சிவபெருமானுக்கு ஏற்ற விரதங்களுள் பிரதோச விரதம் மிகவும் முக்கியமானது.
1. தினசரி பிரதோசம்
தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் சிவபெருமானைத் தரிசனம் செய்வது சிறப்பாகும். தினசரிப் பிரதோசத்தை ஐந்து வருடங்கள் முறையாகச் செய்பவர்களுக்கு “முக்தி” நிச்சயம்.
2. பட்சப் பிரதோசம்
அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர்பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோசம் ஆகும். இந்தத் திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு செய்வது சிறப்பாகும்.
3. மாதப் பிரதோசம்
பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோசம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும்.
4. நட்சத்திரப் பிரதோசம்
பிரதோச திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய சிவபெருமானை பிரதோச நேரத்தில் வழிபடுவது நட்சத்திரப் பிரதோசம் ஆகும்.
5. பூரண பிரதோசம்
திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோசம் பூரண பிரதோசம் ஆகும். இந்தப் பிரதோசத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது சிறந்த பலனைத் தரும். பூரண பிரதோச வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.
6. திவ்யப்பிரதோசம்
பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிசேக ஆராதனை செய்தால் முன்ஜென்ம வினை முழுவதும் நீங்கும்.
7. தீபப் பிரதோசம்
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, சிவபெருமானுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து சிவபெருமானை வழிபடச் சொந்த வீடு அமையும்.
8. அபயப் பிரதோசம்
அபயப் பிரதோசம் என்னும் சப்தரிஷி பிரதோசம், வானத்தில் “வ” வடிவில் தெரியும் நடத்திரக் கூட்டங்களான “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோசம் என்னும் சப்தரிஷி பிரதோசம் ஆகும். இந்த வழிபாட்டைச் செய்பவர்களுக்கும் சிவபெருமான் தரம் பார்க்காது அருள் புரிவார்.
9. மகாப் பிரதோசம்
ஈசன் விசம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே, சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோசம் “மகாப் பிரதோசம்” ஆகும். இந்த மகா பிரதோசத்தன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு. சென்னை, வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”, திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள”திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்பகோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோசமும் “மகா பிரதோசம்” எனப்படும்.
10. உத்தம மகாப் பிரதோசம்
சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம், உத்தம மகாப் பிரதோசம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.
11. ஏகாட்சர பிரதோசம்
வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகாப் பிரதோசத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.
12. அர்த்தநாரி பிரதோசம்
வருடத்தில் இரண்டு முறை மகாப்பிரதோசம் வந்தால் அதற்கு அர்த்தநாரிப் பிரதோசம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.
13. திரிகரணப் பிரதோசம்
வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோசம் வந்தால் அது திரிகரணப் பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்டலட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோச வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
14. பிரம்மப் பிரதோசம்
ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோசம். பிரம்மாவுக்குத் திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்குவதற்காக, அவர் ஒரு வருடத்தில் நான்கு முறை சனிக்கிழமையும், திரயோதசியும் வரும் போது முறையாகப் பிரதோச வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றார். நாமும் இந்தப் பிரதோச வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோசம் அனைத்தும் நீங்கி நன்மைகளை அடையலாம்.
15. அட்சரப் பிரதோசம்
வருடத்துக்கு ஐந்து முறை மகாப் பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் சிவபெருமானை எதிர்த்தனர். சிவபெருமான், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தங்களது தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோச விரதத்தை கடைப்பிடித்துப் பாவ விமோசனம் பெற்றனர்.
16. கந்தப் பிரதோசம்
சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோசம் கந்தப் பிரதோசம். இதுமுருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோச வழிபாடு. இந்தப் பிரதோசத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.
17. சட்ஜ பிரபாப் பிரதோசம்
ஒரு வருடத்தில் ஏழு மகாப் பிரதோசம் வந்தால் அது, `சட்ஜ பிரபாப் பிரதோசம்’. தேவகியும் வாசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகாப் பிரதோஷத்தை முறையாக அவர்கள் கடைப்பிடித்ததால், கிருஷ்ணன் பிறந்தான். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி, பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.
18. அஷ்ட திக் பிரதோசம்
ஒரு வருடத்தில் எட்டு மகாப் பிரதோச வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.
19. நவக்கிரகப் பிரதோஷம்
ஒரு வருடத்தில் ஒன்பது மகாப் பிரதோசம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோசம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோசத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக்கிரகங்களின் அருளும் கிடைக்கும்.
20. துத்தப் பிரதோஷம்
அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் குருடரும் கண்பார்வை பெறுவார்கள். முடவன் நடப்பான். குஷ்டரோகம் நீங்கும். கண் சம்பந்தப்பட்ட வியாதியும் குணமாகும்.