சூரியன் அதிகாலையில் வெளியில் தோன்றுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன்பு, அதாவது அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது. பிரம்மன் என்றால் நான்முகனைக் குறிக்கின்றது. இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே (மரணத்திற்கு ஒத்திகை போன்றது) சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்) என்றுசொல்லலாம். இத்தொழிலைச் சிவபெருமானின் பெருங்கருணையால் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள்.
பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளைதான். அதனால்தான், பிரம்ம முகூர்த்ததில் திருமணம் செய்வது, புதுமனை புகுவது போன்ற நல்ல செயல்கள் நடைபெற ஏற்ற நேரமாக இருக்கிறது. இந்நேரத்தில் எழுந்து குளித்து இறை வழிபாட்டைச் செய்து, நமது வேலைகளைச் செய்யத் துவங்கினால், அன்று முழுவதும் உடலும், உள்ளமும் உற்சாகத்துடன் இருக்கும். பிரம்ம முகூர்த்த வேளையில் எழுவதும், படிப்பதும் நல்ல பலனைத் தரும். பெண்கள், அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவதன் மூலம் பிரம்ம முகூர்த்த வேளையின் பலன்களைப் பெறுகிறார்கள். பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் அனைத்து வளங்களையும் பெறமுடியும் என்பது நம்பிக்கை.
இதேபோல், உபாசனைக்குக் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது. மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப்படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் செபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கும் என்கிற நம்பிக்கையும் உள்ளது. இந்து சமயப் புராணங்களில் வரும் ரிஷிகள், முனிவர்கள் ஆகியோர் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து, தியானங்களை மேற்கொள்வதும் இதனடிப்படையில்தான் என்கின்றனர்.