ஆடி மாதத்திற்கென்று பல்வேறு சிறப்புகள் இருக்கின்றன. அவைகளில் சில...
1. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும். இந்தப் புண்ணிய காலத்தில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் சிறப்புக்குரியது.
2. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வங்களுக்குப் பூஜைகளும், விழாக்களும் நடைபெறுகின்றன.
3. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், அம்மனின் ஆடி தபசுத் திருநாள் பன்னிரண்டு நாட்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.
4. மக்களின் ஜீவ நாடியான ஆறுகளில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடும் பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக இருந்து வருகிறது.
5. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்கிற தொன்ம நம்பிக்கை இருக்கிறது. அம்மன் கோவில்களில் ஆடி மாதத்தில்தான் அதிகஅளவில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
6. கேரளாவில் ஆடி மாதத்தை இராமாயண மாதமாகக் கொண்டாடி வருகின்றனர்.
7. ஆடி மாத அமாவாசை நாளில் மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளைச் செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடமை செய்ததற்கான பலன்கள் கிடைக்கும்.
8. ஆடி மாத பவுர்ணமி நாளன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி நாளில் வைணவத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
9. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்குப் பல வித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தைப் படைத்து வழிபடும் தொன்ம நம்பிக்கை உள்ளது.
10. ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக் தேவதைகளை அந்தந்த திக்குகளில் வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.
11. ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாத உபவாசம் இருப்பது குடும்பத்திற்கு அமைதியைத் தரும்.
12. ஆடி மாதம் கிராம தேவதைகளுக்கான கோவில்கள் உள்பட, பிற மாதங்களில் திறக்கப்படாத அனைத்துக் கோவில்களும் திறக்கப்பட்டு பூசைகள் நடத்தப்படும் வழக்கம் இருக்கிறது.
13. ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் அதிகப் பலன்கள் கிடைக்கும். எலுமிச்சம் பழ விளக்குகளை வீட்டில் எப்போதும் ஏற்றக் கூடாது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
14. ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி, கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால்,வேண்டியவை அனைத்தும் சிறப்பாக நடைபெறும். வீட்டில் அனைத்துச் செல்வங்களும் குவியும்.
15. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையிலுள்ள முருகன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நாளில், முருகனுக்குக் கூடை கூடையாக மலர்களைச் சமர்ப்பித்து மலர் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனை அப்பகுதி மக்கள் “ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல்முருகனுக்கு” என்று சொல்லி மகிழ்ச்சியுடன் வழிபடுவார்கள்.
16. ஆடிப்பெருக்குத் திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் சிறப்புடன் நடைபெறும். அப்போது பெருமாள் அம்மா மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்வும் நடந்து வருகிறது.
17. ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமணத் தடைகள் விலகி சுபம் உண்டாகும்.
18. ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
19. ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.
20. ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.
21. ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
22. ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தவை அனைத்தும் நடந்தேறும்.
23. கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை ஆதிமூலமே என்று பிளிற, திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையைக் காப்பாற்றினார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதத்தில் அனைத்து வைணவத் தலங்களிலும் கஜேந்திர மோட்ச வைபவம் நடத்தப்படுகிறது.
24. ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
25. தஞ்சாவூரிலுள்ள நிசும் சூதனி உக்கிர காளியம்மன் கோவிலில், ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளில் தஞ்சை மாவட்ட கிறித்தவர்கள் அங்கு ரொட்டி, ஆட்டுக்கறி படையலிட்டு வழிபடுகின்றனர்.
26. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.
27. ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பைத் தரும்.
28. ஆடி மாதம் குத்துவிளக்கை மகாலட்சுமியாகக் கொண்டு அலங்கரித்து வழிபட்டு செல்வங்களைப் பெறமுடியும்.
29. ஆடி மாதம் அம்மனுக்குப் பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் நலம் தரும்.
30. ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாகக் கொண்டு, உணவு கொடுத்து, உடை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.
31. ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பதால், ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்தில் எழுந்தருளச் செய்து திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படுகிறது. இவ்வேளையில் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள் என்பதால், அப்போது ஆண்டாளை வழிபட்டால் வேண்டுதல் அனைத்தும் உடனடியாக நிறைவேறும்.
32. ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமணப்பேறு, குழந்தைப்பேறு உள்ளிட்ட அனைத்து நலன்களுடன் நீங்காத செல்வத்தையும் பெறலாம் என்பது தொன்ம நம்பிக்கை.
33. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூரிய உதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபடச் செல்வம் கொழிக்கும் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது.
34. ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.
35. ஆடி பவுர்ணமி நாளில் சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் அனைத்துப் பகையும் விலகும்.