ராகு கேது வழியாக ஏற்படும் துன்பங்கள், பிரச்சனைகள் நீங்க துர்க்கை வழிபாடு செய்தால் போதுமானது. மேலும், சிக்கல்கள் தீர ஒவ்வொரு கிழமைகளிலும் துர்க்கை வழிபாடு செய்தாக வேண்டும்.
ஒவ்வொரு கிழமையிலும், எந்த நேரத்தில், எப்படி வழிபாடு செய்ய வேண்டும்? என்பது பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
ஞாயிறு
ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னிதியில் மாலை 4.30 - 6.00 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும். சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.
திங்கள்
திங்கள்கிழமைகளில் காலை 7.30 - 9.00 மணிக்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும், வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும் என்பதும் நம்பிக்கை.
செவ்வாய்
ராகு கால நேரமான மாலை 3.00 - 4.30 மணிக்குள் வடக்கு முகமாகத் தீபமேற்றி, தக்காளிச் சாதம் நைவேத்தியம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தைப் பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
புதன்
மதியம் 12 முதல் 1.30 மணிக்குள் பஞ்சில் திரி செய்து விளக்கேற்றிப் புளியோதரை நைவேத்தியம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும் என்பதுடன் ரத்த சம்பந்தமான நோய் தீரும் என்பதும் நம்பிக்கை.
வியாழன்
வியாழக்கிழமைகளில் மதியம் 1.30 - 3.00 மணிக்குள் விளக்கேற்றி, எலும்மிச்சம்பழம் சாதம் நைவேத்தியம் செய்து, வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
வெள்ளி
வெள்ளிக்கிழமைகளில் ராகு கால நேரமான காலை 10.30 -மதியம் 12.00 மணிக்குள் துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்றக் காலம். எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து விட்டு, அதைக் குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய்ச் சாதம் அல்லது பாயாசம் நைவேத்தியம் செய்ய வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்யப் பலம் பெருகும் என்பது நம்பிக்கை.
சனி
காலை 9.00 -10.30 மணிக்குள் மஞ்சள்துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர். சிறுநீரகக் கோளாறு நீங்கும் என்பது நம்பிக்கை.