ஐயப்பன் வழிபாட்டில் சிறப்புடையதாகக் கருதப்படும் ‘பதினெட்டு படிகள்’ நல்வாழ்க்கைக்கு வழிகாட்டும் நிலைகள் என்பதை உணர்ந்திட வேண்டும். அவை;
1. விஷாத யோகம்
பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம் எனும் முதல் படி.
2. சாங்கிய யோகம்
இறைவனே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாவது படி.
3. கர்மயோகம்
பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி.
4. ஞான கர்ம சன்னியாச யோகம்
பாவம், புண்ணியங்கள் பற்றிக் கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்று கொள்ளாமல், இறைவனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம் படி.
5. சன்னியாச யோகம்
நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது ஐந்தாம் படி.
6. தியான யோகம்
கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர, அவைகளின் போக்குகளுக்கெல்லாம் நாம் போய் விடக்கூடாது. இதுவே ஆறாவது படி.
7. ஞானம்
இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான். எல்லாமே கடவுள்தான் என உணர்வது ஏழாவது படி.
8. அட்சர பிரம்ம யோகம்
எந்நேரமும் இறைவனைப் பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவது படி.
9. ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம்
கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத் தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது ஒன்பதாம் படி.
10. விபூதி யோகம்
அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீகக் குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம் படி.
11. விஸ்வரூப தரிசன யோகம்
இறைவனில் உலகத்தையும், உலகில் இறைவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வது பதினொன்றாம் படி.
12. பக்தி யோகம்
இன்பம் - துன்பம், விருப்பு - வெறுப்பு, ஏழை – பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.
13. ஷேத்ரக்ஞ விபாக யோகம்
எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல் பதின்மூன்றாம் படி.
14. குணத்ர விபாக யோகம்
பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்குப் பாத்திரமாவதே பதினான்காம் படி.
15. தெய்வாசுர விபாக யோகம்
தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக் கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.
16. சம்பத் விபாக யோகம்
இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி.
17. சிரித்தாத்ரய விபாக யோகம்
சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாவது படி.
18. மோட்ச சன்யாச யோகம்
யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையேச் சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையேச் சரணடைவது பதினெட்டாம் படி.
மேற்காணும் பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால், நமக்கு வேண்டிய அனைத்தையும் இறைவன் தந்தருள்வார் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.