நவமி இல்லாத ஒரு வெள்ளிக்கிழமை இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.
2. வெள்ளிக்கிழமை காலை நல்ல நேரத்தில் லட்சுமி குபேரன் படம், குபேர யந்தரம் போன்றவைகளை எடுத்து பூஜையில் வைக்க வேண்டும். குபேரன் யந்த்ரம் படம் மட்டும் இருந்தால் வடக்குத் திசையிலே வைக்க வேண்டும்.
3. படத்துக்கு முன்பு தலை வாழை இலையை வைத்து அதன் மீது நவதானியத்தைக் கலக்காமல் சுற்றிலும் பரப்பி வைக்க வேண்டும்.
4. அதன் நடுவில் ஒரு செம்பை வைத்து சுத்தமான தண்ணீரால் நிரப்பி, அதில் சிறிது மஞ்சள் தூளைப் போட்டு, செம்பின் மேல் மஞ்சள் பூசிய ஒரு தேங்காயை வைத்து, சுற்றிலும் மாவிலையைச் செருகி கலசம் மாதிரி அமைக்க வேண்டும்.
5. வெற்றிலை பாக்கு, பழம் அனைத்தையும் கலசத்துக்கு முன்பு வைக்க வேண்டும்.
6. மஞ்சள் தூளில் தண்ணீர் விட்டு சிறிய பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.
7. பிறகு படம், எந்திரம், கலசம் மஞ்சள் பிள்ளையார் ஆகியவற்றுக்குப் பூ, மாலை போடவும் ஊதுபத்தி ஏற்றி வைக்கவும்.
8. கிழக்கு பார்த்து அமர்ந்து, பிள்ளையார் மந்திரம் சுலோகங்களைக் கூறி, பின்னர் லட்சுமி சுலோகம், துதியைக் கூறவும், குபேரனைப் பற்றிய சுலோகம், மந்திரம், துதி ஆகியவற்றைக் கூறவும். எந்தத் துதியும் தெரியவில்லை என்றாலும் மனதிற்குள் கணபதி, லட்சுமி, குபேரனின் திருநாமங்களுடன் போற்றி சேர்த்துக் கூற வேண்டும்.
9. பின்பு உங்களால் முடிந்த நிவேதனத்தை செய்து பகவானுக்கு படைக்கலாம்.
10. வெற்றிலை, பாக்கு, பழத்தை சுமங்கலிகளுக்கும், தட்சணை பணத்தை ஏழைகளுக்குக் கொடுக்கவும்.
11. இந்த விரதத்தை யார் வேண்டுமானாலும், எப்போழுது வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம்.
12. அட்சய திருதியை நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும், செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்திரம் கூறுகிறது. இந்த நாளில் குபேர லட்சுமி பூஜை நடத்தப்படுகிறது.