கல்விக்கடவுளாக நாம் போற்றும் சரஸ்வதி என்பதில் ”சரஸ்” என்றால் பொய்கை என்றும், “வதி” என்றால் வசிப்பவள் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. அதாவது, சரஸ்வதி என்பது மனம் என்னும் பொய்கையில் வசிப்பவள் என்று சொல்லப்படுகிறது. சரஸ்வதி என்றால் பேச்சின் அதிபதி அல்லது பேச்சைத் தருபவள் என்று பொருள். சரஸ்வதி என்பதன் இன்னொரு பொருள் ஈரத்தன்மையுடையவர் என்பதாகும்.
பூஜை என்பது பூஜா என்பதில் இருந்து பிறந்தது. ”பூ”என்றால் பூர்த்தி. ”ஜா”என்றால் உண்டாக்குவது. தான் என்ற அகங்காரம்,அடுத்தவனை விட நன்றாக இருக்க வேண்டுமென்ற பொறாமை, உலகவாழ்வு நிரந்தரமானது என்ற எண்ணம் ஆகியவை மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இதையேச் சைவ சித்தாத்தத்தில் கர்மா, மாயை என்கிறார்கள். இதை அகற்றி ஞானத்தை உண்டாகச் செய்வதே பூஜை. சரஸ்வதி கல்வியாகிய ஞானத்தை தருபவள் என்பதால், அவளது விழாவை மட்டும் பூஜை என்ற அடைமொழி இணைந்தது.
சரஸ்வதி ஞான வடிவானவள்.ஞானம் எங்கிருக்கிறதோ அங்கே அடக்கம் இருக்கும்.பிரம்மனின் படைப்புகள் முதன் முதலில் பேசும் திறன் இல்லாமல் கிடந்தன. அதன் பின்னர், பிரம்மன் சரஸ்வதியை வேண்ட சரஸ்வதி அன்னை அருள்பாலித்தாள். அதன் பின்னரே பிரம்மனின் படைப்புகள் பேசும் திறனைப் பெற்றன.
சரஸ்வதி அணிந்துள்ள ஆடையின் நிறம் வெள்ளை. வானவில்லின் ஏழு வண்ணங்களில் சேராத வெள்ளையைச் சரஸ்வதிக்கு மட்டும் சாத்துவர். தூய வெள்ளை ஆடை அணிபவர்களுக்குத் தனி மரியாதை உண்டு. கற்றவர், மரியாதைக்குரியவர் என்பதை எடுத்துக்காட்டவே, கல்வி தெய்வமான சரஸ்வதியும் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறாள். வெள்ளை என்பது மாசுமருவற்றது. ஒருவன் கற்ற கல்வியும்,மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது. நன்மையும் தீமையும் கலந்து இருக்கும் இந்த உலகத்தில் அழுக்கே இல்லாதக் கல்வியைத் தேர்ந்தெடுத்து, கற்க வேண்டும் என்பதையே அவளுக்குரிய வெள்ளை நிறம் உணர்த்துகிறது. வெள்ளை நிறத்தில் மட்டும் ஒளி ஊடுருவும். இதனால் தான் சரஸ்வதி தேவி நிர்மலமான ஸ்படிகத்தால் ஆன மாலையை அணிந்திருக்கிறாள். சரஸ்வதிக்கு ‘கலைமகள்’ என்ற பெயர் உண்டு. கலை என்றால் வளர்வது. கல்வியும் படிக்க படிக்க வளர்ந்து கொண்டே போகும். படிப்பு தவிர, பாடல், நாடகம், இசை போன்ற கலைகளையும் சரஸ்வதி தேவி நமக்குச் சிறப்புறக் கிடைக்க அருள் செய்கிறாள்.