வராகி தேவி இயல்பாகவே உக்கிரமானவள் என்பதால், இந்த அம்மனை வணங்குவதற்கு அனைவருக்குமே மனதில் பயம் இருக்கும். வீட்டில் வராகி திருவுருவப் படத்தை வைத்து வணங்குவதற்கு அஞ்சுவார்கள். ஆனால், வராகி தேவி கோப குணத்தைக் கொண்டவள் இல்லை. குழந்தை மனம் கொண்ட வராகி தேவியைத் தன்னலம் பாராமல், கெட்ட எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்ளாமல் வணங்கினால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவி செய்யும் தெய்வம்தான் இந்த வாராகி அம்மன்.
கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி இந்த நான்கு நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வராகி அம்மனை மனதார வழிபட்டாலே போதும், அவர்களுக்கு உடனடியாகப் பலன் கிடைத்துவிடும். இந்த நட்சத்திரம் இல்லாதவர்கள், இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் வராகி அம்மனை வழிபடுவது சிறந்தது.
தீராத கஷ்டம், தீராத நோய், தீராத மனக் கஷ்டம், தீராத பணக்கஷ்டம் என்று அனைத்து வகை துன்பங்களுக்கும், வராகி அம்மனை நினைத்துத் தலைவாழை இலை விரித்து, அதில் பச்சரிசியைக் கொட்டிப் பரப்பி, அதன் மேல் ஒரு தேங்காயை உடைத்து இரண்டு முடிகளாக வைத்து, அதில் இலுப்ப எண்ணெய் ஊற்றிச் சிவப்புத் திரி போட்டு, தீபம் ஏற்றினால் போதும். இந்தப் பரிகாரத்தை உங்கள் வீட்டின் அருகில் வராகி அம்மன் கோவில் இருந்தால் அங்கு செய்யலாம். கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே சிறிய வராகி அம்மன் திருவுருவப் படத்தை வைத்து அதன் முன் செய்து வரலாம். எப்படிப்பட்டக் கஷ்டமாக இருந்தாலும், அந்தக் கஷ்டம் கூடிய விரைவில் நீங்கிவிடும். இந்தப் பரிகாரத்தைச் செவ்வாய்க்கிழமை எமகண்ட வேளையில், தொடர்ந்து ஐந்து வாரம் செய்தால் சிறந்த பலனைப் பெறமுடியும்.
வராகி அம்மனுக்குச் சிவப்பு மலர் மிகவும் விருப்பமானது அதிலும் சிவப்புத் தாமரை மிகவும் பிடிக்கும். பஞ்சமி திதி அன்று வராகியை மனதார நினைத்து வழிபடுவது நல்ல பலனைத் தரும். வராகி அம்மனை மாதம்தோறும் வரும் பஞ்சமி திதி அன்று சிவப்பு மலர் சூட்டி, அவளுக்குப் பிடித்த பிரசாதத்தை நைவேத்தியமாகச் செய்து வைத்துத் தொடர்ந்து வழிபட்டு வந்தால், நம்மை எந்த விதமான கெட்ட சக்தியும் அண்டாது. நம்முடைய வாக்கு வன்மையும், தைரியமும் அதிகரிக்கும்.
வராகி அம்மனுக்குப் பூண்டு கலந்து தோல் நீக்கப்படாத உளுந்து வடை, நவதானிய அடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணை நீக்காத தயிர்சாதம், நவதானிய அடை தோசை இவைகள் அனைத்தும் மிகவும் பிடிக்கும். இதில் உங்களால் முடிந்த ஏதாவது ஒன்றை நைவேத்தியமாக படைப்பது மிகவும் சிறந்தது. வாராஹி அம்மன் வழிபாட்டில் ஒரு போதும் அடுத்தவர் கெட்டுப் போக வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு வழிபடக் கூடாது என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.