சாபங்கள் பல வகைகளாக இருக்கின்றன. அவற்றுள் சில இங்கே;
பெண் சாபம்
இது எப்படி ஏற்படுகிறதென்றால், பெண்களை ஏமாற்றுவதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.
பிரேத சாபம்
இறந்த மனிதனின் உடலை வைத்துக் கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதிச் செயல்களைச் செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும், பிரேதச் சாபத்தை ஏற்படுத்தும். பிரேதச் சாபத்தால் ஆயுள் குறையும்.
பிரம்ம சாபம்
நமக்கு வித்தை கற்றுக் கொடுத்தக் குருவை மறப்பது, வித்தையைத் தவறாகப் பயன்படுத்துவது, மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.
சர்ப்ப சாபம்
பாம்புகளைத் தேவையின்றிக் கொல்வதாலும், அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டுத் திருமணத் தடை ஏற்படும்.
பித்ரு சாபம்
முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய திதி மற்றும் தர்ம செயல்களைச் செய்யாமல் மறப்பதும், தாய்-தந்தை, தாத்தா-பாட்டி போன்றோரை அலட்சியப்படுத்துவதும், அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்து போவது போன்றவற்றை ஏற்படுத்தும்.
கோ சாபம்
பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது, கன்றுடன் கூடியப் பசுவைப் பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ, வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.
பூமி சாபம்
ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், மக்காதப் பொருட்களைப் போட்டுப் புதைப்பதும், தேவையற்றப் பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமி சாபம் நரக வேதனையைக் கொடுக்கும்.
கங்கா சாபம்
பலர் அருந்தக்கூடிய நீரைப் பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.
விருட்ச சாபம்
பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். விருட்ச சாபத்தினால் கடன் மற்றும் நோய் உண்டாகும்.
தேவ சாபம்
தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.
ரிஷி சாபம்
இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.
முனி சாபம்
எல்லை தெய்வங்கள், மற்றும் சின்னச் சின்னத் தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும், பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.
குலதெய்வ சாபம்
இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒருபோதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவிதத் துக்கம் சூழ்ந்து கொள்ளும்.
சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும். தீயவர்களை அழிக்கும். எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒருபோதும் அழிக்க முடியாது. ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறி எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் அழித்துவிடும்.